விக்கிரம சோழனுலா

விக்கிமூலம் இலிருந்து

விக்கிரமசோழன் உலா-(மூலம்)[தொகு]

மொத்தம்:342 கண்ணிகள்[தொகு]

கண்ணிகள்: 01 முதல் 112 முடிய[தொகு]

சீர்தந்த தாமரையாள் கேள்வன் றிருவுருக்
கார்தந்த வுந்திக் கமலத்துப் - பார்தந்த 1
ஆதிக் கடவுட் டிசைமுகனு மாங்கவன்றன்
காதற் குலமைந்தன் காசிபனும் - மேதக்க 2
மையறு காட்சி மரீசியு மண்டிலஞ்
செய்ய தனியாழித் தேரோனும் - மையல்கூர் 3
சிந்தனை யாவிற்கு முற்றத் திருத்தேரில்
மைந்தனை யூர்ந்த மறவோனும் - பைந்தடத் 4
தாடு துறையி லடுபுலியும்புல்வாயும்
கூடநீ ரூட்டிய கொற்றவனும் - நீடிய 5
மாக விமானந் தனியூர்ந்த மன்னவனும்
போக புரிபுரிந்த பூபதியும் -மாகத்துக் 6
கூற வரிய மனுக்கொணர்ந்து கூற்றுக்குத்
தேற வழக்குரைத்த செம்பியனும் - மாறழிந் 7
தோடி மறலி யொளிப்ப முதுமக்கட்
சாடி வகுத்த தராபதியும் - கூடார்தம் 8
தூங்கு மெயிலெறிந்த சோழனு மேல்கடலில்
வீங்குநீர் கீழ்கடற்கு விட்டோனும் - ஆங்குப் 9
பிலமதனிற் புக்குத்தன் பேரொளியா னாகர்
குலமகளைக் கைப்பிடித்த கோவும் - உலகறியக் 10
காக்குஞ் சிறபுறவுக் காகக் களிகூர்ந்து
தூக்குந் துலைபுக்க தூயோனும் - மேக்குயரக் 11
கொள்ளுங் குடகக் குவடூ டறுத்திழியக்
தள்ளுந் திரைப்பொன்னி தந்தோனும் - தெள்ளருவிச் 12
சென்னிப் புலியே றிருத்திக் கிரிதிரித்துப்
பொன்னிக் கரைகண்ட பூபதியும் -இன்னருளின் 13
மேதக்க பொய்கை கவிகொண்டு வில்லவனைப்
பாதத் தளைவிட்ட பார்த்திவனும் -மீதெலாம் 14
எண்கொண்ட தொண்ணூற்றின் மேலு மிருமூன்று
புண்கொண்ட வென்றிப் புரவலனும் - கண்கொண்ட 15
கோதிலாத் தேறல் குனிக்குந் திருமன்றம்
காதலாற் பொன்வேய்ந்த காவலனும் - தூதற்காப் 16
பண்டு பகலொன்றி லீரொன் பதுசுரமும்
கொண்டு மலைநாடு கொண்டோனும் - தண்டேவிக் 17
கங்கா நதியுங் கடாரமுங் கைக்கொண்டு
சிங்கா தனத்திருந்த செம்பியனும் - வங்கத்தை 18
முற்று முரணடக்கி மும்மடிபோய்க் கல்யாணி
செற்ற தனியாண்மைச் சேவகனும் - பற்றலரை 19
வெப்பத் தடுகளத்து வேழங்க ளாயிரமும்
கொப்பத் தொருகளிற்றாற் கொண்டோனும் - அப்பழநூல 20
பாடவரத் தென்னரங்க மேயாற்குப் பன்மணியால்
ஆடவரப் பாய லமைத்தோனும் - கூடல 21
சங்கமத்துக் கொள்ளுந் தனிப்பரணிக் கெண்ணிறந்த
துங்கமத யானை துணித்தோனும் - அங்கவன்பின் 22
காவல் புரிந்தவனி காந்தோனு மென்றிவர்கள்
பூவலய முற்றும் புரந்ததற்பின் - மேவலர்தம் 23
சேலைத் துரந்துசிலையைத் தடிந்திருகால்
சாலைக் களமறுத்த தண்டினான் - மேலைக் 24
கடல்கொண்டு கொங்கணமுங் கன்னடமுன் கைக்கொண்
டடல்கொண்ட மாராட் ரானை - உடலை 25
இறக்கி வடவரையே யெல்லையாத் தொல்லை
மறக்கலியுஞ் சுங்கமு மாற்றி - அறத்திகிரி 26
வாரிப் புவனம் வலமாக வந்தளிக்கும்
ஆரிற் பொலிதோ ளபயற்குப் - பார்விளங்கத் 27
தோன்றியகோன் விக்கிரம சோழன் றொடைத்தும்பை
மூன்று முரசு முகின்முழங்க - நோன்றலைய 28
மும்மைப் புவனம் புரக்க முடிகவித்துச்
செம்மைத் தனிக்கோ றிசையளப்பத் - தம்மை 29
விடவுட் படுத்து விழுக்கவிகை யெட்டுக்
கடவுட் களிறு கவிப்பச் - சுடர்சேர் 30
இணைத்தார் மகுட மிறக்கி யரசர்
துணைத்தா ளபிடேகஞ் சூடப் - பணைத்தேறு 31
நீராழி யேழு நிலவாழி யேழுந்தன்
போராழி யொன்றாற் பொதுநீக்கிச் - சீராரும் 32
மேய் திகிரி விரிமே கலையல்குற்
றூய நிலமடந்தை தோள்களினும் - சாயலின் 33
ஓது முலகங்க ளேழுங் தனித்துடைய
கோதில் குலமங்கை கொங்கையினும் - போதில் 34
நிறைகின்ற செல்வி நெடுங்கண் களினும்
உறைகின்ற நாளி லொருநாள் - அறைகழற்காற் 35
றென்னர் திறையளந்த முத்திற் சிலபூண்டு
தென்னர் மலையாரச் சேறணிந்து - தென்னர் 36
வரவிட்ட தென்ற லடிவருட வாட்கண்
பொரவிட்ட பேராயம் போற்ற - விரவிட்ட 37
நித்திலப் பந்தர்க்கீழ் நீணிலாப் பாயலின்மேல்
தொத்தலர் மாலைத் துணைத்தோளும் - மைந்தடங் 38
கண்ணு முலையும் பெரிய களியன்னம்
எண்ணு முலகங்க ளேழுடைய - பெண்ணணங்கு 39
பெய்த மலரோதிப் பெண்சக்ர வர்த்தியுடன்
எய்திய பள்ளி யினிதெழுந்து - பொய்யாத 40
பொன்னித் திருமஞ் சனமாடிப் பூசுரர்கைக்
கன்னித் தளிரறுகின் காப்பணிந்து - முன்னை 41
மறைக்கொழுந்தை வெள்ளி மலைக்கொழுந்தை மோலிப்
பிறைக்கொழுந்தை வைத்த பிரானைக் - கறைக்களத்துச் 42
செக்கர்ப் பனிவிசும்பைத் தெய்வத் தனிச்சுடரை
முக்கட் கனியை முடிவணங்கி - மிக்குயர்ந்த 43

