லியோ டால்ஸ்டாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/டால்ஸ்டாயின் கடைசி நூல்

விக்கிமூலம் இலிருந்து

டால்ஸ்டாயின் கடைசி நூல்

னித நேய மகான் லியோ டால்ஸ்டாய், தனது எழுத்துப் பணிகளால், இலக்கியச் சேவைகளால் ருஷ்ய நாட்டில் மட்டுமன்று; உலகம் முழுவதுமே புகழ்பெற்றிருந்தார். பெற்ற பெருமைக்கு ஏற்றவாறு அவருக்கு வேறு பல சமுதாயத் தொண்டுகளும், நாட்டுப் பணிகளும் அதிகரித்து வந்தன.

இதற்கிடையில் உலகம் முழுவதுமுள்ள பேரறிஞர்கள், கல்விமான்கள், சமுதாய நற்பணியாளர்களும் நாள் தோறும் அவரைச் சந்தித்து ஆறுதலும், தேறுதலும், வாழ்த்துக்களும் நேரில் கூறினார்கள். வர இயலாத அவருடைய வாசகர் பெருமக்கள், கடிதங்களை எழுதிக் குவித்து அவரை உற்சாகப்படுத்தினார்கள். ஆனாலும், அவரது வயோதிகம் அவரைத் தளர வைத்த படியே நகர்ந்தது.

இத்தகைய வயோதிகப் பருவத்திலும், டால்ஸ்டாய் தனது இலக்கியப் பணியைக் கைவிடவில்லை. அவருடைய ஆன்மிக வலிமையும், இலக்கியப் பற்றின் வேகமும் அதிகரித்த படியே இருந்தது. இதன் காரணமாக, அவர் தனது இறுதி நூலான, “எ சைக்கின் இன் ரிடிங்” என்ற புத்தகத்தைப் பல தொல்லைகளுக்கு இடையே எழுதி முடித்தார்.

“இந்தப் புத்தகத்தில், சமுதாயத்தில் உள்ள ஏற்றத் தாழ்வுகளுக்கு என்ன காரணம்? சிலர் எல்லாவற்றையும் அனுபவித்து வாழும் நிலையை உருவாக்கிக் கொள்ளும் போது, பலர் உண்ண உணவின்றி, செய்ய வேலையின்றி, குடியிருக்க வீடின்றி வாடிக் கொண்டிருக்கும் நிலைகள் இருப்பது ஏன்? இந்த சமுதாயத் தேவைகளை எப்படித் தீர்ப்பது? என்ற கேள்விகளை எழுப்பி, அந்த வினாக்களுக்குரிய விடைகளையும் தெளிவு படுத்தியுள்ளார்.

வாழும் மக்கள் அனைவருக்கும் பசிக்கு உணவும், மானத்தைக் காத்துக் கொள்ள சாதாரண உடைகளும், இயற்கையின் சீற்றங்களுக்கப் பலியாகாமல் தங்களைக் காத்துக் கொள்ள படுக்க உறைவிடமும் பொதுவான வாழ்க்கை உரிமைகள். இந்தத் தேவைகளை எந்த அரசும் உடனடியாகச் செய்யாவிட்டால் அது கொடுங்கால் ஆட்சியே தவிர வேறு என்ன பெயரிடலாம்? என்றும் டால்ஸ்டாய் மக்கள் உரிமைகளுக்காக அந்தப் புத்தகத்திலே வாதாடியிருக்கிறார்!

டால்ஸ்டாய் தான் எழுதியுள்ள உலகம் போற்றும் புத்தகங்களான “போரும் அமைதியும், ஆன்ன கரீனா, க்ரூசர் சோனாடா” போன்ற மற்றும் பல நூல்களைப் பற்றி, என்றுமே தன்னைத்தானே புகழ்ந்து கொண்டதே இல்லை. நான் எழுதிய அவற்றையெல்லாம் மக்கள் மறந்து விடுவார்கள். ஆனால், “இந்தப் புத்தகம் எனக்குப் பிறகும் வாழும்”, என்று “ஏ சைக்கிள் இன் ரீடிங்” என்ற நூலினைப் பற்றி குறிப்பிடுகிறார். இந்த நூல் இயற்றியதைத் தவிர, வேறு நற்பணிகளைச் செய்ய அவர் உடல் இடந்தரவில்லை. தமது கொள்கையினைப் பற்றின சிந்தனையிலேயே அவர் லயித்தார்.

