லியோ டால்ஸ்டாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/வாழையடி வாழையாக வளர்ந்த மனித நேயம்!

விக்கிமூலம் இலிருந்து
வாழையடி வாழையாக வளர்ந்த மனித நேயம்!

சோவியத் ருஷ்ய ஞானியான லியோ டால்ஸ்டாயை, மகாத்மா காந்தியடிகள், ‘என் வழிகாட்டி டால்ஸ்டாய், அவர் சென்ற சமுதாய அறவுணர்ச்சிப் பாதையில் நான் செல்லுகிறேன்’ என்றார்.

தென்னாப்பிரிக்காவிலே ஒரு வழக்குக்காக வாதாடச்சென்ற அகிம்சை ஞானி காந்தியடிகள், டால்ஸ்டாய் பெயரிலே அங்கே கூட்டு வாழ்க்கை பண்ணையை உருவாக்கினார். அந்த அளவுக்கு டால்ஸ்டாயின் அறவுணர்ச்சி அவரை மாற்றி அமைத்தது.

அத்தகைய ஞானி டால்ஸ்டாய் பிறந்த சோவியத் ருஷ்யா இன்று பொதுவுடைமை நாடாக இருக்கிறது. ஆனால், அவரது காலத்தில் ஜார் மன்னனின் முடியரசு நாடாக இருந்தது.

பாரதியார் பாஷையிலே சொல்வதென்றால், ருஷ்யாவை ஜார் மன்னன் என்ற கொடுங்கோலன் நமது புராணங்களிலே கூறப்படும் இரண்யனைப் போல ஆண்டு வந்தான். ருஷிய அரசரை ஜார் என்பார்கள் அந்நாட்டு மக்கள். மன்னன் ஆட்சி என்பது மக்களுக்காக நீதியோடும், அறவுணர்வுகளோடும் ஆளப்படும் என்பது அரச நீதி.

ஆனால், ஜார் என்ற மாபாவி - ஆட்சி என்ற பெயரிலே, பொய், சூதுவது, தீமை, கொடுங்கோல், ஆட்சியை நடத்தி வந்தான். அவன் அரசிலே ‘இம்’ என்றால் சிறைவாசம், ஏனென்றால் தலைகளது நாசம் என்று நாளுக்கு நாள் காட்டாற்று வெள்ளம் போலக் காட்சி தந்தன.

பேய் ஆட்சி செய்தால், பிணம் தின்னும் சாத்திரங்கள் என்று பாரதி பாடியதற்கு ஏற்றவாறு; ஜார் என்ற கொடுங்கோலன் பேயாவான்! சாத்திரங்கள் என்ற அதிகார வர்க்கங்கள் மக்களைப் பிணமாகத் தின்னும்!

உழுகிறவர்கள் உணவுக்காக ஊர் ஊராய் அலைந்தார்கள்; தவித்தார்கள்; தொழிலாளர் பெருமக்கள் விலங்குகளை விடக் கேவலமாகக், கண்டதை தின்று பசியோ பசி என்று பராரியாய் வாழ்ந்தார்கள்.

ஏழை, நடுத்தர மக்களின் இந்த இழிவு நிலைக்கு இரங்கி, மனித நேயத்தோடு ‘உணவு கொடு வேலை கொடு, வசிக்க வீடுகொடு’ என்று மக்கள் போராட ஆரம்பித்தால், அவர்கள் ‘கில்லெட்டின்’ என்ற கோரக் கொலைக் கருவிக்குத் தங்களது தலைகளைப் பலிகொடுக்கும் நிலை; அல்லது தூக்கிலே தொங்கித் துடி துடித்துச் சாகும் நிலை அல்லது சோவியத் மண்ணை விட்டே நாடு கடத்தப்பட்டும், துரத்தப்பட்டும் ஓடுவார்கள்! அவ்வளவு அராஜகத்தோடு அந்த ஆட்சி நடைபெற்று வந்தது.