[தொகு]

அலங்காரங்கள் செய்துகொள்ளுதல்
தானத் துறைமுடித்துச் சாத்துந் தகைமையன
மானக் கலன்கள் வரவருளித் - தேன்மொய்த்துச் 44
சூழு மலர்முகத்துச் சொன்மா மகளுடனே
தாழு மகரக் குழைதயங்க - வாழும் 45
தடமுலைப் பார்மடந்தை தன்னுடனே தோளிற்
சுடர்மணிக் கேயூரஞ் சூழப் - படரும் 46
தணிப்பில் பெருங்கீர்த்தித் தைய லுடனே
மணிக்கடகங் கையில் வயங்கப் - பிணிப்பின் 47
முயங்குந் திருவுடனே முந்நீர் கொடுத்த
வயங்கு மணிமார்பின் மல்க - உயங்கா 48
அருங்கொற்ற மாக்கு மணங்கி னுடனே
மருங்கிற் றிருவுடைவாள் வாய்ப்பப் - பொருந்திய 49
அண்ணற் படிவத் தரும்பே ரணியணிந்து
வண்ணத் தளவில் வனப்பமைந்து - கண்ணுதலோன் 50
காமன் சிலைவணங்க வாங்கிய கட்டழகு
தாம முடிவணங்கத் தந்தனைய - காமருபூங் 51

[தொகு]