நாடெங்கிலும் இன்று இயேசு பிரானைப் பின்பற்றும் பாதிரிமார்கள் நடத்தும் பள்ளிகளையும் நாம் பார்க்கின்றோம். இயேசு சபைகள் தோன்றுவதற்கும், அதனைச் சார்ந்த மத குருமார்கள் ஆற்றிவரும் மதப் பணிகளுக்கும் காரணமாக இருப்பதும் ஒரு புத்தகம் தான்.

இந்த இயேசு சபைகளை உருவாக்குவதற்குக் காரணமாக இருந்தவர் இஞ்ஞாசியார் என்பவராவார். அவர் ஒரு போர் முனை வீரர். உலகையே ஆட்சி புரிகிற ஓர் உயர்ந்த வீரனாக வரவேண்டும் என்று ஆசைப்பட்டவர் அவர்.

ஒரு முறை அவர் எதிரிகளோடு போர்முனையில் யுத்தத்தில் ஈடு பட்டிருந்தபோது காலில் குண்டு பாய்ந்து மருத்துவ மனையிலே சேர்க்கப்பட்டு தனது காலில் பாய்ந்த குண்டை வெளியே எடுப்பதற்கு அறுவைச்சிகிச்சை செய்து கொண்டார். அப்போது மருத்துவமனையில் பொழுது போக்குவது எப்படி என்று புரியாத நிலையில் அந்தப் புத்தகத்தை எழுதினார். அந்த நூல் தான் இயேசு மதத் தொண்டுகளை உலகிலே பரப்பிடக் காரணமாக அமைந்தது.

அது போலவே டால்ஸ்டாய் ஒரு போர் முனைவீரர்தான். ஆனால் இஞ்ஞாசியாருக்கும் அவருக்கும் ஒரே ஓர் வித்தியாசம் காணப்பட்டது. ஜார் மன்னனது ஆட்சிக் கொடுமைகளை எதிர்த்து தனது நாட்டு மக்களை எப்படி வாழவைப்பது என்று யோசித்தபோது, அவரது அனுபவத்தாலும், தாய் நாட்டுப் பற்றாலும், மக்களுடைய மானிதாபி மானத்தாலும் அவருக்குண்டான எழுச்சிதான் ‘எ சைக்கிள் இன் ரீடிங்’ என்ற புத்தகமாகும். அதனால்தான் அவர் எழுதிய இந்த நூல் அவருக்கு மன நிறைவைத் தந்ததுடன், இந்த நூல் எனக்குப் பிறகும் வாழும் என்று அவரே குறிப்பிட்டிருந்தார். அத்தகைய ஒரு சமுதாய மறுமலர்ச்சி நூலாக அது அமைந்தது எனலாம்.

இந்த அரும் பெரும் நூலை எழுதி முடித்த பின்பும் கூட, அவரது மனைவியும், பிள்ளைகளும் டால்ஸ்டாயின் கொள்கைக்கு நேர்விரோதமாக, மீண்டும் நடக்க ஆரம்பித்து விட்டார்கள். எனவே, வீட்டை விட்டு வெளியேறுவது என்ற தனது முடிவுக்கு மீண்டும் அவர் தள்ளப்பட்டார். இருந்தும் கூட, தாம் வீட்டை விட்டு வெளியேறி விட்டால் தனது குடும்பம் வீணாகிவிடுமே, மனைவியும் மக்களும் மனம் வருந்தும் நிலை ஏற்பட்டுவிடுமே என்று அஞ்சி அவர் தயங்கினார். வீட்டிலே மேலும் மேலும் நெருக்கடிகள் விளைந்தால், அதற்குப் பிறகு ஒரேயடியாக வெளியேறி விடுவது என்றும் தீர்மானித்தார்.

டால்ஸ்டாய் தனது மனைவிக்கு 1897-ஆம் ஆண்டிலே ஓர் அஞ்சல் எழுதினார். ஆனால் அக் கடிதம் அவருக்கு அனுப்பப்படவில்லை. “நான் இறந்து விட்ட பிறகு இக் கடிதத்தை அவளிடம் அனுப்புங்கள்” என்று அந்தக் கடிதத்தின் மேல் அவர் எழுதியிருந்தார்.

“அன்புள்ள சோன்யா,

எனது கொள்கைக்கும், என் வாழ்க்கைக்கும் இடையே உள்ள முரண்பாடுகள் எனக்கு வருத்தந்தான் அளிக்கின்றது. இந்த முரண்பாட்டிற்கு என்ன காரணம்? நீதான்! அதைக் கைவிடுமாறு நான் உன்னை இப்போது வற்புறுத்த முடியாது.