இவை போன்ற கோர வாழ்க்கைக்கு இடையே, ருஷிய மக்கள் பஞ்சத்திலும் நோய்களிலும் சிக்கிப் பல தவித்தார்கள். ஆனால், அரண்மனை எடுபிடிகளிலே இருந்து அரசு அதிகாரிகள் வரை, ஆஷாடபூதி ரஸ்புடீனிலே இருந்து அரசனுக்குக் குற்றேவல் புரிபவர்கள் வரை ஏகபோகமாக எக்காளமாக, சுகபோகிகளாக வாழ்ந்து வந்தார்கள். இந்தச் சூழ்நிலை நீடித்துக் கொண்டிருந்த நேரத்திலேதான் மனிதாபிமானியான டால்ஸ்டாய் ருஷ்யாவிலே பிறந்தார்.

ருஷ்யாவில் ஜார் என்ற கொடுங்கோலன் ஆட்சியின் போது, மன்னர்களுக்கு வேண்டியவர்களானாலும் சரி, செல்வாக்கும் சொல்வாக்கும் படைத்தவர்களனாலும் சரி, அவர்களுக்குக் கவுண்ட் (COUNT) என்ற பிரபு பட்டம் வழங்கப்படுவது அன்று வழக்கமாக இருந்தது. டால்ஸ்டாயின் முன்னோர்கள் ஜார் மன்னன் பரம்பரையின் அன்பைப் பெற்றிருந்தார்கள். அதனால், டால்ஸ்டாயின் முன்னோரான பீட்டர் டால்ஸ்டாய் என்பவருக்கு, மகாபீட்டர் என்ற ருஷ்ய மன்னர் அந்தப் பிரபு பட்டத்தை வழங்கினார்.

மகாபீட்டர் என்ற மன்னன் மாண்டதும் மகாகாதரைன் என்ற அரசி ருஷ்ய ஆட்சிக்கு வந்தாள். அவளும் மகா பீட்டரைப் போலவே, டால்ஸ்டாய் முன்னோர்கள் மீது மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தாள். அவளுக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த இரண்டாவது பீட்டர் மன்னன், பீட்டர் டால்ஸ்டாயை நாடு கடத்தி விட்டான். அது மட்டுமன்று, ‘பிரபு’ என்ற பட்டத்தையும் ஆணவத்தால் பறித்துக் கொண்டான். பாவம், நாடு கடத்தப்பட்ட அந்த அதிர்ச்சியால் பீட்டர் டால்ஸ்டாய் இறந்தார்.

மகாராணி எலிசபெத் பிறகு ருஷ்ய ராணியானாள். அவள், ஜாக் பரம்பரையால் பறிக்கப்பட்டு விட்ட பிரபு என்ற பட்டத்தை மீண்டும் டால்ஸ்டாயின் முன்னோருக்கு வழங்கினாள். அத்துடன் ஆட்சியினரால் பறிமுதல் செய்யப்பட்ட நிலத்தையும், சொத்துக்களையும் திருப்பிக் கொடுத்தாள்.

மன்னர் பரம்பரையான மகாராணியின் கருணையால் மீண்டும் வழங்கப்பட்ட நிலத்தையும், சொத்தையும் டால்ஸ்டாயின் முன்னோர் விற்று விழுங்கி விட்டு, ஒருவேளை உணவுக்கே வக்கற்று வழியற்று, வறுமை நோயால் வருந்தினார்கள்.

ஆனால், 18-ம் நூற்றாண்டில் கவுண்ட் நிகோலஸ் டால்ஸ்டாய் என்பவர், தனது பரம்பரையின் மரியாதையினையும் முன்னைய மதிப்பையும் எப்படியாவது காப்பாற்றியாக வேண்டுமென்று பாடுபட்டார். தகுதியும், திறமையும் உள்ள நிகோலஸ், தனது இளமையான வயதிலேயே ராணுவப் படையில் சேர்ந்தார். ஆனால், சில மாதங்களுக்குள் அவர் எதிரிகளால் சிறைபிடிக்கப் பட்டார்.