பட்டத்து யானை
கோலத் தொடும்பெயர்ந்து கோயிற் புறநின்று
காலத் ததிருங் கடாக்களிறு - ஞாலத்துத் 52
தானே முழங்குவ தன்றித் தனக்கெதிர்
வானே முழங்கினுமவ் வான்றடவி - வானுக் 53
கணியு மருப்பு மடற்கையு மின்மை
தணியும் யமராச தண்டம் - தணியாப் 54
பரிய பொருங்கோ டிணைத்துப் பணைத்தற்
கரிய தொருதானே யாகிக் - கரிய 55
மலைக்கோ டனைத்து மடித்திடியக் குத்தும்
கொலைக்கோட்டு வெங்கால கோபம் - அலைத்தோட 56
ஊறு மதந்தனதே யாக வுலகத்து
வேறு மதம்பொறா வேகத்தால் - கூறொன்றத் 57
தாங்கிப் பொறையாற்றாத் தத்தம் பிடர்நின்றும்
வாங்கிப் பொதுநீக்கி மண்முழுதும் - ஓங்கிய 58
கொற்றப் புயமிரண்டாற் கோமா னகளங்கன்
முற்றப் பரித்ததற்பின் முன்புதாம் - உற்ற 59
வருத்த மறமறந்து மாதிரத்து வேழம்
பருத்த கடாந்திறந்து பாயப் - பெருக்கத் 60
துவற்று மதுரச் சுவடிபிடித் தோடி
அவற்றி னபரங்கண் டாறி - இவற்றை 61
அளித்தன னெங்கோமா னாதலா லின்று
களித்தன வென்றுவக்குங் காற்று - நௌித்திழிய 62
வேற்றுப் புலத்தை மிதித்துக் கொதித்தமரில்
ஏற்றுப் பொருமன்ன ரின்னுயிரைக் - கூற்றுக் 63
கருத்து மயிரா பதநின் றதனை
இருத்தும் பிடிபடியா வேறித் - திருத்தக்க 64
கொற்றக் கவிகை நிழற்றக் குளிர்ந்திரட்டைக்
கற்றைக் கவரியிளங் காலசைப்ப - ஒற்றை 65
வலம்புரி யூத வளைக்குல மார்ப்ப
சிலம்பு முரசஞ் சிலம்ப - புலம்பெயர்ந்து 66
வாட்படை கொட்ப மறவன் னவர்நடுங்கக்
கோட்புலிக் கொற்றக் கொடியோங்கச் -சேட்புலத்துத் 67

[தொகு]

உடன் வருவோர்

தென்னரு மாளுவருஞ் சிங்களருந் தேற்றுதகை மன்னருந் தோற்க மலைநாடு - முன்னம் 68

குலையப் பொருதொருநாட் கொண்ட பரணி மலையத் தருந்தொண்டை மானும் - பலர்முடிமேல் 69

ஆர்க்குங் கழற்கா லனகன் றனதவையுள் பார்க்கு மதிமந்த்ர பாலகரிற் - போர்க்குத் 70

தொடுக்குங் கமழ்தும்பை தூசினொடுஞ் சூடக் கொடுக்கும் புகழ்முனையர் கோனும் - முடுக்கரையும் 71

கங்கரையு மாராட் டரையுங் கலிங்கரையும் கொங்கரையு மேனைக் குடகரையும் - தங்கோன் 72

முனியும் பொழுது முரிபுருவத் தோடு குனியுஞ் சிலைச்சோழ கோனும் - சனபதிதன் 73

தோளுங் கவசமுஞ் சுற்றமுங் கொற்றப்போர் வாளும் வலியு மதியமைச்சும் - நாளுமா 74

மஞ்சைக் கிழித்து வளரும் பொழிற்புரிசைக் கஞ்சைத் திருமறையோன் கண்ணனும் - வெஞ்சமத்துப் 75

புல்லாத மன்னர் புலாலுடம்பைப் பேய்வாங்க ஒல்லாத கூற்ற முயிர்வாங்கப் - புல்லார்வம் 76

தாங்கு மடமகளிர் தத்தங் குழைவாங்க வாங்கு வரிசிலைக்கை வாணனும் - வேங்கையினும் 77

கூடார் விழிஞத்துங் கொல்லத்துங் கொங்கத்தும் ஓடா விரட்டத்து மொட்டத்தும் - நாடா 78

தடியெடுத்து வெவ்வே றரசிரிய வீரக் கொடியெடுத்த காலிங்கர் கோனும் - கடியரணச் 79

செம்பொற் பதணஞ் செறியிஞ்சிச் செஞ்சியர்கோன் கம்பக் களியானைக் காடவனும் - வெம்பிக் 80