ஏனென்றால், இந்த மனப் போக்கில் உன்னைப் பழக்கப்படுத்தியவன் நான்தான். நம்முடைய பிள்ளைகள் சிறுவர்களாக இருந்தார்கள். அவர்களது போக்கை கட்டுப்படுத்த வேண்டும் விரும்பியதுண்டு. நானும் தலையிட விரும்பவில்லை. ஆனால், நான் தலையிட்டிருந்தால், உனக்கு வருத்தமாக இருக்குமே!

அந்த அச்சம் தான் எனக்குப் பதினாறு ஆண்டுகளாக உன்னோடு சண்டையையும், சச்சரவையும் உருவாக்கி விட்டது. உனக்குக் கோபத்தை மூட்டிக் கொண்டிருக்கும் இந்தக் குடும்ப வாழ்க்கையை, நான் நீண்ட காலம் ஏற்க முடியாது.

இப்போது நான், எனது நீண்ட நாளைய விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ள முடிவு செய்து விட்டேன். உங்களை எல்லாம் விட்டு விட்டு, அதாவது துறவு பூண்டு செல்ல வேண்டும் என்பதே அந்த விருப்பமாகும்.

இதற்குக் காரணங்கள் பல உண்டு. வயத ஏற ஏற வாழ்க்கை எனக்கு மிகவும் வேதனையைத்தான் உண்டாக்கி வருகிறது என்பதே முதல் காரணம். தனிமையில் வாழ வேண்டும் என்ற விருப்பம் அதிகமாகி வருகிறது. நமது பிள்ளைகள் எல்லோரும் நன்றாக வளர்ந்து விட்டார்கள். இனி நான் அவர்களைக் கண்காணிக்க வேண்டிய அவசியமல்லை.

உங்களது உள்ளத்தைக் கவர எவ்வளவோ விஷயங்கள் தோன்றியுள்ளன என்பது இரண்டாவது காரணம். இவை போன்ற எண்ணங்களால் எனது துறவு உனக்குத் துன்பமாய் இராது.

இந்துக்கள் அறுபதாம் வயதில் காட்டுக்குச் சென்று, வயோதிக வயதில் அவர்கள் ஒவ்வொருவரும் தங்களது கடைசி நாட்களைக் கடவுள் சிந்தனையில் கழிக்க ஆசைப்படுகிறார்கள். அவர்கள் அந்த நாட்களை விளையாட்டிலும், வம்படிப் பேச்சிலும் வீணாகக் கழிக்க விரும்புவதில்லை. ஆகையால் எழுபது வயதை அடைந்த நான் அமைதியையும் தனிமையையும் காண விரும்புகிறேன்.

“என் வாழ்க்கையை நான் எனது எண்ணத்தின் படி வாழ முடியாவிட்டாலும் கூட, நான் வாழும் முறைக்கும் எனது அறநெறிகளுக்கும் இடையில் அதிகமான வித்தியாசம் இருப்பதை நான் விரும்பவில்லை.

“என்னுடைய இந்த நோக்கத்தை நான் வெளிப்படையாகக் கூறினால் எல்லோரும் என்னிடம் கெஞ்சிக் கூத்தாடி, மன்றாடி எனது லட்சியத்தைத் தடை செய்ய நினைப்பார்கள். அந்தத் தடை எனது குறிக்கோளைப் பலவீனப் படுத்து வதாகவும் அமையலாம்.”

“எனவே, என்னுடைய இந்தச் செயல்களால் உங்களுக்குத் துன்பம் ஏற்பட்டால், நீங்கள், குறிப்பாக, நீ என்னை மன்னிக்க வேண்டும். நான் துறவு போவதை நீங்கள் சந்தோஷத்துடன் அனுப்பி வைக்க வேண்டும். எங்கும் என்னைத் தேட வேண்டாம், என் மேல் எந்த விதமான குற்றங்களையும் கூற வேண்டாம்.”

“நான் உங்களைத் துறந்து போவதால், உங்கள்மீது எனக்கு எந்தவிதக் கோபமும் இல்லை நான் எந்தக் குறிக்கோளோடு, கண்ணோட்டத்தோடு உலகத்தைப் பார்க்கிறேனோ, அந்தப் பார்வையோடு நீங்கள் உலகத்தைக் காண முடியாது; புரிந்து கொள்ள முடியாது என்று எனக்குத் தெரியும்.”

