லியோ டால்ஸ்டாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/மரணதண்டனை கொடுமையான அநீதியே!

விக்கிமூலம் இலிருந்து
மரணதண்டனை கொடுமையான அநீதியே!

ருஷ்யாவின் தென் பகுதியிலே உள்ளது சாகஸஸ் என்ற மாநகர். படிப்பை முடித்து விட்ட டால்ஸ்டாயின் மூத்த சகோதரர் நிகோலஸ் அந்நகர் ராணுவத்திலே பணியாற்றி வந்தார். 1851-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அவர் விடுமுறை எடுத்துக் கொண்டு சொந்தக் கிராமத்திற்கு தனது தம்பியைப் பார்க்க வந்திருந்தார்.

தம்பி டால்ஸ்டாய் எந்த வேலையும் செய்யாமல் வீட்டோடு விரக்தியாக இருப்பதை நிக்கோலஸ் கண்டார். நடனம், நாடகம் என்று தலைகால் தெரியாமல் அவர் மூழ்கிக் கிடப்பதையும், மிருகங்களை வேட்டையாடிக் கொன்று கொண்டிருப்பதையும், அளவுக்கு மீறிய இன்ப கேளிக்கைகளில் மிதந்து கொண்டிருப்பதையும் அவர் நேரிலே பார்த்தார். வேதனைப் பட்டார்! டால்ஸ்டாயின் மனம் கெட்டுப் போனதையும் உடல் சீரழிந்ததையும் கண்டு மனம் குன்றினார்!

டால்ஸ்டாயின் இந்தத் தீய குணங்களையும், அவரது தீய நண்பர்களின் தொடர்புகளையும் ஒழித்து அவரை எவ்வாறு திருந்துவது என்று யோசித்த போது அவரது தமையனார் ஒரு முடிவுக்கு வந்தார். நிக்கோலஸ் விடுமுறை கழிந்து மீண்டும் ராணுவ சேவைக்குப் போகும். போது டால்ஸ்டாயைத் தன்னுடன் காக்கசஸ் மலைப்பகுதிக்கு அழைத்துக் கொண்டு போனார்.

காக்கஸஸ் மாநிலத்திலே வாழும் மக்களுக்கு கஸ்ஸாக்குகள் என்று பெயர். அவர்கள் மலைவாழ் மக்கள். கள்ளம் கபடமறியாத சூதுவாதற்ற ஜனங்கள் எளிமையாக வாழ்பவர்கள். அவர் பார்வை பாயும் மலைப்பகுதி இடங்களில் எல்லாம் பசுமைத் தோற்றங்களே அழகுக்கு அழகாகத் தோற்றமளித்தன.

இத்தகைய ஓர் அருமையான இடத்திலேதான் ‘ஸ்டாரியும்’ என்ற ஒரு குன்றம் சூழ்ந்த நகர் இருந்தது. அந்த இடத்திலேதான், ருஷ்ய நாட்டிலே உள்ள நோய்வாய்ப்பட்டோர் மலை சுவாச ஆரோக்கிய வாழ்வுக்காக வந்து தங்குவார்கள். காரணம், அப்படிப்பட்ட இயற்கை சூழ்ந்த ஒரு பிரதேசம் அது.

இந்த இடத்தைக் கண்ட டால்ஸ்டாய் அங்கேயே தங்கி விடலாம் என்ற முடிவுக்கு வந்தார். இதை தம்பியிடமிருந்து அறிந்த நிகோல்ஸ், அவரை, அங்கேயே தங்கியிருக்குமாறு கூறி விட்டுத் தனது வேலைக்குச் சென்றார்.

டால்ஸ்டாய் அங்கே ஒரு குடிசையை வாடகைக்கு எடுத்துக் கொண்டு தங்கினார். எளிய வாழ்க்கை வாழ்ந்ததுடன், அங்கிருந்தே தனிமையாக தனது படிப்பைத் தொடங்கினார்! அவர் மிகவும் சுறுசுறுப்பாகவும் விறுவிறுப்பாகவும் ஓடியாடி குதுகலமாக இருந்தார் பொழுதும் நாளும் போவது தெரியாமலேயே இயற்கைக் காட்சியின் அழகுகளை ரசித்த வாறே நாட்களை ஓட வைத்தார்!