கலக்கிய வஞ்சக் கலியதனைப் பாரில் விலக்கிய வேணாடர் வேந்தும் - தலைத்தருமம் 81

வாரிக் குமரிமுதன் மந்தா கினியளவும் பாரித் தவனனந்த பாலனும் -பேரமரில் 82

முட்டிப் பொருதார் வடமண்ணை மும்மதிலும் மட்டித்த மால்யானை வத்தவனும் - அட்டையெழக் 83

காதிக் கருநாடர் கட்டரணங் கட்டழித்த சேதித் திருநாடர் சேவகனும் - பூதலத்து 84

முட்டிய தெவ்வர் சடைகட்ட மொய்கழல் கட்டிய காரானை காவலனும் - ஒட்டிய 85

மான வரச ரிரிய வடகலிங்கத் தானை துணித்த வதிகனும் - மீனவர்தம் 86

கோட்டாறுங் கொல்லமுங் கொண்ட குடைநுளம்பன் வாட்டார் மதயானை வல்லவனும் - மோட்டரணக் 87

கொங்கை குலைத்துக் குடகக் குவடிடித்த செங்கைக் களிற்றுத் திகத்தனும் - அங்கத்து 88

வல்லவனுங் கோசலுன மாளுவனு மாகதனும் வில்லவனுங் கேரளனு மீனவனும் - பல்லவனும் 89

என்னும் பெரும்போ ரிகல்வேந்தர் மண்டலிகர் முன்னு மிருமருங்கு மொய்த்தீண்டப் - பன்மணிசேர் 90

[தொகு]

குழாங்கள்

சோதி வயிர மடக்குஞ் சுடர்த்தொடியார் வீதி குறுகுதலு மேலொருநாள் - மாதவத்தோன் 91

சார்ந்த பொழுதனகன் றன்னை யறிவித்த பூந்துவரை யந்தப் புரம்போன்றும் - ஏந்திப் 92

பரக்குங் கலையல்குற் பாவையரே யாணை புரக்குந் திருநாடு போன்றும் - வரக்கருதா 93

ஏனை முனிக்குறும்பு கொல்ல விகன்மாரன் சேனை திரண்ட திரள்போன்றும் - கானலங் 94

கண்டன் மணற்குன்றத் தன்னக் கணம்போன்றும் கொண்டலின் மின்னுக் குழாம்போன்றும் - மண்டும் 95

திரைதொறுந் தோன்றுந் திருக்குழாம் போன்றும் வரைதொறுஞ் சேர்மயில்கள் போன்றும் - விரைவினராய் 96

இந்து நுதல்வெயர்ப்ப வெங்கணுங் கண்பரப்பிச் சிந்தை பரப்பித் தெருவெங்கும் - வந்தீண்டி 97

உத்தி சுடர வொளிமணிச் சூட்டெறிப்பப் பத்தி வயிரம் பரந்தெறிப்ப - முத்தின் 98

இணங்கு மமுத கலசங்க ளேந்தி வணங்கு தலையினராய் வந்து -கணங்கொண்டு 99

பார்க்குங் கொடுநோக்கு நஞ்சுறைப்பக் கிஞ்சுகவாய் கூர்க்கு மெயிறுவெறுங் கோளிழைப்ப - வேர்க்க 100

வரைகொ ணெடுமாடக் கீணிலையின் மல்கி உரக வரமகளி ரொப்பார் - விரல்கவரும் 101

வீணையும் யாழுங் குழலும் விசிமுழவும் பாணி பெயர்ப்பப் பதம்பெயர்த்துச் -சேணுயர் 102

மஞ்சிவரும் வெண்பளிக்கு மாடத் திடைநிலையில் விஞ்சையர் மாத ரெனமிடைவார் - அஞ்சனக் 103

கண்ணிற் சிறிது மிமையாத காட்சியும் மண்ணிற் பொருந்தா மலரடியும் - தண்ணென்ற 104

வாடா நறுஞ்செவ்வி மாலையுங் கொண்டழகு வீடா நிலாமுற்ற மேனிலையிற் - கூடி 105

உருவி னொளியி னுணர்வி னுரையிற் பொருவி லரமகளிர் போல்வார் - அருகணைந்து 106

[தொகு]