“இதே காரணத்தால், நீ உனது வாழ்க்கைப் போக்கை மாற்றிக் கொள்ள முடியாது. இதற்காக, நீ எந்தத் தியாகமும் செய்ய முடியாது; அதைப் பற்றி உன்னால் நினைத்துக் கூடப் பார்க்க முடியாது. அதற்காக நான் உன்னைக் குற்றம் சாட்டமாட்டேன். ஆனால், நாம் இருவரும் கணவன் மனைவியாக வாழ்ந்து முப்பத்தைந்து ஆண்டுகளை நன்றியுணர்வோடும், அன்புணர்வோடும் நினைவு கூர்கிறேன்.”

“உனது வாழ்க்கையின் படி. நீ என்றுடன் உனது பணிகளை மிகவும் உறதியாக நிறைவேற்றிய வாழ்க்கையின் தொடக்கக் காலத்தையும் நான் மறக்க முடியாது. உன்னால் முடிந்ததை எல்லாம் நீ அப்போது என்னுடன் உலகத்துக்குச் செய்தாய். அதை எவ்வளவு புகழ்ந்தாலும், போற்றினாலும் தகும்.”

“ஆனால், வாழ்க்கையின் பிற்பகுதியில், கடந்த பதினைந்து ஆண்டுகளாய் நம் இருவருக்குள் அதிக வேற்றுமை ஏற்பட்டு விட்டது. அதற்குத் தவறு என்னுடையது என்று கூற முடியாது. ஏனெனில், நான் எனக்காகவோ, மற்றவர்களுக்காகவோ மாறவில்லை. எனது இயற்கை உணர்ச்சிகளில் ஏற்படும் மாறுதல்களை என்னால் தடுக்க முடியாது. நீ என்னோடு, என்னைப் போல மாறவில்லையே என்று உன்னைக் குறை கூறவும் விரும்பவில்லை நான்.”

அதற்குப் பதிலாக, நான் உனக்கு நன்றி கூறுகின்றேன். உன்னை அன்புடன் நினைவு கூருகின்றேன். நீ எனக்கு அன்போடு வழங்கியவற்றை நான் ஒரு போதும் மறக்கவோ, மறுக்கவோ மாட்டேன்.”

அன்புள்ள சோன்யா, இறுதி வணக்கம்.
உன் அன்புள்ள
லியோ டால்ஸ்டாய்

இதே போன்ற இன்னொரு கடிதத்தையும் 1910-ஆம் ஆண்டில் டால்ஸ்டாய் தனது இல்லத்தரசிக்கு எழுதினார். வீட்டைத் துறந்து வெளியேறுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்னால், அவர் தனது எண்ணத்தை அவரது நம்பிக்கைக்குரிய ஒரு குடியானவ நண்பருக்கும் தெரிவித்தார். அந்த நண்பரின் பெயர், மைக்கேல் நோவி கோப் என்பதாகும். அந்த நண்பருக்கும் கீழ்க் கண்டவாறு ஒரு கடிதம் எழுதினார்.

“அன்புள்ள நண்ப,

“அன்று நான் தங்களிடம் கூறியது குறித்து ஒரு வேண்டுகோள். உண்மையாகவே நான் உம்மிடம் வந்தால் எனக்குத் தவறாமல் ஒரு குடிசையைத் தங்கியிருக்கத் தருவாயா? அக் குடிசை எவ்வளவு சிறியதாக இருந்தாலும் தருவாயா நண்பா?”

இன்னொரு விஷயம், உனக்கு ஏதாவது நான் தந்தி அனுப்பும் நிலை வருமானால், என் பெயரை எழுதாமல், ‘டி, நிகோலீப்’ என்று குறிப்பிட்டே அனுப்புவேன். நினைவு வைத்துக் கொள். இந்த பெயர் நம் இருவருக்கு மட்டும் தெரியுமே தவிர, வேறு யாருக்கும் இது தெரியக்கூடாது.”

டால்ஸ்டாய் 1910-ஆம் ஆண்டு நவம்பர் மாதம், பத்தாம் நாள் தனது வீட்டை விட்டு வெளியேறுவது என்று முடிவு செய்து விட்டார். அன்று விடியலில் எழுந்தார். பயணத்திற்கான எல்லா ஏற்பாடுகளையும் அவர் அவசரமாகச் செய்தார். முதலில் தனது மனைவிக்கு ஒரு கடிதத்தை வரைந்தார்.

