வனதேவியின் மைந்தர்கள்/23

விக்கிமூலம் இலிருந்து

23

“கண்ணம்மா!...” என்று குடிலுக்குள் இருந்து நைந்த குரல் வருகிறது. நைந்திருந்தாலும், அதில் ஒரு தீர்மானம் ஒலிப்பதைப் பூமகள் உணருகிறாள். உடனே உள்ளே செல்கிறாள். “யாரம்மா?.”

“அ. அவர்கள். குதிரைக்கு உரியவர்கள்!”

“யார், உன் நாயகனா? அவன் தம்பியா?”

“இருவரும் இல்லை. ஒரு பிள்ளை நம் அஜயன் விஜயன் போல் ஒரு பிள்ளை.”

“படை வந்திருக்குமே?”

அவள் வாளாவிருக்கிறாள்

“ஏனம்மா மவுனம் சாதிக்கிறாய்! வந்திருப்பவன் பட்டத்து இளவரசனா? உன் பிள்ளைகளின் உடம்பிலும் கூத்திரிய ரத்தம்தான் ஒடுகிறது. நினைவில் வைத்துக் கொள்!”

“நான் என்ன செய்யட்டும் தாயே? அந்தப் பிள்ளை வில். அம்புசுமக்கவில்லை. காவலர் மட்டும் இருவர் வந்திருக்கிறார்கள்”

“நீ தலையிடாதே. எப்படியேனும் குதிரையைக் கொண்டு செல்வார்கள் ஒன்றுமே நடவாதது போல் இரு!”

“எப்படி?” என்று பூமகள் சிந்திக்கிறாள். வந்திருப்பவன் ஊர்மிளையின் மகன். அவள் சாயல் அப்படியே இருக்கிறது. ஊர்மி. கவடில்லாமல் இருப்பவள். அவள் பிள்ளை, அவன் வில்லும் அம்பும் இல்லாமல்தான் வந்திருக்கிறான். அவனைக் கூப்பிட்டு உட்கார வைத்து,நம்பிள்ளைகளுடன் ஒருவாய் கூழோ, எதுவோ கொடுக்காமல் பாரா முகமாக இருக்கலாமா?

“கண்ணம்மா, நீ என்ன நினைக்கிறாய் என்று புரிகிறது. நீ இவர்களை உறவு கண்டு புதுபிக்கப் போகிறாயா? அவர்கள் தந்திரமாக உன் பிள்ளைகளை வெல்ல வந்திருக்கிறார்கள். கோத்திரம் தெரியாத பெண்ணின் வயிற்றுப் பிள்ளை பட்டத்து இளவரசனாக முடியாது.”

இந்த முதியவள் எதற்காக இன்னமும் இருக்கிறாளோ என்றுகூட பூமகளுக்கு இப்போது தோன்றுகிறது. “குதிரையை நாங்கள் கட்டிப்போடவில்லை; நீங்கள் அழைத்துச் செல்லலாம்” என்று நந்தமுனி கூறுகிறார்.

காவலர்களில் ஒருவன் குதிரையின் அருகில் சென்று அதன் பின்புறம் தட்ட முற்படுகிறான். மின்னல் வெட்டினாற்போல் இருக்கிறது. அடுத்த கணம் அவன் எங்கோ மரத்தில் சென்று மோதச் சுருண்டு விழுகிறான். குதிரை ஓர் எழும்பு எழும்பிச் காற்றாய்ப் பறந்து தாவரப் பசுமைகளுக்கு அப்பால் செல்வதும் தெரிகிறது.

பூமகள் கண் கொட்டாமல் நிற்கையில் பிள்ளைகள் எல்லோரும் ஹோவென்று கைகொட்டிச் சிரிக்கின்றனர் அரசகுமாரனுக்கு முகம் கறுத்துச் சிறுக்கிறது. நந்தமுனிதான் அமைதியாக, “குதிரை சென்று விட்டது அரசகுமாரா கூட்டிச் செல்லுங்கள்!” என்று கூறுகிறார். நீலனும் சாம்பனும் குதிரை உதைவிட்டதைப் போல் செய்து காட்டிச் சிரித்து மகிழ்கின்றனர் அரசகுமாரன், அந்தக் காவலனுடன் திரும்பிச் செல்கிறான்.

