விக்கிமூலம்:நாள் ஒரு இலக்கியம்/2020-01-07

விக்கிமூலம் இலிருந்து

இப்புத்தகத்தை Mobi(kindle) வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை EPUB வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை RTF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை PDF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை txt வடிவில் பதிவிறக்குக. - இவ்வடிவில் பதிவிறக்குக

உத்தரகாண்டம் புதினத்தை எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் எழதியுள்ளார். எழுத்தாளர் அவர்கள் நூலைப்பற்றி பின்வருமாறு கூறுகிறார்.

இராமாயணம், இராமனின் முடிசூடுதலுடன் முடிந்து விடுவதில்லை. அதேபோல் குருட்சேத்திரப் போருடன் மகாபாரதம் நிறைவு பெற்றுவிடவில்லை. சீதை வனவாசம் தொடருகிறது; யாதவர்களின் அழிவும் நிகழ்கிறது. நம் சுதந்தரப் போராட்டமும் ஒரு காப்பியம் போன்றதுதான். அரசியல் விடுதலையைத் தொடர்ந்து இந்த ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆண்டுகளில் சரிவுகளும் மோதல்களும் வன்முறைகளும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. காரிருள் கவியும் போதே, விடிவெள்ளி தோன்றும் என்பது நிச்சயமாகிறது. உறைபனியில் கருகும் பசுமைகள் மீண்டும் உயிர்க்கின்றன. எனவே ‘உத்தரகாண்டம்’ என்ற தலைப்பிட்ட இந்தப் புதினத்திலும் அந்த நம்பிக்கை விடி வெள்ளிகளைக் காட்டியிருக்கிறேன். இந்தப் புனைகதை, சற்றே வித்தியாசமாக, முன்னும் பின்னுமாகப் புனையப்பட்டிருந்தாலும், என் சிறுமிப் பருவத்திலிருந்து இந்நாள் வரையிலும் நான் கண்டு பேசிப் பழகி, அறிந்து உணர்ந்த பாத்திரங்களையே உயிர்ப்பித்திருக்கிறேன். தன்னார்வத் தொண்டியக்கங்கள் வாயிலாக, இந்நாட்டின் வேர்களைக் கண்டு புத்துயிரூட்ட முனைந்துள்ள இளைய தலைமுறையினரும் கற்பனையில் உதித்தவரல்லர்.

உத்தரகாண்டம்

1

வாசலில் வண்டி வந்து நின்று கதவு அறைபடும் ஒசை கேட்கிறது. முற்பகல் நேரம். தாயம்மாள் கூடத்தில் மேலே மாட்டப்பட்ட காந்தியடிகள் படத்தை, சிறு மேசையில் ஏறித் துடைத்துக் கொண்டிருக்கிறாள். அன்றாடம் அதைத் துடைப்பது, அவளுக்கு ஒரு வழிபாடாக இருக்கிறது. காந்தியடிகளின் படத்துக்குக் கீழே, ஐயாவின் படமும் அம்மாவின் படமும் இருக்கின்றன. அவற்றுக்குச் சற்றுக் கீழே, ராதாம்மாவின் படம்.

இவர்கள் யாரும் இன்று இல்லை. ஆனால் இவர்களுடைய வாழ்நாளின் நினைவலைகள் அவள் உள்ளக் கடலில் மாயவேயில்லை.

அழுக்குப்படியாமல் துடைப்பது மட்டுமே அவள் செய்யும் பணி. பொட்டு, பூ மாலை என்று எதுவும் இல்லை.

அய்யா இருந்த நாட்களில், காந்தி படத்தைக் கையால் நூற்ற நூலினால் மலர்மாலை போல் செய்யப்பட்ட மாலை ஒன்று அலங்கரித்துக் கொண்டிருந்தது. அய்யா நூற்பதை விட்ட பின்னரும், மதுரை ஆசிரமத்திலிருந்து, ஒவ்வொரு காந்தி ஜெயந்தி நாளிலும் நஞ்சுண்டையா வருவார். பழைய மாலையை எடுத்துவிட்டுப் புதிய மாலையை இசைப்பார். அய்யா, படுக்கையோடு விழுந்தபின், நஞ்சுண்டையா அடிக்கடி வந்து உட்கார்ந்திருப்பார். பேசவே மாட்டார்கள். அய்யா இறந்தபின் உடனே வந்தார். அடுத்த ஆண்டுக்கு அவரும் இல்லை...

(மேலும் படிக்க...)