வாழ்க்கை விநோதம்/டெலிபோன் ஏமாற்றம்

விக்கிமூலம் இலிருந்து
டெலிபோன் ஏமாற்றம்


“ட்ரிண், ட்ரிண், ட்ரிண்ண்......”

கடியாரமல்ல, டெலிபோன்தான் இப்படிச் சப்தம் போடுகிறது.

மத்தியானம் மணி ஒன்றரை யானதால், யாருமே ஆபீஸில் இல்லை. டிபனுக்குப் போய்விட்டார்கள். மானேஜருக்கு டிபன் கொண்டுவந்த துரைசாமிமட்டுமே நின்றுகொண்டிருந்தான். டெலிபோன் சத்தம் போடுவதைக் கண்டதும் சுற்றுமுற்றும் பார்த்தான். யாரும் இல்லை. டெலிபோனில் பேசவேண்டுமென்ற நீண்ட நாள் ஆசையைத் தீர்த்துக்கொள்ள நினைத்தான். டெலி போனைப்பற்றிப் பூரணமாகத் தெரியாவிட்டாலும், தைரியமாக டெலிபோனை எடுத்தான்; பேச ஆரம்பித்து விட்டது.

“ஹல்லோ.”

“யாருங்க ?”

“ஹல்லோ, யார் பேசுகிறது ?”

“ஏங்க, நான்தானுங்க.”

“நான் என்றால் யார் ?”

“நான்தானுங்க, தெரியல்லியா ?”

“அட நான்தான், என்றால் யார்? பெயர் இல்லையா?”

“என்னங்க, இன்னம் தெரிஞ்சுக்கல்லீங்களா ? இவ்வளவு வருசமா, எங்க எசமாங்கிட்டே இருக்கேன். துரைசாமிதானுங்க.”

“நல்ல வேளை, உன் பெயரையும், உத்தியோகத்தையும் முதலிலேயே சொல்லப்படாதா? சரி, எங்கே மானேஜர்?"

“எங்க எசமாந்தானேங்க. அவரு எங்கோயோ போயிட்டாருங்க. பன்னெண்டு மணிக்கே டிபன்கொண்டாந்தேனுங்க, இன்னங் காணுமே! எங்கே போயிருப்பாக ?”

“சரி, சரி, வேறே யாரும் இல்லையா? இருந்தால், மர்க்கண்டைல் பேங்கிலிருந்து கூப்பிடுவதாகச் சொல்லு.”

துரைசாமி, ஆபீஸ் பூராவும் தேடுகிறான், யாரையும் காணோம். மாடியில் யாராவது இருக்கிறார்களா என்று மேலே செல்கிறான். அங்கே, ஏதோ பழைய குப்பைகளைக் கிளறிக்கொண்டிருக்கிருர், குமாஸ்தா ஒருவர். முக்கியமான கடிதம் ஒன்று காணாததால், மானேஜர் உத்தரவுப்படி, அதைத் தேடுவதில் முனைந்திருக்கிறார். அவரிடம் துரைசாமி சென்று, “ஐயா, யாரோ போனில் கூப்பிடுறாங்களே" என்றான்.

“யாரடா ? பெயர் தெரியுமா ?”

“சொன்னாங்க, ஏதோ மார்க்கண்டேயனோ என்ன வோவ்னாங்களே!”

“சரி, இதோ வந்தாச்சு.”

குமாஸ்தா, டிபன்கூடச் சாப்பிடாது வேலை பார்க்கிறார். இந்தமாதிரி குறுக்கே வந்தால் வயிற்றெரிச்சலாகத்தானே இருக்கும்? யாரும் இல்லையென்று சொல்லி விடும்படி துரைசாமியிடம் சொல்லி இருக்கலாம். ஆளுல் முக்கியமான விஷயமாக இருந்தால், என்ன செய்வது?

முகத்தைச் சுளித்துக்கொண்டே, குமாஸ்தா கீழே அவசர, அவசரமாக வருகிறார், போனிடம் செல்கிறார்.