ஆனால், வேலை ஏதுமில்லாமல் காலம் தள்ளுவது வாலிபத்துக்கு அழகா? என்று மனம் கலங்கினார்!

அண்ணன் நிக்கோலஸ் தம்பியைப் பார்த்துப் போக மீண்டும் அங்கே வந்தார். தம்பியின் மன உளைச்சலைக் கேட்டு ஆறுதல் கூறினார். அதனால், டால்ஸ்டாயையும் ராணுவப் பணியில் சேர்த்து விடுவது என்ற முடிவுக்கு வந்தார்.

அண்ணன் திட்டத்தின் படி டிக்லின் என்ற ராணுவக் கல்லூரியில் டால்ஸ்டாய் சேர்த்து, சில நாட்கள் பயிற்சி பெற்று, தேர்வில் தேறி, பீரங்கிப் படை வீரரானார்!

காக்கசஸ் மலைப் பகுதியில் காசியில் என்ற மலைவாழ் வகுப்பார், வழிப்போக்கர்களையும் ஊரார்களையும் கொள்ளையடிப்பதும், கொலை செய்வதுமாக வாழ்ந்து வந்தார்கள். அவர்களை அடக்குவதற்காக அடிக்கடி சிறுபடைகளை ஜார் அரசு அனுப்பி வைக்கும். அந்தப் படைகளுடன் டால்ஸ்டாயும் அவ்வப்போது அனுப்பப்படுவார்.

காக்கசஸ் போரில் நடை பெறும் கொள்ளை, கொலைகளைக் கண்டு அவர் பதறுவார். அதனால் போர்ப் படையில் தொடர்ந்து பணியாற்றிட அவர் விரும்பவில்லை; உடனே தனது பதவி விலகல் கடிதத்தை சம்பந்தப்பட்ட ராணுவ அதிகாரிகளுக்கு அனுப்பி விட்டார்.

இந்தக் கடிதம் ராணுவ அதிகாரிகள் பார்வைக்குச் செல்லும் முன்பே, கிரிமியா நாட்டுப் பகுதியில் போர் துவங்கப்பட்டு விட்டது. ஆனால் நாட்டுப் பற்று உந்திய டால்ஸ்டாய் மனம், போரிலே இருந்து விலக மறுத்து விட்டதால், அதிகாரிகளை அணுகித் தன்னைப்போர் முனைக்கு அனுப்புமாறு கேட்டுக் கொண்டார். 1854-ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் அவர் செபாஸ்டபூல் என்ற யுத்தக் களத்துக்கு அனுப்பப்பட்டார்.

ஆங்கிலலேயரும், பிரெஞ்சுக்காரரும் செபாஸ்டபூல் கோட்டையைச் சூழ்ந்து போரிட்டுக் கொண்டிருந்தார்கள். ஓராண்டுக்கு மேல் ருஷ்யர்கள் அக்கோட்டை முற்றுகையை எதிர்த்து எதிரிகளுடன் போர் செய்து கொண்டே இருந்தார்கள்.

டால்ஸ்டாய் படைகளுடன் அக் களத்திற்குச் சென்று பகைவர்கள் இடையே புகுந்து தனது படை வீரர்களை எழுச்சிபெறச் செய்து உற்சாகப்படுத்திப் போர் செய்து கொண்டே இருந்தார். வீரர்களே, வெற்றி நமக்கு நிச்சயம், தேசபக்தியுடன் தொடர்ந்து போரில் ஈடுபடுங்கள்; என்று முழக்கமிட்டபடியே களவீரர்களை ஊக்குவித்தார்.

