வரலாற்றுக் காப்பியம்/தலைச்சங்கப் பாடல்கள்

விக்கிமூலம் இலிருந்து

தலைச்சங்கப் பாடல்கள்


பஃறுளி ஆறு கடல் படுமுன்னே
முது குடுமிப் பெருவழுதி
முன்னீர் விழவின் நெடியோன்
நன்னீர் பறுளி மணலினும் பலவே என
வாழ்த்தும் நெட்டிமையார் பாட்டு
ஒரு தலைச்சங்கப் பாடல் ஆகும்
நெட்டிமை நெற்றிமையின் சொற்சரிவே
மூன்றாம் சங்கத்து முதுபெரும் புலவன்
மதுரைக் கணக்காயன் மாடன் நக்கீரன்
எதிர்த்து வழக்க்குரைத்த நெற்றிக் கண்ணனும்
நெட்டிமையார் வழித்தோன்றலே
தொண்டு என்பது ஒன்பதாக வழங்கிய வழக்கு
தலைசங்க நாட்கணக்கு ஆதலின்
தொடித்திரிவன்ன தொண்டு படுதிவவென
ஆளும் மலைபடுகடாம் ஒரு தலைச்சங்க நூலே
ஊன் பொதி பசுங்குடையாரின் பாட்டொன்று
சீதை சிறைபோன வழித்தடத்தில்
சிந்திய நகைகளை குரக்கின மாதர்
அணியத் தெரியாது அணிந்தாரென்று
அகச் சான்றாக உதாரணம் காட்டும்
இதுவும் ராமன் காலத்து பாட்டாதலின்
தலைசங்க வரிசையில் இடம் பெறுவதே,

ராம கதை எழுதிய வலிய புலவன்
வான்மீகியின் பேரால் புறப்பாட்டுண்டு
மறுபடியும் சீதை வனவாசம் வந்தபோது
வாழ்ந்திருந்த சிற்றூறே குசலவமேடு
கோயிலும் கோட்பாடும் அதனை வலியுறுத்தும்
சென்னை பெருநகருக்குப் புற நகராக
கூவத்துக் கரையில் இன்றுமுண்டு
வால்மீகியின் பேரால் திருவான்மியூர் என
பேரூர் ஒன்றும் சென்னைப் புறநகரே
வால்மீகி வாழ்ந்ததும் வலியகாவியம் வரைந்ததும்
தென் புலத்திலிருந்து என்பதே தெளிவாகும்
அவன் புறப்பாட்டு வலியுறுத்துவது நிலையாமை
காஞ்சித் தினை என்பார் தலை சங்கமரமே
ஒரு தமிழ்க்கவி வேற்று மொழியில்
ராமகாவியம் எழுதினான் என்பதோ எனின்
ஒரு மேல்நாட்டுத் துறவி வீரமாமுனி
செந்தமிழ்த் தேம்பாவனி எழுதியபடிக்கே
ராமகாவியம் பால. அயோத்ய,
ஆரண்ய, கிஷ்கிந்த, சுந்தரயுத்தம்
என்று காண்டங்கள் ஆறு கொண்டது
அவற்றில் விந்தியத்துத் தெற்கில் நிகழ்ந்தனவே
ஆரண்ய கிஷ்கிந்த சுந்தர யுத்த காண்டங்கள்
கதையின் பெரும்பகுதி நிகழ்ந்த தென்புலத்தில்
வாழ்ந்தவன் வால்மீகி என்பதும்
புறநானூற்றில் அவன் பாட்டுண்டு என்பதும்

அவனொரு தென்னவன் என்பதற்குச் சான்றே
மற்றும் ஒருப் பாட்டு மார்க்கண்டன் எழுத்து
மறலி இவனுக்காக உதைபட்டது கடவூரில்
கோயிலும் வழிபாடும் வரலாறும் விழாவும்
இன்றும் திருக்கடவூரில் நடைமுறையில் உண்டு
மார்க்காண்டன் நுதலிய பொருளும் நூற்பாவும்
தொன்மையிலும் தொன்மை
புராண நாயகரில் ஒருவனும் தமிழ்ப்புலவன்
என்பது கொண்டு இவன் பாட்டும் தலைச்சங்கமே
கௌதமனார் என்றதொரு பழந்தமிழ் வாணன்
பாரத தருமபுத்திரனை பாடினான் என்பர்
கௌதமன் என்றதும் இந்திரன் அகலிகை
நினைவுக்கு வருவார் நினைப்பதற்கு இல்லை
அவன் ராமன் காலத்து முனிவன்
இவர் பாரத காலத்துப் புலவர்
பாரதத்து மன்னவனை பாண்டியத்துப் புலவன்
பாடியது எவ்வாறு என்பார்க்குச் சொல்வேன்
மலையத்துவஜ பாண்டியன் மருமகனுக்காக
படைத்துணை கொண்டு சென்ற போது
உடன் சென்ற புலவன் கௌதமன்
போர்த் தலைவனான பாண்டவர் குலத்தலைவனை
பாட்டுடைத் தலைவனாய்க் கொண்டு பாடினான்
வடக்கின் இதிகாச காலம் தெற்கின்

தலைசங்க நாளென்பதால் இதுவும் முதற்சங்கமே
களவாக உடன் போகி கற்பாக மீண்டதற்கு
ஊரலர் ஓய்ந்ததை உவமைப் படுத்த
வெல்போர் இராமன் அருமறைக்கு
ஒலிய விழ்ந்த பல்வீழ் ஆலமென்ற
அகப்பாட்டும் ஒருதலைச்சங்கப் பாட்டே
அகத்தும் புறத்தும் நுழைந்து வந்தால்
முன்னைப் பாட்டுகளில் ஒரு எண்ணூறு
தலைசங்க வரலாற்றில் இடம் கொள்ளும்