போன் இருந்தபடியே இருக்கிறது ; அதாவது ‘ரிஸீவர்’ போன் மேலேயே இருக்கிறது. துரைசாமி அதைக் கீழே வைத்துவிட்டு வந்திருந்தாலல்லவா பேசலாம்? குமாஸ்தாவிற்குக் கோபம் பொத்துக்கொண்டு வந்துவிடுகிறது.

“என்னடா, என் வேலையையெல்லாம் குட்டிச் சுவராக்கிவிட்டாயே! போனை இப்படி வைத்துவிட்டு வந்து, என் கழுத்தை அறுக்கிறாயே” என்றார்.

“பின்னே என்னங்க பண்ணுவது! போனை எடுத்துக்கிட்டே வந்திருக்கணுமா? அதை ஆணி அடிச்சல்ல வச்சிருக்குப் போலேருக்கு” என்று களங்கம் இல்லாமல் பதில் சொன்னான்.

இதைக் கேட்டவுடனே, குமாஸ்தாவுக்குக் கோபம் வந்தாலும், சிரிப்புத் தடுத்துவிட்டது. பேசாமல் மாடிக்குப் போய்விட்டார்.

***

ஆபீஸ் மானேஜர் முதலாளி வீட்டுக்குப் போன் பண்ணினார்.

“ஹல்லோ......”

“ஹல்லோ......”

“ஹல்லோ. ஆபீஸிலிருந்து பரமானந்தம் பேசுகிறேன். நமஸ்காரம் சார். இன்றைக்கு அவசர வேலையாக வீட்டுக்குப் போகணும். அதான், உங்ககிட்டே சொல் லிட்டுப் போகலாம்ணு பார்த்தேன். மன்னிச்சுக்கணும். அவசர வேலை...அதான்......”

“ஹல்லோ, யார் முதலாளியா வேணும்? அவர் வெளியே போய்விட்டாரே.”

“பின்னே யார் பேசுகிறது ?”

“நான்தான், பியூன் வெங்கடாசலம், சார்”

இதைக் கேட்டதும் மானேஜருக்கு வெட்கமாகப் போய்விட்டது டபக்கென்று போனை வைத்துவிட்டார்.

***

தியாகராஜன், தன் நண்பன் சோமசுந்தரத்துக்கு, அவன் வேலைபார்க்கும் ஆபீஸிற்கு போன் பண்ணுகிறான். ஹெட்கிளார்க் போனை எடுத்து “யார் வேண்டும்?” என்கிறார்.

“சோமசுந்தரம் வேண்டும்” என்றதும் பியூனை அனுப்பி சோமசுந்தரத்தைக் கூப்பிடச் சொன்னார். ஆளுல், சோமசுந்தரம் இடத்தில் இல்லை. கானோம் என்று சொல்வதற்காக ஹெட்கிளார்க் போனை எடுத்து ‘ஹல்லோ’ என்கிறார். அவ்வளவுதான். தியாகராஜன் பேச ஆரம்பித்துவிடுகிறான்.

“என்னப்பா, சோமு, நேற்று சினிமாவுக்கு வருவதாகச் சொல்லி ஏமாற்றிவிட்டாயே! ஏன், உங்க ஹெட்கிளார்க் காலகண்டன் கொஞ்சங்கூட மசியவில்லையோ? தலைவலி என்று சொல்லி ‘டிமிக்கி’ கொடுப்பதாகச் சொன்னாயே;என் வேலையெல்லாம் கெட்டுப் போச்சு உன்னாலே" என்று ஒடும் வண்டிச் சக்கரத்தில் கோலைக் கொடுத்தது போல, சட சட என்று விளாசிவிட்டான், ஹெட்கிளார்க்கையும் சேர்த்து.

ஹெட்கிளார்க் என்ன செய்வார் ? போனை ஆத்திரத்தோடு வைத்துவிட்டார். வேறு அந்த போனில் என்ன செய்ய முடியும்? ஆனால், சாது போல நடிக்கும் சோமுவின் குட்டு, இதனால் வெளியாகிவிட்டதல்லவா ?

அவனுக்கு ஏதாவது வெடிவைக்க வழி வகுக்காமலா இருப்பார், அந்த ஹெட்கிளார்க் ?