சிறையிலே இருந்து வெளிவந்த நிகோலஸ் டால்ஸ்டாய், தனது தந்தையார் வைத்திருந்த மீதி நிலத்தில் விவசாயம் செய்தார். அதே நேரத்தில், அவருக்கும் மேரிவால் கான்ஸ்கி என்ற இளவரசிக்கும் திருமணம் நடந்தது; திருமணப் பரிசாக நிகோலஸ் டால்ஸ்டாயிக்கு நிலம் கிடைத்தது.

தனது தந்தையின் நிலத்தையும், மனைவியின் நிலத்தையும் சேர்த்து அவர் விவசாயம் செய்தார். முழுக்கவனத்தையும் அவர் வேளாண்துறையிலே செலுத்தி, அரிய உழைப்பாற்றிப் பயிரிட்டதால், அறுவடை மூலம், நல்ல செல்வ நிலையினைப் பெற்றார்.

நிகோலஸ் டால்ஸ்டாய், பசு போன்ற குணமுடையவர்; இனிமையாகப் பேசுபவர், இரக்கப் பண்புடையவர்; கோபம் வந்தால் தான் ராணுவ மிடுக்கும், தோற்றமும், செயலும், வீரமும் கொள்வார். இதையெல்லாம் நன்கு தெரிந்து கொண்ட அக்கம் பக்கத்து ஊர் மக்கள் எல்லாம் அவரிடம் அன்புடன் பழகி நண்பர்களானார்கள்.

ஜார் மன்னன் ஆட்சியிலே நிலப்பிரபுக்கள், உழவர் பெருமக்களை அடிமையாகவும், இரக்கமற்றும் நடத்திவந்த கொடுமையான நேரத்தில், நிகோலஸ் டால்ஸ்டாய் மட்டும் சற்று வித்தியாசமாக, மனித நேயமாக, இரக்கமாக, கருணையாக, பொறுமையாக, பொறுப்பாக, நேர்மையாக, நடந்து கொண்டார்!

நிகோலஸ் மனைவி இளவரசி மேரியும் தனது கணவரைப் போலவே அன்பெனும் இரக்க குணத்துடன் அவர்களிடம் பழகி பண்பெனும் பலனைப்பெற்று, பாசத்தை வளர்த்துக் கொண்டாள்.

இவ்வாறாக அவர்கள் பண்புடனும் பாசத்துடனும், உற்றார், சுற்றார் ஆதரவுடனும் விளங்கி, நல்ல குடும்பம் பலகலைக் கழகம் என்பதற்கு ஈடாக, ஐந்து மக்கட் செல்வங்களைப் பெற்றார்கள். அந்த ஐவரில் ஒருவரான நம்முடைய நாயகனான லியோ டால்ஸ்டாய், 9.9.1828-ஆம் ஆண்டில் பிறந்தார்.

லியோ டால்ஸ்டாய் தாயார் இளவரசியாக செல்வாக்குப் பெற்று வளர்ந்திருந்தாலும், தான் பெற்ற பிள்ளைகளைப் பாதுகாக்க, வளர்க்க சீராட்ட தாதியர்களையோ, பணிப் வைத்துக் கொள்ளாமல், தானே நேரடியாக, தகனது எல்லா வசதிகளையும் கவனித்துக் கொள்வதை வழக்கமாக்கிக் கொண்டார்.

தந்தை நிகோலசும், தானே நேரிடையாகக் குழந்தைகளை வளர்ப்பதிலே போதிய கவனம் செலுத்தி, அக்கறையோடு வளர்த்துவந்தார். இந்த நேரத்தில் லியோ டால்ஸ்டாய் சிறு குழந்தையாக இருக்கும்போதே அவருடைய அன்னை இளவரசி மேரி மரணமடைந்தார். இதனால், டால்ஸ்டாய் இளமையிலேயே தாயற்ற பிள்ளையானார்!