குழாங்களின் கூற்று

சீரள வில்லாத் திருத்தோ ளயன்படைத்த பாரள வல்ல பணைப்பென்பார் - பாருமின் 107

செய்ய வொருதிருவே யாளுஞ் சிறுமைத்தோ வைய முடையபிரான் மார்பென்பார் - கையிரண்டே 108

ஆனபோ தந்த முருகவே ளல்லனிவன் வேனில்வேள் கண்டீ ரெனமெலிவார் - யானெண்ணும் 109

எண்ணுக் கிசைய வருமே யிவனென்பார் கண்ணிற் கருணைக் கடலென்பார் - மண்ணளிக்கும் 110

ஆதி மனுகுலமிவ் வண்ணலான் மேம்படுகை பாதியே யன்றா லெனப்பகர்வார் - தாதடுத்த 111

கொங்கை பசப்பார் கோல்வளை காப்பார்போல் செங்கை குவிப்பார் சிலர்செறிய - அங்கொருத்தி 112

== ==[தொகு]

பேதை[தொகு]

வந்து பிறந்து வளரு மிளந்திங்கள்
கொந்து முகிழாக் கொழுங்கொழுந்து - பைந்தழைத் 113
தோகை தொடாமஞ்ஞை சூடுண்டு தோற்றவன்மேல்
வாகை புனைய வளர்கரும்பு - கோகுலத்தின் 114
பிள்ளை யிளவன்னப் பேடை பிறந்தணிய
கிள்ளை பவளங் கிளைத்தகிளை - கள்ளம் 115
தெரியாப் பெருங்கட் சிறுதேற றாயர்ப்
பிரியாப் பருவத்துப் பேதை - பரிவோடு 116
பாவையு மானு மயிலும் பசுங்கிளியும்
பூவையு மன்னமும் பின்போதக் - காவலன் 117
பொன்னிப் புகார்முத்தி னம்மனையுந் தென்னாகை
நன்னித் திலத்தி னகைக்கழங்கும் - சென்னிதன் 118
கொற்றைக் குளிர்முத்த வல்சியுஞ் சோறடுகை
கற்கைக்கு வேண்டுவன கைப்பற்றிப் - பொற்கொடியார் 119
வீதி புகுந்து விளையாடு மெல்லைக்கண்
ஆதி யுகம்வந் தடிக்கொள்ள - மேதினிமேல் 120
ஊன்று கலிகடிந்த வுத்துங்க துங்கன்றன்
மூன்று முரச முகின்முழங்க - வான்றுணைத் 121
தாயர் வரவந்து தாயர் தொழத்தொழுது
தாயர் மொழிந்தனவே தான்மொழிந்தாள் - சேயோன் 122
படியின் மதியும் பகலவனுந் தோற்கும்
முடியி லொருகாலு மூளா - வடிவில் 123
மகிழ்ந்து மலராண் மலர்க்கண்ணு நெஞ்சும்
நெகிழ்ந்த திருநோக்கி னேரா - முகிழ்ந்து 124
சிரிக்குந் திருப்பவளச் சேயொளியூ டாடா
விரிக்குந் திருநிலவின் வீழா - பரிக்கும் 125
உலகம் பரவுந் திருப்புருவத் தோரா
திலக முகாம்புயத்துச் சேரா - பலவும் 126
திசையை நெருக்குந் திருத்தோளிற் செல்லா
இசையுந் திருமார்பத் தெய்தா - வசையிலாக் 127
கைம்மலரிற் போகா வடிமலரின் கண்ணுறா
மெய்ம்மலர்ப் பேரொளியின் மீதுறா - அம்மகள் 128
கண்ணு மனமுங் கழுநீர்க் குலமுழுதும்
நண்ணுந் தொடையன்மே னாட்செய்ய - உண்ணெகிழா 129
வம்மின்க ளன்னைமீர் மாலை யிதுவாங்கித்
தம்மின்க ளென்றுரைப்பத் தாயரும் - அம்மே 130
பெருமானை யஞ்சாதே பெண்ணமுதே யாமே
திருமாலை தாவென்று செல்வேம் - திருமாலை 131
யாங்கொள்ளும் வண்ண மௌிதோ வரிதென்னத்
தேங்கொள்ளு மின்சொற் சிறியாளும் - ஆங்குத்தன் 132
மார்வத்துக் கண்ணினீர் வாரப் பிறர்கொள்ளும்
ஆர்வத்துக் கன்றே யடியிட்டாள் - சேர 133
இருத்தி மணற்சோ றிளையோரை யூட்டும்
அருத்தி யறவே யயர்த்தாள் - ஒருத்தி 134