பூமகள் பெருமூச்செறிகிறாள்.

“பிள்ளைகளே, விளையாடியது போதும் காலைக்கடன்களை முடியுங்கள்.” என்று அவர்களைத் தூண்டி விட்டபின் அவள் தன் பணிகளில் ஈடுபடுகிறாள். வழக்கம்போல் நீராடி அகழ்ந்தெடுத்த கிழங்குகளைப் பக்குவம் செய்ய, அக்கினியை எழுந்தருளச் செய்ய முனைகிறாள். பிள்ளைகளும் அவளுடன் சேர்ந்து கொள்கிறார்கள். சுற்றியுள்ள மண்ணனைக்குள் தீக்குண்டம். பானை, நீர், கிழங்கு, இந்த அக்கினி உயிர்களை வதைக்காது; வாழ வைக்கும்.

“சத்தியத்தின் நித்தியமாக ஒளிர்பவரே!

ஒரு குழந்தை தந்தையை அணுகும் எளிமையுடன் அணுகுகிறோம். எங்களுக்கு நயந்து, எந்நாளும் அருள் பாலிப்பீராக! உங்கள் மக்கள் யாம்! எங்களை வாழவைப்பீர்!”

குண்டத்தில் தீக்கங்குகள் மாணிக்கமாய் மின்னுகின்றன பானையில் நீர் கொதித்து கிழங்குகள் வேகும்போது ஓர் இனிய மணம் கமழ்கிறது.

“இந்த வேள்வி பயனுடையதாகட்டும்!

இந்த வேள்வி அழிவில் இருந்து உயிர்களைக் காக்கட்டும்!

இந்த வேள்வி தீய எண்ணங்களைப் பொசுக்கட்டும்!”

மனசுக்கு இதமாக இருக்கிறது.ஒன்றும் நேரவில்லை. குதிரை தானாக வந்தது; தானாகவே அது இந்த எல்லையை விட்டுப் போய்விட்டது. பிள்ளைகள் காலைப் பசியாறி வழக்கம்போல் நந்தமுனிவருடன் செல்கிறார்கள். பூமகளுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. முதியவளை அழைத்துச் சென்று நீராட்டுகிறாள்.

“பெரியம்மா, அந்த அரசகுமாரனின் பெயர் கூடக் கேட்கவில்லை. ஆனால் அவன் ஊர்மிளையின் மகன் என்பதில் ஐயமேயில்லை. அந்தக் காதோரச் செம்மை, மோவாய், அகன்ற துருதுருத்த விழிகள் எல்லாம் அப்படியே இருக்கின்றன.”

“நீ வந்தவருக்கு விருந்து படைக்க நினைக்கிறாய், என் கண்ணம்மா! உனக்கு எத்தகைய மனசு அதை அந்த வாயில்லாக் குதிரைகூடப் புரிந்து கொண்டிருக்கிறது! முற்றத்தில் நின்று உன்னை வணங்கிவிட்டு, அது. ஓடிவிட்டது.”

“வெறுமே ஓடவில்லை. காவலனை எட்டி உதைத்துத் தள்ளிவிட்டு ஓடிற்று.”

“அப்படியா? அட அறிவிலிகளா! இது வனதேவி வாசம் செய்யும் மங்கள பூமி. இங்கே உங்கள் கரிச்சுவடுகளைப் பதிக்காதீர்கள் என்று உதைத்து தள்ளிவிட்டுப் போயிருக்கும்.!”

சிறுவர்கள் அன்றிரவு, குடிலுக்குத் திரும்பவில்லை.

அடுத்தநாளும் திரும்பவில்லை. அவர்கள் அப்படி இருப்பது சாதாரணமான வழக்கம்தான். யாவாலி ஆசிரமத்தில் தங்கி விடுவார்கள். இந்த வனத்தில் அவர்கள் எங்கு திரிந்தாலும் அச்சமில்லை. ஆனால், இப்போது ஒரு முட்டு தடுக்கிறது. வேடுவர் குடியிருப்பின் பக்கம் கூட்டமாக இருக்கிறது. “என்னம்மா?.”