போர் வீரர்களும் ‘நாங்கள் நாட்டுக்காக சாகத்தயார்’ என்ற கூக்குரலோடு டால்ஸ்டாய் முழக்கத்திற்குப் பதில் கூறிக் கொண்டே யுத்தம் செய்தார்கள். இருந்தாலும் யுத்த களத்தின் கோரச் சாவுகள் தளத்தில் எழுந்த தீனக் குரல்களின் முனகல்கள், ரத்தம் தேங்கும் களக் காட்சிகள், கைவேறு கால்வேறு என்று அறுபட்ட அங்கங்களின் துள்ளல்கள், துடிப்புகளைக் கண்டு அவர் மனம் வேதனைப்பட்டு கண்ணீரைச் சிந்தியது.

ருஷ்யர்கள் பெற்ற போர் வெற்றிக்காக ஓரிடத்தில் வீரர்களுக்குப் பாராட்டும் விருந்தும் நடைபெற்றது. என்றாலும், அதில் டால்ஸ்டாய் கலந்து கொள்ளவில்லை. போர் முனைக் காட்சிகளைக் கண்ட அவர் நெஞ்சு; தீராத துயரைப் பெற்றது. அதனால், இரவு பகலாக நெஞ்சம் நெகிழ்ந்து அல்லலுற்றார்.

போர் வீரர்களைப் பலிகொடுத்துவிட்டு, துடிக்கும் அவயவங்களின் துள்ளல் மீது நமக்கு விருந்தா? கேளிக்கைக் கூத்தா? என்று அவர் அந்த வெற்றி விழாக்கூட்டத்தை விட்டே வெளியேறி விட்டார். உடனே, செபாஸ்டபூல் நகருக்குச் சென்று, போரில் படுகாயமடைந்த வீரர்களுக்கு பணிவிடைகளைச் செய்தார். தனது உயிரைப் பணயம் வைத்தே இந்த போர்க்கள உதவிகளைத் துணிந்து செய்தார்.

இந்தப் போர்க்கள வாழ்க்கையை அவர் கட்டுரைகளாக எழுத ஆரம்பத்தார். எப்போது அவர் யுத்தகளப் பணியில் சேர்ந்தாரோ, அன்று முதல் தனக்குள் கிளர்ந்து எழுந்த எண்ண எழுச்சிகளை எழுத்தில் வடிக்கலானார். அப்போது அவர் எழுதிய கட்டுரைகள், அவர் எழுதும் முதல் எழுத்துப் பணியாக உருவெடுத்தன.

இந்த எழுத்துப் பணிகளால் உருவான கட்டுரைகள் ‘சாப்ரோ மேனிக்’ என்ற பத்திரிக்கையில் குழந்தைப் பருவம் என்ற பெயரில் தொடர்ந்து வெளிவரலாயின. டால்ஸ்டாய் கட்டுரைகளைப் பத்திரிகை ஆசிரியர்கள் படித்து, உணர்ச்சி உந்தி அவரும் அவற்றை முதலிடம் கொடுத்து வெளியிட்டார்.

டால்ஸ்டாய் எழுத்துக்களால் உருவான குழந்தைப் பருவக் கட்டுரைகள் தான் அவரை ஒரு உணர்ச்சிமிகுந்த எழுத்தாளராக்கிற்று எனலாம். கட்டுரைகள் தொடர்ந்து பத்திரிகையில் வெளிவந்து கொண்டிருந்ததால், அவருக்கு உற்சாகம் அதிகமாயிற்று. அதனால் ஓய்வு கிடைக்கும் போது எல்லாம் பத்திரிகைக்கு எழுத ஆரம்பித்து விட்டார்.

‘குழந்தைப் பருவம்’ என்ற கட்டுரைகளுக்குப் பிறகு, நிலச்சுவான்தாரின் காலை நேரம், இளம் பருவம், இளமை என்ற கட்டுரைகளைத் தொடர்ந்து எழுதிக் கொண்டே இருந்தார். மக்கள் அவரது கட்டுரைகளைப் படித்து வர வேற்றார்கள். அதனால் அவரது எழுத்தார்வம் மட்டும் மேலும் மேலும் வளர்ந்தது வளர்ந்து கொண்டே வந்தது.

