வாழ்க்கை விநோதம்/மேடைப் பேச்சு

விக்கிமூலம் இலிருந்து
மேடைப் பேச்சு

மேடைமீது ஏறிப் பிரசங்க மாரி பொழிபவர்களைப் பார்க்கும்போதெல்லாம், எனக்கு ஒர் ஆசை ஏற்பட ஆரம்பித்துவிட்டது. அவர்கள் மேலல்ல.! அவர்கள் மாதிரி நானும் மேடைமீது ஏறிப் பேச வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை. அந்த ஆசை ஏற்பட்டதோடு நின்றதா ? வளரவும் ஆரம்பித்து விட்டது! எவ்வளவோ அடக்கி அடக்கித்தான் பார்த்தேன். ஆனால் அந்த ஆசையை அடக்கவே முடியவில்லை. `ஸ்பிரிங்கை எவ்வளவுக் கெவ்வளவு கீழ் நோக்கி அழுத்துகிறோமோ, அவ்வளவுக் கவ்வளவு தானே மேலே தூக்கி அடிக்க ஆரம்பிக்கிறது ? அது போலவே பீரிக்கொண்டு வந்துவிடும்போல ஆகி விட்டது. இதற்கு ஒரு சந்தர்ப்பம் பார்த்துக்கொண்டேயிருந்தேன்.

நல்லவேளையில், எங்கள் சங்கத்தின் ஆண்டு விழா வந்தது. அந்தச் சங்கத்தில் எனக்குக் காரியதரிசி உத்தியோகம். (கெளரவ உத்தியோகந்தான். சம்பளமில்லை.) ஆண்டு விழாவில் பெரிய பெரிய பிரசங்கிக ளெல்லாம் வந்து பேசும்படி ஏற்பாடு செய்தோம். அழைப்புக்கள் அச்சடிக்கப்பட்டன. ‘நிகழ்ச்சி முறை’யில் அந்தப் பிரசங்கிகள் பெயரோடு, என் பெயரையும் சேர்த்து அச்சடித்துவிட்டேன்!

ஆனால் இந்த நிகழ்ச்சி முறை, ஒரு கிளர்ச்சியை உண்டுபண்ணிவிட்டது. சங்கத்தின் தலைவர், உபதலைவர், பொக்கிஷதார் எல்லோரும் சேர்ந்து எனது செய்கையைக் கண்டிக்க ஆரம்பித்துவிட்டார்கள். அந்தப் பெரியவர்களுடைய பக்கத்திலே, மேடைமீது ஏறிப் பேசியே அறியாத என் பெயரை அச்சடித்ததோடு அல்லாமல், மற்ற உத்தியோகஸ்தர்களின் அனுமதியையும் நான் பெறவில்லை என்பதுதான் அவர்களுடைய கோபத்துக்குக் காரணம்.

தலைவர், நிகழ்ச்சி முறையிலிருந்து என் பெயரை அடித்துவிடவேண்டும் என்றாராம். உபதலைவர், 'அப்படி அடித்தால் நன்றாக இராது. அழைப்புக் கெட்டுவிடும். வேறு அச்சடித்தால்தான் தேவலை' என்றாராம். பொக்கிஷதாரோ, வேறு அழைப்பு அச்சடிப்பது கூடாது; பொருளாதார நிலைமை சரியில்லை' என்றாராம். கடைசி யில் ஒரு முடிவுக்கு வந்தார்கள். தலைவரிடம் கொடுக்கும் நிகழ்ச்சி முறையில்மட்டும், எனது பெயரை மையால் அடித்துவிடுவது என்பதுதான் அவர்களின் முடிவு.

இது, எனக்கு மிகுந்த வருத்தத்தையும் ஆத்திரத்தையும், கோபத்தையும், ஏமாற்றத்தையும் ஒன்றாக உண்டாக்கிவிட்டது. அடுத்த வருஷம் காரியதரிசியாக இருக்கிறோமோ இல்லையோ, இந்த வருஷமே பேசி ஆசை யைத் தீர்த்துக்கொண்டு விடலாம் என்றல்லவா எண்ணி யிருந்தேன். இப்படிக் கெடுத்துவிட்டார்களே, என்ன செய்வது ?

ஆனாலும், ஆண்டு விழாவில் இதற்காகவா அழுது கொண்டேயிருப்பது? காரியதரிசியின் வேலையைக் கவனித்துக்கொண்டிருந்தேன்.

சிலர் பேசி முடித்தார்கள். கூட்டத்துக்குத் தலைமை வகித்தவர், திடீரென்று, என் பெயரைச் சொல்லி என்னைப் பேசும்படி பணித்தார்.

இதைக் கேட்டதும், எனக்கு ஒன்றுமே புரியவில்லை. என் பெயரைத்தான் அடித்துவிடடதாகச் சொன்னார்களே! அப்புறம் எப்படி என்னைத் தலைவர் கூப்பிட்டார்?