ஜெர்மன் வேலைக்காரனான தியோடார் ரஸ்ஸெல் என்பவரும், நோவ்னா என்ற வேலைக்காரியும் குழந்தை டால்ஸ்டாயை வளர்க்கும் பொறுப்பை ஏற்றார்கள். அவர்களை மேற்பார்க்கும் பொறுப்பை டால்ஸ்டாய் அப்பாவுடன் பிறந்த அத்தையும் கவனித்துக் கொண்டார். அவரது அத்தை ஒழுக்கத்தின் சிகரம், குழந்தைகள் மேல் அளவில்லா பாசம் வைத்திருந்தவர், அதனால், டால்ஸ்டாய் வளர்ப்பு நன்றாகவும், கவனமாகவும், குறைபாடுகளற்றதாகவும் இருந்தது. அத்தையின் மேற்பார்வைக் கவனத்தால் அவரது மனமும் கண்ணாடி போல பளிச்சென்றிருந்தது.

1839-ல், டால்ஸ்டாய் பதினொரு வயது சிறுவனாக இருக்கையில் தந்தை மனைவியை இழந்த சோகம் மேலும் மேலும் நெருக்கவே, மனம் விரக்தியைடைந்து மாஸ்கோ நகரில் காலமானார். அதனால், குடும்பப் பாரம் முழுவதும் அத்தையின் மேலேயே விழுந்தது.

இந்தச் சுமைகளை அவரால் தாங்க முடியவில்லையோ என்னவோ, அண்ணனும் அண்ணியும் சென்ற மரணப் பாதையிலேயே 1840-ம் ஆண்டில் அத்தையும் சென்று விட்டார்!

இப்போது டால்ஸ்டாய் நிலை மிகவும் சோக மயமாக இருந்தது. ஆனால், தூரத்து உறவுடைய ஒருத்தி அக்குடும்பத்தை ஏற்று நிர்வாகம் செய்யும் நிலை ஏற்பட்டது.

இந்த உறவுக்காரியிடம் எல்லாவித பலவீனங்களும் குடி கொண்டிருந்தன. குடி போதை ஒருபுறம் ஆடல் பாடல் இரவு பகலாக இன்ப நுகர்ச்சிகளின் விருந்துக் கேலிக் கூத்துகள் இன்னோர் புறம் தன்னைச் சேர்ந்த ஆண் பெண் நட்புகளுக்கு அன்றாடம் நடத்தும் விருந்துகள் வேறோர் புறம் இவ்வாறு, நாலா புறங்களிலும் டால்ஸ்டாயின் தந்தை சேர்த்து வைத்த குடும்பச் சொத்துகள் காலியானது, அவளின் கீழ் வளர்ந்த டால்ஸ்டாயினுடைய, உடன்பிறப்புகளது மனத்தில் ஏதோ சில நெருஞ்சி முட்கள் நெருடலாயின.

இருந்தாலும், நிகோலஸ், இளவரசி மேரி என்ற டால்ஸ்டாயின் பெற்றோர்களது. வளர்ப்பு மிகச் சிறப்பாகவும் பொறுப்பாகவும், இருந்ததால், டால்ஸ்டாயும் அண்ணன்மார்களும் நற்குணம் பெற்றவர்களாகவே வளர்ந்து வந்தார்கள்.

உடன் பிறப்புக்கள் ஐவரிலும் மூத்தவர் பெயர் நிக்கோலஸ்; இவர், அறிவு நுட்பமும், எந்தப் பிரச்னையை அணுகுவதிலும் ஆழ்ந்த திட்டமும் சிந்தனையும் உடையவர். அதனால் நன்மை எது தீமை எது என்பதை அறியும் திறனுடையவராக இருந்தார். அவருக்கு கற்பனைச் சக்தி அதிகம்! தனது தம்பியர் நால்வருக்கும் புதிய புதிய புத்திக் கூர்மைகளை வழங்கும் கதைகளை அவர் சொல்லுவார். அதைக் கேட்ட உடன் பிறப்புக்கள் அனைவரும் உண்மைகளை உணர்ந்து கொள்வார்கள்.