ஒரு பக்கம் குண்டுகள் வெடித்துக் கொண்டே இருக்கும்! மறுபுறம் பீரங்கித் தாக்குதலின் ஓசைகள் கேட்டுக் கொண்டே இருக்கும். அப்போதெல்லாம் டால்ஸ்டாய் செபாஸ்டபூல் கதைகள், என்ற சிறுகதைகளை எழுதிக் கொண்டே இருந்தார். இந்த எழுத்துக்களின் உணர்ச்சிகளை மக்கள் ஆர்வத்துடன் படித்துப் பெரிதும் பாராட்டினார்கள். பொதுவாக ருஷ்ய நாட்டில் லியோடால்ஸ்டாய் என்றால் யார்? எப்படிப்பட்ட ஓர் எழுத்தாளர் என்பதை மக்கள் நன்றாகப் புரிந்துகொள்ளும் நிலை உருவாகிவிட்டதால் பெயரும் புகழும் ஏற்பட்டு விட்டது.

அப்போது இருந்த ரஷ்ய மாமன்னரும், டால்ஸ்டாய் சிறுகதைகளை உணர்ச்சியூன்றிப் படித்து மிகப்பேரானந்தம் கொண்டார். யார் அந்த எழுத்தாளர் எந்தப் போர்ப் படைப் பிரிவிலே அந்த மேதை பணியாற்றுகின்றார்? அபாயகரமான போர் முனைகளுக்கு எல்லாம் அவரை அனுப்பவேண்டாம். என்று அந்த சக்கரவர்த்தி தனது அதிகாரிகளுக்கு ஆணையிட்டார்.

செபாஸ்டபூல் போர் அனுபவங்களைக் குறித்து அறிக்கை ஒன்று தயாரித்து அனுப்புமாறு மன்னன் கட்டளையிட்டுள்ளதாக அதிகாரிகள் டால்ஸ்டாயிடம் தெரிவித்ததை முன்னிட்டு அவர், அரசர் உத்தரவுக்கு ஏற்றவாறு அறிக்கையைத் தயாரித்துக் கொண்டு ருஷ்ய மாமன்னனை நேரில் பார்க்க, செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகருக்குப் புறப்பட்டார்.

சக்கரவர்த்தியைக் காணவந்த டால்ஸ்டாயை ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்து செயிண்ட் பீட்டர்ஸ் பர்க்கில் வரவேற்றார்கள். மன்னர் சார்பில் மாபெரும் பாராட்டுக் கூட்டம் நடந்ததால், அக்காலத்தில் ருஷ்யாவில் புகழ்பெற்ற எழுத்தாளராக இருந்த டர்கெனிவ் என்பவரும் கலந்து கொண்டு டால்ஸ்டாய் எழுத்துக்களைப் பாராட்டினார். அந்தக் கூட்டத்தில் யார் யார் கலந்து கொண்டார்கள் தெரியுமா?

அவரது சிறுகதைகளது உணர்ச்சி வார்ப்படங்களாகக் கொலுவீற்றிருந்த நிலவுடைமையாளர்கள், குடியான விவசாயிகள், பணக்காரப் பிரபுகள், ஏழைகள், எல்லாவற்றுக்கும் மேலான வாசகர்கள் எல்லாருமே கூடி அவரைப் பாராட்டி மகிழ்ந்தார்கள்.

ருஷ்யாவின் புகழ் பெற்ற எழுத்தாளர்கள், அவரவர் இல்லங்களுக்கு லியோ டால்ஸ்டாயை அழைத்துச் சென்று விருந்தளித்தார்கள். இவையனைத்தையும் டால்ஸ்டாய் எதிர்பார்க்கவில்லை. இருந்தாலும், நமது எழுத்துக்கு இவ்வளவு பெரிய வரவேற்பா? என்று டால்ஸ்டாய் ஆச்சரியப்பட்டுப் போனார்.