“மாயன். மாயன்” என்று எதையோ சொல்ல முன் வந்து விழுங்குகிறாள் புல்லி.

“மாயனுக்கென்ன?”

மாயன் கேலனுக்கும் மரிசிக்கும் பிறந்த மகன். அவனுக்கு ஒழுங்காகப் பேச்சு வராது. ஆனால் மிகவும் வலிமையுள்ள, முரட்டுத்தனமாக பையன். இவர்களுடன் சேர்ந்து இருக்க மாட்டான். பச்சை தினம் உண்பான் என்று அவர்களுக்குள்ளே மறைவாகப் பேசிக்கொண்டது இவள் செவிகளில் விழுந்திருக் கிறது. நந்தமுனி அவனுக்குப் பேச்சுச் சொல்லிக் கொடுக்க வேதவதி ஆற்றுக்கரைக்கு அழைத்துச் சென்று முயற்சி செய்கிறார் என்று சொல்வார்கள். அவன் பக்கம் ஒரு சிறுகுழந்தையைத் தனியே கூட விட்டு வைத்திருக்கமாட்டார்களாம். அவன். அவனுக்கு என்ன?.

“ஒண்ணுமில்ல வனதேவி..” என்று மென்று விழுங்குவதை நினைத்தால் உடல் சிலிர்க்கிறது.

“யாரையேனும் அடிச்சிட்டானா?”

“அதெல்லாம் அவன் ஒண்ணும் செய்யிறதில்ல. இப்பல்லாம் நந்தசாமி சொல்லி, சொல்லி, வூட்டுல வச்சதுதான் தின்னுறான்.”

“பின் இந்தக் கலவரம் எதுக்கு”

”பய நச்சுக்கொட்டை எடுத்து அம்புக்குப் பூசித் தயார் பண்ணுறான். அதால் குறி தவறாமல் அடிக்கிறான். ராசா படையைக் கொன்னு இழுத்திட்டு வருவேன்று நிற்கிறான்.”

அவள் திகைத்து நிற்கிறாள்.

“ராசா படைதான் இல்லையே? குதிரை போய்விட்டதே?.”

“எங்கே போயிருக்குது? அத, புல்லாந்தரையில் மேயுது. அந்த ராசா புள்ள, படை எல்லாம் அங்குதா கூடாரம் போட்டிருக்காங்க, ஆத்துக்கு அந்தக்கரையில். குதிரை என்ன முடுக்கியும் நகராம நிக்கிதாம், இல்லாட்டி உதைத்துத் தள்ளுதாம்!” என்று சோமா விவரிக்கிறாள்.

“தெய்வமே!” என்று பூமகள் கலக்கத்துடன் வானைப் பார்க்கிறாள்.

“நம் பிள்ளைகள் யாரும் அதனால்தான் இங்கே வரவில்லையா?”

“எப்படி வருவார்கள் தேவி! இவர்கள் பின்னே தான் அந்தக் குதிரை வருதாமே? நந்தசாமிசுட இருக்காங்க. அதனால் நமக்கு எதுவும் வராது. இப்ப இந்த மாயன் நச்சுக்கொட்டை அம்பு போட்டுத் துரத்துவேன். இல்லாத போனால் இவர்கள் இங்கே புகுந்து நம்மை அழிப்பார்கள் என்று ஒரே குறியில் இருக்கிறான். பாட்டா அடிக்கக்கூட அடிச்சிட்டார். ஏலேய், உன்னுடைய பெண்டாட்டி ரெண்டு பிள்ளைங்க சுகமா இருக்க வாணாமா? ரெட்டையாப் பொண்ணு பிறந்திருக்குங்க. இப்பவே அது முகம் பார்த்துப் பேசுதுங்க. இவ, மரக்கட்ட போல் கிடந்தான். நல்லவளவா, அழகா இருக்கு. நீங்க வந்து புத்தி சொல்லுங்க வனதேவி!” என்று அவள் பூமகளை அழைக்கிறாள்.