மூத்த அண்ணன் கூறும் கதைகளைப் பற்றி டால்ஸ்டாய் பின்னர், தனது கருத்தைக் கூறும் போது, எனக்கு வயது ஐந்து. அடுத்த அண்ணன் டிமெட்ரிக்கு ஏழுவயது; “அப்போது பெரிய அண்ணன் நிக்கோலஸ் தனக்கு ஒரு ரகசியம் தெரியும் என்றும், அந்த ரகசியம் யாருக்குத் தெரிந்தாலும், நோயோ, துன்பமோ, துயரமோ, சினமோ, பேராசையோ அவர்கள் அருகில் கூட அண்டாது என்றும், மக்கள் இடையே எறும்புகளைப் போன்ற சகோதர உணர்வு உருவாகிவிடும்” என்பார்! ‘எறும்பு’ என்று அவர் கூறிய சொல்லை இன்றும் என்னால் மறக்க முடியவில்லை. அப்போது எங்களுக்கு எறும்பு ஊர்ந்து செல்லும் பாதைகளும், வரிசை அழகுகளும் அவற்றின் துவாரங்களும் நினைவுக்கு வந்து சுறு சுறுப்பாகி, எங்கள்து அடுத்த பணிகளிலே இறங்கி விடுவோம்! அந்த சொல் அவ்வாறு எங்களை ஈர்த்துவிடும்.

அதே வேளையில், சில தினங்களில் ‘எறும்புகளின் சகோதர பாசம்’ என்ற ஆட்டம் ஒன்றை ஆடுவோம்.”

எறும்பு விளையாட்டு என்றால் என்ன என்று கேட்கிறீர்களா? இதோ டால்ஸ்டாயே அதற்கு விளக்கம் கூறுகிறார் கேளுங்கள்:

“நாங்கள் நால்வரும் நாற்காலிகளின் அடியில் பதுங்கிக் கொள்வோம். எங்களைச் சுற்றி நாலா பக்கங்களிலும் பெட்டி, படுக்கைகளை அடுக்கி சந்துகளை மறைத்துக் கொள்வோம். துணிகளால் இடுக்குகளை மூடி மறைத்துவிடுவோம். இருட்டில் ஒருவரை ஒருவர் தழுவிக் கொண்டு அமர்வோம். அந்த நேரத்தில் எங்களுக்கு அதிகமான அன்பும், இரக்கமும் மனத்தில் உண்டானதை இப்போதும் என்னால் மறக்க முடியவில்லை. இந்த ஆட்டம் எனக்கு மிகவும் விருப்பமானதாகும்.” என்று குறிப்பிட்டுள்ளார், டால்ஸ்டாய்.

நிக்கோலஸ் தனது தம்பிகளுக்கு இது போன்ற அதிசயமான, புத்தி நுட்பமான செய்திகளை அடிக்கடி கூறுவார்; அவர் கூறுவது எல்லாமே உண்மை தான் என்ற நம்பிக்கை தம்பிகளுக்குத் தோன்றிவிடும்.

டால்ஸ்டாய் தனது தமையன் கூறும் மற்றொரு செய்தியை குறிப்பிடுகிறார். அதில்;

“நீண்ட தூரத்தில் ‘பெண்பெரன்’ என்ற ஒரு மலைச் சிகரம் உள்ளது. அவர் கூறும் சில பணிகளை நாங்கள் தவறாமல் சரியாகச் செய்துவிட்டால், அந்த மலை உச்சிக்குச் சுற்றுலா அழைத்துச் சென்று இயற்கைக் காட்சிகளைக் காட்டுவதாகக் கூறுவார். அவ்வாறு அவர் கூறுவதில் மூன்று நிபந்தனைகள் இருக்கும். அவற்றுள்

ஒன்று இது:

“நாங்கள் ஒரு மூலையில் நின்று கொள்ள வேண்டும். வெள்ளைக் கரடி என்று ஒரு மிருகம் உள்ளதல்லவா? நெஞ்சிலே அதை நினைக்கவே கூடாது என்பார். நாங்கள் மூலையில் நின்று கொண்டு வெள்ளைக் கரடியை நினைக்காமல் இருக்க முடியுமா? முயற்சிப்போம் ஆனால், என்ன முயன்றாலும், வெள்ளைக்கரடி எங்களுடைய மனத்தைச் சுற்றிக் கொண்டே இருக்கும்.”