இவ்வளவு பெரிய மதிப்பும், மரியாதையும் நாட்டில் உருவானதைக் கண்ட டால்ஸ்டாய், தனது ராணுவப் பணியை ராஜிநாமா செய்து விட்டார். அயல் நாடுகளுக்குச் செல்ல ஆசைப்பட்டார். அதற்கு முன்னதாக அவர் தனது சொந்தக் கிராமத்துக்குச் சென்று தங்கி தனது எழுத்துக்களுக்கான கருக்களைச் சிந்தித்தார்.

1857-ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் தனது வெளிநாட்டுப் பயணத்தை மேற்கொண்டார். பாரிஸ் மாநகர் சென்றார். அங்கே அவர் வருகை தருவதைக் கேள்விப்பட்ட வரும், செயிண்ட பீட்டர்ஸ் பர்க் நகரில் நடைபெற்ற டால்ஸ்டாயின் பாராட்டுக் கூட்டவிழாவில் முன்பு கலந்து கொண்டு அவரைப் பாராட்டி மகிழ்ந்த வருமான டர்கெனிவ், டால்ஸ்டாயை மீண்டும் சந்தித்து வரவேற்றார். எழுத்தாளர்கள் இருவரும் சில நாட்கள் பாரிஸில் தங்கியிருந்தார்கள்.

லியோ டால்ஸ்டாய் பாரிசில் தங்கியிருந்த போது. ஒரு மரண தண்டனைக் கைதிக்கு தண்டனையை எவ்வாறு நிறைவேற்றுகிறார்கள் என்பதைக் காணும் வாய்ப்பு ஏற்பட்டது. கைதியை கில்லட்டின் என்ற வெட்டுக் கத்தி முன்பு அழைத்து வந்து அமரவைத்தார்கள். கொடுவாளின் கோரமான ஒலி கேட்டது; அவ்வளவுதான் கைதியின் சிரச்சேதத்தைக் கண்ட அவரது மனம் நடுக்கம் கொண்டது; பதறிப்போனார்! ஐயோ இவ்வளவு பெரிய கொடூரமா? என்று விருட்டென்று எழுந்து வந்து விட்டார். அந்த மரணதண்டனையை நேரில் கண்ட அவர் அதுபற்றி எழுதும் பதட்டத்தைப் பாருங்கள்:

“மரணதண்டனை பெற்ற அந்தக் கைதியின் தலை உடலிலே இருந்து தெறிந்து தனியாக வெளியே வந்து கூடை ஒன்றில் விழுந்ததைக் கண்டேன்! கில்லட் வெட்டரிவாளிலிருந்து ரத்தம் ஒழுகுகிறது; தலை சிதறி விழுந்த இடம் முழுவதும் ரத்தப் பெருக்கு முண்டத்தின் துள்ளல் ரத்தம் தேங்கி ஓடுகின்ற காட்சி! நம் நாகரிகத்தினால் நிர்மாணிக்கப் பெற்ற நிறுவனங்கள், சிந்தனைசக்தி, குறிக்கோள்கள் யாவும் ஒன்று சேர்ந்து வாதாடினாலும் இந்தக் கோரமான செயலை நியாயமானது என்று ஏற்க முடியாது. பண்டையக் காலத்தில் இக் கொடூரம் நீதியானது என்று வாதாடி முடிவெடுத்திருந்தாலும், எந்த நிலையிலும் இந்த மரணக்கொடுமையை ஒரு மனித குலத் தீமையாகவே நினைக்கிறேன்.” என்று டால்ஸ்டாய் குறிப்பிட்டார்.

ஒரு மனிதன் அருவருப்பான, இரக்கமற்ற செயலோடு தலைவேறு உடல் வேறாகக் கொல்லப்பட்டதைக் கண்ணால் கண்டு விட்ட பிறகு, அழகு ததும்பும் அற்புத பாரீஸ் நகரம் ஓர் அருவருப்பான நகரமாகே அவருக்குப் புலப்பட்டது. அதனால் அப்போதே சுவிட்சர்லாந்து நாட்டுக்கு ஓடி விட்டார்!