அவன் குடிலின் முன் ஒர் அழகிய மரம், வட்டமாகக் கிளை பரப்பி இருக்கிறது. மஞ்சள் மஞ்சளாகப் பூக்கள் கொத்துக் கொத்தாக மலர்ந்து, அழகாக இருக்கிறது. சுத்தமாகப் பெருக்கிய மண் தரையில், கலயத்தில் நஞ்சு வைத்துக் கொண்டு, மாயன் கூரிய அம்பை இன்னமும் கூரியதாக்கிக் கொண்டிருக்கிறான்.

“வனதேவி. வனதேவி வாராங்க.. டேய், எந்திருந்து கும்பிடு! கால் தொட்டுக் கும்பிடு! அந்த மிதி மண்ணை எடுத்து வச்சுக்க!” என்று அவனுடைய அன்னை நெட்டித்தள்ளுகிறாள். ஆனால் அவன் எழுந்திருக்கவில்லை. கூரிய அம்பு முனையை இன்னும் கூர்மையாக்குவதிலேயே முனைந்திருக்கிறான்.

“உள்ளே வாங்க வனதேவி! வாங்க..” என்று பெண்கள் அவளை ஒரு குடிலுக்குள் அழைத்துச் செல்கிறார்கள். மாட்டுக் கொம்பில் சீப்பு அராவிக் கொண்டிருந்த ஒரு வேடன், நிமிர்ந்து அவளுக்கு வணக்கம் சொல்கிறான். அந்தச் சீப்பு மிக அழகாக இருக்கிறது. மேலே கைப்பிடி ஒரு பூங்கொடிபோல் நேர்த்தியாக அமைக்கப்பட்ட சீப்பு.

‘ஓ, கைத்திறமை இங்கே எப்படி மலர்ந்திருக்கிறது!...”

அவள் வியந்து நிற்கையிலே அவளை பாயில் உட்காரச் செய்கிறார்கள் அந்தப் பெண்கள் கைவசமுள்ள புளிப்பிலந்தைக் கனிகளைக் கொண்டுவந்து உபசரிக்கிறார்கள். பிறகு, அந்தப் பெண் இரட்டைக் குழந்தைகளை அவள் மடியில் கொண்டுவந்து வைக்கிறார்கள் மடிகொள்ளவில்லை, ஒரு குழந்தைக்கே குழந்தை அவளைப் பார்த்துச் சிரிக்கிறது. உள்ளமெல்லாம் பாவில் குளிர்ந்தாற்போல் மகிழ்கிறாள். இனிப்புப் பகுதிப் பழத்தைக் கையில் தொட்டு அதன் வாயில் வைக்கிறாள். இரண்டு குழந்தைகளும் ஒரே மாதிரி இருக்கின்றன.

“வனதேவி, உங்களுக்கு இரண்டு பிள்ளைகள்... இவை இரண்டும் பெண்கள்...” என்று முகத்தில் மகிழ்ச்சி பொங்கச் சிரிக்கிறாள். வந்த வேலையே நினைவில்லை. குதிரை இங்கே இருக்கிறது; மாயன் நச்சம்பு தயாரிக்கிறான். யார் சொல்லுக்கும் அவன் வளையவில்லை. இவள் மகிழ்ச்சிப் பாலைக் கருநிலா வந்து மூடிவிட்டது.

இந்த மக்கள் எளியவர்தாம். ஆனால் இறுகினால் அசைக்க இயலாத இயல்புடையவர்கள். இனம் புரியாத அச்சம் அவளைப் பிள்ளைகளைத் தேடிச் செல்லச் செய்கிறது. ஆற்றுக்கரைப் புற்றரையில் தான் இருப்பதாக அவள் தெரிவித்ததை இலக்காக்கிக் கொண்டு செல்கிறாள். வானவன் சுள்ளென்று சுடுவதாகத் தோன்றுகிறது. புற்றரையில் எல்லோரும் உட்கார்ந்திருக்கிறார்கள். அரசகுமாரனுக்கு ஒரு பாதுகாவலன் குடைபிடிக்கிறான். குஞ்சம் தொங்கும் பட்டுக்குடை... அவள் புதல்வர்களுக்கும் அந்த மரியாதை உரியதே.