ஆனாலும், இதைப் பற்றி அப்பொழுது யோசிப்பதில் பயனில்லை என்று தலைவர் கட்டளைப்படி பேச மேடைக்கு வந்துவிட்டேன். உடனே சங்கத் தலைவரும், கூட்டத் தலைவரின் பக்கத்தில் வந்து, “அடடா, இவர், பேச சந்தர்ப்பம் இல்லை என்றார். இவர் பெயரை அடிப்பதற்குப் பதில், மேலே உள்ளவரின் பெயரையல்லவா அடித்துவிட்டோம், அவசரத்தில்!” என்று சொன்னது காதில் விழுந்தது.

ஆனாலும், கூட்டத் தலைவர், “பரவாயில்லை. இவரே தாம் மேடைக்கு வந்துவிட்டாரே” என்று அவர் காதுக்குள் பதில் சொல்லிவிட்டார்.

நான் மேடைமீது ஏறியதும், சந்தர்ப்பம் கிடைத்ததை நினைத்துச் சந்தோஷப்பட்டேன் என்றா நினைக்கிறீர்கள்? அதுதானில்லை. சந்தோஷம் வரவேமாட்டேன் என்று மறுத்துவிட்டது. கைகள், கால்கள் எல்லாம், கையும் களவுமாக அகப்பட்ட திருடனுடை யவை போல ‘கிடு, கிடு’ என்று ஆட ஆரம்பித்துவிட்டன; மேலெல்லாம் வியர்த்துவிட்டது. இவ்வளவு சிரமப்பட்டும், வாயிலிருந்து ஒரு வார்த்தைகூட வெளியே வர வில்லை. சோடாப் புட்டியில் குண்டு அடைத்துக்கொள் வதுபோல, தொண்டையை ஏதோ அடைத்துவிட்டது. தொண்டையைக் கனைத்துக் கனைத்துப் பார்த்தேன். கடைசியாக, கண்மூடி போட்ட குதிரையைப் போல நேரே பார்த்துக்கொண்டே நாலைந்து வார்த்தைகளைச் சிரமப்பட்டு, வெளியே கொண்டுவந்தேன். அவைகளிலும் சில பாதியோடு நின்றுவிட்டன; சில திருப்பித் திருப்பி வந்துவிட்டன.

ஒரு வழியாக எனது சிற்றுரையை முடித்துக் கொண்டேன். கீழே வந்து உட்கார்ந்துங்கூட விடாமல் சுமார் ஒரு மணி நேரம் வரை என் கை கால் ஆட்டம் நின்றபாடில்லை.

இந்த மாதிரி, நாலுபேருக்கு நடுவில் என்னை மேடைமீது நிற்கவைத்து அவமானம் செய்த தலைவர் மீது, எனக்குக் கோபம் வராமல் இருக்க முடியுமா? நிகழ்ச்சியில் முன் இருந்தபடியே இருந்திருந்தாலாவது தமிழ்ப் பண்டிதரிடம் ஏற்கெனவே எழுதி வாங்கி வைத்திருந்த விஷயத்தை, மனப்பாடம் செய்து தைரியமாக, கைகால் அசையாது, ஒப்பித்திருக்கமாட்டேனா? இப் படித் திடீரென்று பேசச் சொன்னால் எப்படிப் பேசுவது? இதுதான் என்னுடைய பேச்சு மட்டமாகப் போனதற்கு முதல் காரணம்; முக்கிய காரணமும் அது தான். இல்லாவிட்டால் அந்தத் தமிழ்ப் பண்டிதருடைய நடையும், கருத்தும் எப்படி இருக்கும் தெரியுமா!

இதிலிருந்து நான் எங்களூரில் பேசுவதே இல்லை. காரணம், என்னை யாரும் பேசுவதற்கு அழைக்கவில்லை என்பதுதான்.

இந்தச் சம்பவத்தால் நான் மனம் உடைந்துவிட்டேன் என்று நினைத்துவிடாதீர்கள். எல்லோரும் எடுத்த வுடனேயே ஜவாஹர்லாலைப்[ போல நன்றாகப் பேசிவிட முடியுமா? அப்படியே பேசிவிட்டாலும்தான் ஸர். சாப்ரு போன்ற ஒருவர் வந்து, நம்முடைய பேச்சைப் போற்றித் தட்டிக் கொடுத்து, முத்தமும் கொடுப்பார் என்று எதிர் பார்க்க முடியுமா?

சர்ச்சில் துரை, பார்லிமெண்டில் அங்கத்தினரான புதிது. அவரைப் பார்க்க நண்பர் ஒருவர் வந்திருந்தாராம். சர்ச்சிலின் அறை சாத்தப்பட்டிருந்தது. சர்ச்சில் வீட்டில் இல்லை என்று நினைத்து, நண்பர் திரும்பிப் போக ஆரம்பித்தார். அப்பொழுது சர்ச்சிலினுடைய அறையிலிருந்து ஒரு குரல் கிளம்பியது! அந்தக் குரல் இந்த நண்பரைக் கூப்பிடவில்லை. பின்னர் என்ன செய்தது தெரியுமா?

“நான், இந்தப் பார்லிமெண்டுக்குள் நுழையும் போது உங்கள் முன் பேசப்போகின்றேன் என்று நினைக்கவேயில்லை, ஆனால் ......” என்றுதான் ‘நெட்டுரு’ச் செய்துகொண்டிருந்ததாம்!