ஜெனிவா மலை மேலே உள்ள இயற்கை எழில் தவழ, உருவாக்கப்பட்டிருந்த கிளாரன்ஸ் என்ற நகருக்கு வந்து தங்கினார்! அந்த நகர் அழகானது மட்டுமன்று; நகருக்கு நான்கு பக்கங்களிலும் ஓடும் ஆறுகளது அழகும், அருவிகளது சலசலப்பும், மேகத்தையும் பின்தள்ளிக் கொண்டு நிமிர்ந்து நின்ற பனிச்சிகரப் பாறைகள் கரைந்துருகும் பனிச்சிதறல்களது சாரலும் கண்டு டால்ஸ்டாய் மிகமிக வியந்து அங்கேயே சில நாட்கள் தங்கிவிட்டார். அதற்குப் பிறகே சுவில் நாட்டுப் பகுதியின் உள்ளூர்களது காட்சிகளையும் கண்டு மகிழ்ந்தார். அங்கே லூசெரன் என்ற ஓர் ஏரிக்கரை உணவு விடுதியிலே அவர் தங்கியிருந்தபோது தான், ஓர் இனிமையாகப் பாடும் பாடகன், அங்கே வந்து சேர்ந்தான்.

அந்தப் பாடகன் அங்குக் கூடியிருந்த மக்கள் இடையே பாடிப் பரவசப்படுத்தினார். பாடலைக் கேட்டு சபாஷ் போட்டார்களே தவிர, ஒருவரும் அவரது நிலையினை, அறிந்து ஒரு காசும் தரவில்லை. என்ன செய்வான் பாடகன்?

இந்தக் காட்சியைக் கண்ட டால்ஸ்டாய் ஐயோ பாவம்! என்று வருந்தி, பாடகரைத் தன்னுடன் அழைத்துச் சென்று, வேண்டிய உணவும் மற்றும் தேவைகள் அனைத்தையும் வழங்கினார். இதைக் கண்ட கூடியிருந்த இசைச் சுவைஞர்கள், மற்றப் பயணிகள் எல்லாரும் டால்ஸ்டாயை இழிவாகப் பேசினார்கள். இந்த மனிதநேய ஈனர்களைப் பற்றிக் கவலைப்படாத டால்ஸ்டாய் அதே விடுதியிலேயே மேலும் சில நாட்கள் தங்கிய பின்பு ஜெர்மன் நாட்டுக்குச் சென்றார்.

ஜெர்மனியிலே எந்தெந்த நகரங்களைப் பார்க்க வேண்டுமென்று அவர் திட்டமிட்டிருந்தாரோ அவற்றையெல்லாம் பார்த்தபின்பு, அவர் ருஷ்யா சென்றார். ருஷியாவுக்கு அவர் திரும்பியபோது அங்கு பனி உறையும் காலமாக இருந்தது. எனவே, பனிக்காலத்தைக் கழிப்பதற்காக டால்ஸ்டாய் தனது குடும்பத்தோடு மாஸ்கோ நகர் சென்றார்.

மாஸ்கோ சென்ற பின்பு, டால்ஸ்டாய் பயிற்சிக் கூடங்களுக்குச் சென்று பயிற்சி பெற்றார். வேட்டைக்குச் சென்று வேட்டையாடும் கலையிலே திறமை பெற்றார். அதற்குள் பனிக்காலம் முடிவுற்றது. பின்னர், டால்ஸ்டாய் தனது குடும்பத்துடன் சொந்தக் கிராமத்திற்குத் திரும்பி வந்தார். ஊர் திரும்பிய டால்ஸ்டாய், தனது சொந்த நிலங்களை நிர்வகித்து விவசாயப் பண்ணை ஒன்றை அமைத்து விவாசயத்தை நன்கு கவனித்து வந்தார்.