பொங்கும் இதயத்துடன் அவள் அருகே செல்கிறாள். அரண்கட்டினாற் போல், தாழைப் புதர்கள் இருக்குமிடத்தில் அவள் நிற்கிறாள். அங்கிருந்து நான்கு முழத் தொலைவில் அரசகுமாரன் இருக்கிறான். அங்கிருந்து பார்க்கையில், எட்ட, குதிரை வெள்ளையாக நிற்பது தெரிகிறது. காவலர்கள் ஏழெட்டுப் பேர் இருக்கின்றனர். ஒருவன் மூட்டு முறிவில், பச்சிலை போட்டுக் கொண்டு குந்தி இருக்கிறான்.

அப்போது, பல வண்ணங்களுடைய கொண்டையுடன் வால் நீண்ட காட்டுச் சேவல் ஒன்று கண்கவரும் வகையில் பறந்து, ஓரத்தில் உள்ள மரத்தில் அமருகிறது.

“இந்த வனம் மிக அழகாக இருக்கிறது...” என்று அரச குமாரன் கூறுகிறான்.

“உங்கள் அரண்மனைத் தோட்டத்தை விடவா?”

“... அரண்மனைத் தோட்டம் அழகுதான். அங்கு இப்படிச் சேவல், அழகாகப் பறந்து செல்லாது. கூட்டமாக மான்கள் போவதைப் பார்க்க முடியாது.”

அஜயன் புருவங்களை சுருக்கிக் கொண்டு பார்க்கிறான்.

“ஏன்? தோட்டத்துக்கப்பால் வனங்கள் இருந்தால் மான்கள் வரும் இல்லையா? இங்கே எல்லா விலங்குகளும் வரும்...”

“நீங்கள் வேட்டையாட மாட்டீர்களா?...”

“வீணாக எதற்கு வேட்டையாட வேண்டும்? மான்கள், பறவைகள் எல்லாமே அழகு...... ஆனால் எப்போதேனும் வலை வைத்து, பன்றி அல்லது எருமை பிடிப்பார்கள். நாங்கள் வில் அம்பு வைத்து அடிக்க மாட்டோம்...”

“ஏன்? நீங்கள் வில் வித்தை பயிலவில்லையா? உங்கள் குரு என்று சொல்கிறீர்கள். நீங்கள் க்ஷத்திரியர் போலும் இருக்கிறீர்கள்; அந்தணர் போலும் பேசுகிறீர்கள். விசுவாமித்திரர் க்ஷத்திரியர்; அவர் ராஜருஷியானார். காயத்ரி மந்திரமே அவர் அருளிச் செய்தது. எங்கள் குல குரு உயர் குலம்...”

“அதனால் மான்களை வேட்டையாடச் சொல்லிக் கொடுப்பார்களா?” என்று அஜயன் கேட்கிறான்; விஜயன் சிரிக்கிறான். வேடப்பிள்ளைகள் எல்லோரும் சிரிக்கிறார்கள்.

காவலர்களில் ஒருவன் எழுந்து தரையைத் தட்டி உரக்கக் கத்துகிறான்.

“துட்டவேடப்பிள்ளைகளே! எங்கள் அரசகுமாரன் சந்திர கேதுவையும், அரசகுலத்தையும் பழிப்பதே உங்கள் நோக்கமாக இருக்கிறது! நீங்கள் ஏழுலகும் புகழும் அயோத்தி மாமன்னரின் வழித்தோன்றலுடன் பேசுவதாக நினைவிருக்கட்டும். இப்போது எங்கள் யாகக் குதிரை இங்கே தடம் பதித்ததால், இந்த இடம் எங்கள் மாமன்னருக்கு உரியதாகிறது...” என்று கையில் உள்ள தண்டத்தினால் மீண்டும் தட்டுகிறான்.

குதிரையின் அருகில் நின்றிருந்த நந்தமுனி, யாழை மீட்டியவாறு வெளிப்பட்டு வருகிறார்.