இரண்டாவது நிபந்தனை என்னவென்றால்: “ஒரு மெல்லிய கோட்டின் மேல் தடுமாறாமல் நடக்க வேண்டும்.

ஓராண்டுவரை உயிரோடுள்ள முயலையோ; செத்த முயலையோ பார்க்கக் கூடாது என்பது மூன்றாவது விதி. இந்த நிபந்தனைதான் எளிமையானது. ஆனால், உள்ளத்தில் நன்றாகப் பதிந்துவிட்டது. அவரே இது பற்றி மேலும் என்ன கூறுகிறார் என்பதைப் பாருங்கள்:

எறும்புகளின் சகோதர உணர்ச்சி என்ற ஆதரிசம், இப்பொழுதும் என் மனத்தில் இருக்கின்றது. வேற்றுமை இதுதான். நாற்காலிகளுக்கு அடியில் இருந்து கொண்டு ஒருவரை ஒருவர் தழுவிக் கொண்டிருப்பதோடு இந்த ஆதரிசம் இப்போது நின்று விடவில்லை. இந்த நீல வான வரம்புக்கு அடியில் வாழ்ந்து கொண்டிருக்கும். மக்கள் அனைவரையும் கொள்வேதே இப்போதைய எனது ஆதரிசம் ஆனது.

டால்ஸ்டாயின் மூத்த தமையனைப் பற்றி இதுவரை கூறிய லியோடால்ஸ்டாய், இப்போது தன்னுடன் பிறந்த மற்ற உடன் பிறப்புக்களைப் பற்றி என்ன கூறுகிறார் என்பதைப் பார்ப்போம்:

“நிக்கோலசிடம் எனக்கு மரியாதை இருந்தது. டிமெட்ரியை என் நண்பராய் எண்ணினேன். ஆனால் செர்ஜியஸ் என்ற அண்ணனை நான் பக்தியுடன் பூஜித்தேன். எதற்காக?

“அவனைப் போல நான் பேச வேண்டும்; ‘நா’, சாதுர்யம் இருக்க வேண்டும், நடத்தையிலும் அவனைப் பின்பற்றி நடக்க வேண்டும் என்று முயற்சி செய்தேன். அவனிடம் எனக்கு அவ்வளவு அதிக பற்றுதல் இருந்தது.

“அவனுடைய பாடல்கள், ஓவியங்கள், ஆர்வங்கள் அனைத்தையும் நான் போற்றுவேன். அதே நேரத்தில் சூதுவாது இல்லாத அவனது அகங்காரத்தை நான் எனது மனதுக்குள்ளேயே பாராட்டிக் கொள்வேன். என்னைப் பொறுத்த வரையில் அவனது செயற்பாடுகளைப் பின்பற்றிட மிகவும் விழிப்புடனேயே இருந்தேன்.”

“என்னைப் பற்றிப் பிறர் என்ன நினைக்கிறார்கள் என்பதை நான் முயற்சிப்பேன். சில நேரங்களில் எனது யூகம் சரியாகவும் இருக்கும். தவறுதலாகவும் தென்படும். ஆனால், என்னைப் பற்றி பிறருடைய கருத்தைத் தெரிய எனக்கு வருத்தமாகவே இருக்கும். இக்காரணத்தால் தான், இதற்கு சூது வாதில்லாத நேர்மாறான தன்மையைக் கண்டு செர்ஜியசை நான் மிகவும் பூஜிக்கும் நிலக்குள்ளானேன்.