“சோன்யா, நான் உன்னை விட்டுப் பிரிவதால் உனக்கு வேதனையாகவே இருக்கும்” என்பதை நினைக்க எனக்குக் கவலையாகவே இருக்கிறது. என் செய்ய? இதற்கு மாறாக என்னணவோ, நம்பவோ, செய்யவோ என்னால் ஏதும் முடியவில்லை. வீட்டில் எனது நிலை பொறுக்க முடியாததாகிவிட்டது.”

“இதுவரை வாழ்ந்து வந்த போக வாழ்க்கையை நான் இனியும் பின்பற்ற இயலாது. என்னை யொத்த வயதுடைய கிழவர்கள், சாதாரணமாகச் செய்யக் கூடிய அதே காரியத்தை நானும் செய்கிறேன். அதாவது, உலக வாழ்க்கையை விடுத்து நான் விலகிப் போகிறேன் எனது மீதி நாட்களை அமைதியாகக் கழிக்க எண்ணுகிறேன்.”

“அன்பு கூர்ந்து எனது கருத்தைத் தெளிவாகப் புரிந்து கொள். நான் இருக்கும் இடம் தெரிந்தாலும், நீ என்னிடம் எக் காரணம் கொண்டும் வர வேண்டாம். அப்படி நீ வந்தால், உனக்கும் எனக்கும் உள்ள ஒட்டும் உறவும் மிக இழிவானதாகி விடும். எனது லட்சியத்தை எவருக்காகவும் நான் விட்டுக் கொடுக்க இணங்கேன்.”

‘என்னோடு மனைவியாக, இல்லத்தரசியாக, முறையாக நாற்பத்தைந்து ஆண்டுகள் வாழ்க்கையை நடத்தியதற்காக நான் நன்றி கூறிக் கொள்கிறேன். ஏதாவது தவறுகள் இருந்தால் மன்னித்துவிடு. அதனைப் போலவே என்னிடம் குறைகள் ஏதாவது கண்டிருந்தால் அக்குறைகளை நீயும் மறந்து மன்னித்துவிடு. நானும் மறந்து மன்னித்து விடுகிறேன்.”

“என்னைப் பிரிந்த பின் ஏற்படுகின்ற சூழ்நிலைய மகிழ்ச்சியோடு ஏற்குமாறு நான் உனக்கு யோசனை கூறுகிறேன். எனக்குக் கடிதம் எழுத எண்ணினால் சேஷாவிடம் கூறு. நான் இருக்கும் இடம் அவளுக்குத் தெரியும். ஆனால்; அதை அவள் உன்னிடம் கூறமாட்டாள்.”

-டால்ஸ்டாய்

பின் குறிப்பு:

“என் கைப் பிரதிகளையும், மற்றப் பொருள்களையும் திரட்டி அனுப்பும்படி சேஷாவிடம் கூறியுள்ளேன்.

டால்ஸ்டாய் தான் எழுதியக் கடிதத்தை முடித்தார். பிறகு அவரது மகள் சேஷாவையும், நண்பர் டாக்டர் மெகோவிட்ஸ்கியையும் எழுப்பினார். மூவரும் துணி மூட்டைகளைக் கட்டிக் கொண்டார்கள். பிறகு, அவரும் டாக்டரும் ஒரு வண்டியில் ஏறினார்கள். சைகீனோ என்ற ரயில்வண்டி நிலையத்துக்குச் சென்றார்கள். தங்களைப் பின் தொடர்ந்து யாராவது வருகிறார்களோ என்ற அச்சத்துடன் ரயில் ஏறினார்கள்.

டால்ஸ்டாய் உள்ளம் இப்போதுதான் அமைதி பெற்றது. துறவு நியாயமான ஒரு செயலே என்பதை உணர்ந்தார். அதே நேரத்தில், அவருக்குத் தனது மனைவி மீது இரக்கம் சுரந்தது.

அன்று மாலை டால்ஸ்டாய் ஆஷ்டின் என்ற மடத்தைச் சேர்ந்தார். அங்கு அவருடைய தங்கை மேரி பெண்துறவியாகப் பணியாற்றிக் கொண்டிருந்தாள் தமையனை தங்கை மிகவும் மகிழ்ச்சியுடன் வரவேற்றார். பிறகு அங்கிருந்தும் அவர் புறப்பட்டு விட்டார்.