“குதிரை தடம் பதித்தால் உங்களுக்குச் சொந்தமோ? அது என்ன சாத்திரம் ஐயா? நீங்கள் இங்கே வரும் முன்பே நாங்கள் தடம் பதித்து விட்டோம்! உங்கள் குதிரையின் குளம்படி களைவிட, எங்கள் தடம் சிறந்தது. இந்த வனதேவியின் மைந்தர்கள் நாம்!”

நந்தமுனி புன்னகை செய்கிறார்.

“அதெப்படி? நீங்கள் க்ஷத்திரிய குலமல்ல; அந்தணரும் அல்ல; முப்புரி நூல் இல்லை ; வில் வித்தை பயிலவில்லை ?.... பூமி சொந்தமோ?...” சிரிப்பு ஏளனமாக ஒலிக்கிறது.

“ஏ, மூட அரசகுமாரா? யார் வில்வித்தை பயிலாதவர்கள்! எங்கள் குரு எங்களுக்குச் சகல வித்தைகளையும் கற்பித்துள்ளார். ஆனால் அந்த வித்தையை உயிர்க்கொல்லியாகப் பயன்படுத்த மாட்டோம்! நீங்கள் விளையாட்டுக்கு வேட்டையாடுவீர்கள்; கொல்வீர்கள்...”

விவாதம் கூர்மையாக முற்றுகிறது; ஆனால் இதில் நன்மை விளையும் என்று தோன்றவில்லை. கனி இனிமை; அதன் சதையில் முள் இருப்பதை நீக்கியாக வேண்டும்?

“க்ஷத்திரிய தர்மம் கொல்வதை அனுமதிக்கிறது. எங்கள் மாமன்னர், யாரும் இதுநாள் கண்டிராத அளவில் பெரும் வேள்வியைச் செய்து கொண்டிருக்கிறார். நீங்கள் அவர் பெருமையை அறியாமல் குதிரையை, மடக்கி வைத்திருக்கிறீர்கள்! நாங்கள் உங்களையே கட்டித்தூக்கிக் கொண்டு செல்ல வேண்டிஇருக்கும்!”

“ஆஹாஹா...” என்று விஜயன் சிரிக்கிறான்.

“நாங்கள் குதிரையைக் கட்டியா போட்டிருக்கிறோம்? அதுவாக வந்தது. நீங்கள் கை வைத்தால் உதைத்துத் தள்ளுகிறது. அந்தக் குதிரையை விரட்டி ஏவி விட்டதும் நீங்கள். இப்போது நாங்கள் மடக்கி இருக்கிறோம் என்று பழிசுமத்துகிறீர்கள்! உங்கள் தருமம் மிக நன்றாக இருக்கிறதைய்யா!...” என்று அஜயன் கேட்கும்போது பூமகள் பூரித்துப் போகிறாள்.

“குதிரையை ஓட்டிச் செல்ல முடியாத நீங்கள், எங்களைத் துக்கிச் செல்லப் போவதாக அச்சுறுத்துகிறீர்கள்! என்ன நியாயமய்யா? உங்களுக்கு முடிந்தால் குதிரையைத் துக்கிச் செல்லுங்கள்! அதை விடுத்து வீணாக நீங்கள் வேறு வழிகளில் இறங்கினால் நாங்களும் கையைக் கட்டிக் கொண்டிருக்க மாட்டோம்.”

பூமகள் மறைவிடத்தில் இருந்து வருகிறாள்.

“வேண்டாம் குழந்தைகளே, நாம் நம்மிடம் செல்வோம். எழுந்திருங்கள். அவர்கள் குதிரையைப் பற்றிக் கொண்டு செல்லட்டும்!”

அவள் தன் மைந்தர்களையும் வேடப்பிள்ளைகளையும் அழைத்துக் கொண்டு நடக்கிறாள். நந்தமுனி பாடுகிறார்; மாதுலன் குழலிசைக்கிறான். இரவு தீப ஒளியில், மகிழ்வுடன் உணவுண்டு, ஆடிப்பாடிக் களைத்து எல்லோரும் உறங்குகின்றனர். பூமகளும் துன்ப நினைவுகளைத் துடைத்து விட்டு உறங்குகிறாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=வனதேவியின்_மைந்தர்கள்/23&oldid=1304454" இலிருந்து மீள்விக்கப்பட்டது