என்னுடைய இரண்டாவது அண்ணன், தியாக மனம் உடையவன்! அதற்குக் காரணம் அவரிடம் இருந்த சமயப் பற்றுத்தான்.

டால்ஸ்டாய் குழந்தைப் பருவ வளர்ச்சிகளில் சில இவை. தனியாகவே அவர் அமர்ந்து எதைப் பற்றியோ சிந்தனை செய்து கொண்டே இருப்பார். இவ்வாறு அவர் மணிக் கணக்கில் தனிமைச் சிந்தனையிலேயே மூழ்கியிருப்பார்.

எவ்வளவு நேரம், எத்தனை நாட்கள் தான் இவ்வாறு ஒரு இளைஞன் தனிமைச் சிந்தனையில் இருக்க முடியும்? அவர் என்ன யோகியா? ஞானியா? தியானியா சாதாரணமாகப் பதினைந்து வயதுடைய சிறுவர்தானே! எனவே, தனிமை ஒரு நாள் தலைதூக்கித் தத்தளிக்க வைத்தது. எரியும் தீயானது! வெடித்துச் சிதறியது.

எல்லோரும் ஒரு நாள் இறந்து தானே ஆக வேண்டும்? இதற்குள் ஏன் மனக்கட்டுப்பாடும் புலனடக்கமும்? உயிருள்ள வரை எல்லா இன்பங்களையும் ஏன் அனுபவித்துச் சாகக்கூடாது? என்பதே டால்ஸ்டாயின் இளமைக் காலக் கேள்வி! இந்த எண்ணம் புகைவிட்டு, சுடர்விட்டு, சோதியாக எரிந்தது. தூக்கி எறிந்தார் பள்ளி நூல்களை;

நகர்ந்தது காலச் சக்கரப் பற்கள். படிப்படியாக டால்ஸ்டாயும் மனம் மாறிவிட்டார். அதன் எதிரொலி என்ன தெரியுமா? கத்தோலிக்க கிறித்தவ மதப்பிரிவைச் சேர்ந்த அவருக்கு சமயப்பற்று அதிகமானது. கிறித்துவத் தேவாலயத்துக்கு அடிக்கடி சென்று பாதிரிமார்களின் அருட் ஜெபங்களைக் கூர்ந்து கேட்பார்!

கேட்பதோடு மட்டும் அவர் நில்லாமல், மதகுருக்கள் என்ன கூறுகிறார்களோ அதைப் பின்பற்றுவார். இயேசு பெருமானிடம் அவருக்கு அளவு கடந்த பற்றுண்டு.

தேவாலயம் சென்ற நேரம்போக, மிகுதியான வேளைகளில், அவர் உடல் பயிற்சி, வீர விளையாட்டுக்கள் ஆகியவற்றில் கலந்து உடல்வளம் சீரடைய தேகப் பயிற்சிகளையும் செய்வார்.

அக்கால ருஷ்யாவில், ஏழை, பணக்காரன் என்ற வேற்றுமைப் பிரிவுகள் அதிகமாக இருந்தன. ஏழைப் பிள்ளைகளோடு சீமான் வீட்டுப் பிள்ளைகளையோ, நடுத்தர வர்க்கப் பிள்ளைகளோடு நிலச்சுவான்தாரர்கள் அல்லது பெரும் பிரபுக்கள் பிள்ளைகளையோ, பணக்காரக் குழந்தைகளோடு வறுமைபடைத்த சிறுவர்களையோ படிப்பதற்கும் கூட விடமாட்டார்கள்; கூடிப்பழகிட மனம் விரும்ப மாட்டார்கள். அதனால், இளம் வயது டால்ஸ்டாய் தேகப் பயிற்சிகளை அவர்களோடு சேர்ந்து செய்யமாட்டார்; ஆனால், தனியாக ஜிம்னாசியம் செய்வார். அதனால் அவர் நெடுநாள் வாழும் உடல் வளமும் வனப்பும் பெற்றார்.