“சந்தேகமில்லை, இது சர்ச்சிலின் குரல்தான்” என்று நண்பர் கண்டுகொண்டாராம். அது ஒரு காலம். ஆனல், பிற்காலத்தில், பேச்சிலே பெரிய சூரர் எனப் பெயரெடுத்துவிட்டார்.

இந்த மாதிரி, பெரிய பேச்சாளர்களில் எத்தனை பேர் ஆரம்ப காலத்தில் இருந்திருப்பார்கள்! சிலர், கண்ணாடி முன்பாக நின்றுகொண்டு பேசிப் பழகி இருக்கலாம். சிலர் தாமே எழுதிப் படித்துவிட்டு, கூட்டத்தில் ஒப்பித்திருக்கலாம். இன்னும் சிலர், என்னைப்போல யாரிடமாவது எழுதி வாங்கி, மனப்பாடம் செய்திருக்கலாம். அல்லது, அந்தக் காலத்துப் பத்திரிகைகளில் வந்த, தலைவர்களின் பேச்சுக்களைப் படித்துவிட்டு, பேசும்போது அவைகளை வலிந்து புகுத்தியாவது தமது பிரசங்கத்தைப் பெருமைப்படுத்தியிருக்கலாம்.

சிலர், சாதாரணக் கூட்டத்தில், சண்டமாருதமாகப் பேசுவார்கள். ஆனல் பெரிய கூட்டத்தைக் கண்டால், பேசவரவே வராது. வேறு சிலர், சாதாரணத் தலைவராக இருந்தால் வெகு ஜோராக வெளுத்து வாங்குவார்கள். மிகப் பெரிய மனிதர் தலைவராக இருந்துவிட்டால், நாக்கு எழவே எழாது.

‘பேச்சுப் பேச்சென்னும், பெரும்பூனை வந்தக்கால்
கீச்சுக் கீச்சென்னும் கிளி’

என்பார்களே, அது போலத்தான்!

ஊரில், கொஞ்சம் பெரிய மனிதராக இருப்பார் ஒருவர். அந்த ஊரிலே, `பாரதி விழா' கொண்டாடுகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். அவரைப் பேசும்படி கேட்டுக்கொண் டிருக்கமாட்டார்கள். இருந்தாலும், அவர் பாரதியாரைப் பற்றி, ஏதேதோ எழுதிச் சேர்த்துப் பாடம் செய்துகொண்டு கூட்டத்திலும் ஆஜராகிவிடுவார்.

“பெரிய மனிதர் வந்துவிட்டாரே, பேசச் சொல்லாமல் என்ன செய்வது?” என்று அவரைப் பேசும்படியாகத் தலைவர் கேட்டுக்கொள்வார். அவரும் எழுந்திருந்து, கூட்டத்தாரைப் பார்த்து, “நானும், உங்களைப் போலப் பிரசங்கம் கேட்டுவிட்டுப் போகத்தான் வந்தேன். ஆனால் தலைவரவர்கள் என்னைப் பேசும்படி கட்டளையிட்டுவிட்டார்கள்” என்று சொல்லிவிட்டு ஏற்கெனவே படித்து வைத்திருந்த `தயார்ப் பாடத்'தை நாசுக்காக ஒப்பிக்க ஆரம்பித்துவிடுவார்.

சிலர், பேசுவது கூட்டத்தாருக்குப் பிடிக்காது. இந்த அதிருப்தியை, அவர்கள் எழுந்துபோவதிலும் சத்தம் போடுவதிலும் காண்பிப்பார்கள். பிரசங்கியார், இதைப் புரிந்துகொள்ளாது, மேலும் பேச ஆரம்பித்து விடுவார். சிலர் உடனே கைதட்டுவார்கள். நல்லது, கெட்டது இரண்டுக்குமே கைதட்டுவதால், பிரசங்கியார், தம்மை உற்சாகப்படுத்துகிறார்களாக்கும் என்று நினைத்து, மேலும் விஸ்தாரமாகப் பேசிக்கொண்டேயிருப்பார். கடைசியில் ‘உஸ், உஸ்’ என்று கூட்டத்தில் சப்தம் எழுந்தவுடனேதான், பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைப்பார்.

இந்தமாதிரி, இன்னும் எவ்வளவோ கஷ்டங்கள். இவைகளெல்லாம் சகஜந்தான். இதற்காகப் பயந்து என்னைப் போன்றவர்கள் பேசாமலேயே இருந்துவிட முடியுமா? பேசிப் பேசிப் பழகினால், தானாகவே பேச வந்துவிடுகிறது. ஏன், ஒரு காலத்தில் நான் பெரிய பிரசங்கியாகக்கூடாதா என்ன?

முதல்தடவை, கோர்ட்டில் ஆஜராகும்போது திணறிப்போன மகாத்மா காந்திதானே, பிற்காலத்தில் உலகக் கோர்ட்டில், இந்தியா தரப்பில் ஆஜராகி வாதாடி வெற்றியும் பெற்றார்!