***

அருணகிரி முதலியாருக்கு நவநீதன் கம்பெனியிலிருந்து டெலிபோன் வந்தது.

“ஹல்லோ, அருணகிரி முதலியாரா?”

“ஆமாம், யார் பேசுகிறது?”

“நவநீதன் கம்பெனியிலிருந்துதான் பேசுகிறோம். என்ன சார், இதான் உங்கள் நாணயமோ ? நாலு மணிக்கே பணத்தை அனுப்பிவிடுவதாகக் கூறினீர்களே?”

“என்ன! நவநீதன் கம்பெனியா ? பணமாவது, கொடுக்க வேண்டியதாவது ?”

“ஆமாம் சார், எங்களிடம் சரக்கு வாங்கியதற்குத் தரவேண்டிய, நாலுமாதக் கடன் தொகை. இப்பொழுது தெரிகிறதா ? கொடுக்க வேண்டியதிருந்தால் மறந்து தானே போகும் ?”

“என்ன, நானா உங்களிடம் சரக்கு வாங்கினேன் ? அருணகிரி முதலியாரா ?”

“ஆமாம் சார். அருணகிரி முதலியார்தான். நீர் தான்.”

“என்ன, இது ஒரு கதையாக இருக்கிறதே. வேறு யாராவது இருக்கும்.”

வேறு யாருமா ? தாங்கள், எம். அருணகிரி முதலியார் தானே?”.

“என்ன, எம். அருணகிரி முதலியாரா? என் பெயர் என். அருணகிரி முதலியார். டெலிபோன் நெம்பர் 66723.”

கொஞ்ச நேரம் நிசப்தம்.

பிறகு “அடடா. மன்னிச்சுக்கணும் சார், மன்னிச்சுக்கணும். டெலிபோன் டைரக்டரியில் கீழேயிருக்கும் நம்பரைக் கூப்பிடவேண்டியதற்குப் பதிலாகத் தங்களைக் கூப்பிட்டுவிட்டேன். மன்னிச்சுக்கணும் சார்” என்று பதில் வந்தது.

முதலியார் மன்னிக்காமல் என்ன செய்வது ? நாணயமாக உள்ள முதலியாரை, இந்தப் போன் கொஞ்சம் முன்னால் என்ன பாடு படுத்திவிட்டது ?

***

ஒரு நாள் , எங்கள் ஆபீஸ் டெலிபோன் மணி அடித்தது. அதை எடுத்து அதன் அழுகையை நிறுத்திப் பேச ஆரம்பித்தேன். ஆபீஸில் வேலை பார்க்கும், தெலுங்கு தேசத்தவர் ஒருவரைக் கூப்பிடும்படியாக அந்தக் குரல் வேண்டிற்று. தெலுங்கு தேசத்தவரைக் கூப்பிடப் போனேன். அவர் இடத்திலில்லை. காரணம் அவர் லீவில் இருக்கிறாராம். விஷயத்தைக் கூறலாம் என்று போனை எடுத்தேன். நான் பேசுவதற்குள் அந்தக் குரல் “ஏமுண்டி. நமஸ்காரண்டி......” என்று ஏதோ தெலுங்கில் பேச ஆரம்பித்துவிட்டது!

நானோ சுத்தத் தமிழன்; தெலுங்கு தெரியாது. ஆனால் இதை நான் தெரிவிக்காதபடி அந்தக் குரல் வெகுநேரம் பேசிவிட்டுப் பதிலை எதிர்பார்த்தது. அப்போதுதான் நான், “ஐயா, நீங்கள் கேட்ட ஆள் லீவில் இருக்கிறாராம். நாலைந்து நாள் செல்லுமாம் வருவதற்கு” என்று சொல்லிவிட்டு போனை வைத்தேன்.

இந்த மாதிரியே போனில் எத்தனையோ தமாஷ்கள் நடந்துவிடுகின்றன. சில ஆபத்தாக முடியும் ; சில ஏமாற்றமாக முடியும். ஆனால், இதைக் கேட்பவர்களுக்கோ எப்போதும் ரசமாகத்தான் இருக்கும்.