[தொகு]

பெதும்பை[தொகு]

மழலை தனது கிளிக்களித்து வாய்த்த
குழலி னிசைக்கவர்ந்து கொண்டாள் - நிழல்விரவு 135
முன்னர் நகைதனது முல்லை கொளமுத்தின்
பின்னர் நகைகொண்ட பெற்றியாள் - கன்னி 136
மடநோக்கந் தான்வளர்த்த மானுக் களித்து
விடநோக்கம் வேலிரண்டிற் கொண்டாள் - சுடர்நோக்கும் 137
தானுடைய மெய்ந்நுடக்கந் தன்மா தவிக்களித்து
வானுடைய மின்னுடக்கம் வாங்கினாள் - பூநறும் 138
பாவைகள் பைங்குர வேந்தப் பசுங்கிளியும்
பூவையு மேந்தும் பொலிவினாள் - மேவும் 139
மடநடை யன்னப் பெடைபெறக் கன்னிப்
பிடிநடை பெற்றுப் பெயர்வாள் - சுடர்கனகக் 140
கொத்துக் குயின்ற கொடிப்பவள பந்தத்தின்
முத்துப் பொதியுச்சி முச்சியாள் - எத்திறத்தும் 141
வீரவேள் போல்வாரை வீட்டி விழுத்தவர்மேல்
மாரவேள் கண்சிவப்ப வாய்சிவப்பாள் - நேரொத்த 142
கோங்க முகையனைய கொங்கையா டன்கழுத்தாற்
பூங்கமுகை யிப்போது பொற்பழிப்பாள் - பாங்கியரும் 143

கனாக் கூறுதல்[தொகு]

தாயரும் போற்றாமே தானே துயிலெழுந்து
பாயல் புடைபெயர்ந்து பையச்சென் - றியாயே 144
தளரு மிடையொதுங்கத் தாழுங் குழைத்தாய்
வளரு மொருகுமரி வல்லி - கிளரும் 145
கொழுந்து மளவிறந்த கொந்துங் கவினி
எழுந்து கிளைகலிப்ப வேறித் - தொழுந்தகைய 146
கொங்குடைய பொன்னடருஞ் சென்னிக் கொழுங்கோங்கின்
பங்குடைய மூரிப் பணையணைந்து - தங்குடைய 147
வண்டு முரல மணநாற வைகுவது
கண்டு மகிழ்ந்தேன் கனவிலெனக் - கொண்டு 148
வருக வருக மடக்கிள்ளை முத்தம்
தருக தருகவெனத் தாயர் - பெருக 149
விரும்பினர் புல்லி விரைய முலைவந்
தரும்பின வாகத் தணங்கே - பெரும்புயங்கள் 150
புல்லி விடாத புதுவதுவை சென்னியுடன்
வல்லி பெறுதி யெனவழுத்தும் -எல்லை 151
அரச னபய னகளங்க னெங்கோன்
புரசை மதவரைமேற் போத - முரசம் 152
தழங்கு மறுகிற் றமரோடு மோடி
முழங்கு முகின்மாட முன்றிற் - கொழுங்கயற்கட் 153
பொன்னென வெல்லா வழகும் புனைவதொரு
மின்னென வந்து வௌிப்பட்டு - மன்னருயிர் 154
உண்டாற் றியவேங்கை வைக்க வொருதிருக்கைச்
செண்டாற் கிரிதிரத்த சேவகனைத் - தண்டாத 155
வேகங் கெடக்கலிவாய் வீழ்ந்தரற்றும் பார்மகளைச்
சோகங் கெடுத்தணைத்த தோளானை - ஆகத்துக் 156
கொங்கை பிரியாத வீறோடுங் கேகானக
மங்கை பிரியாத மார்பானை - அங்கமலக் 157
கையு மலரடியுங் கண்ணுங் கனிவாயும்
செய்ய கரிய திருமாலைத் - தையலும் 158
கண்டகண் வாங்காள் தொழமுகிழ்ந்த கைவிடான்
மண்டு மனமீட்கு மாறறியாள் - பண்டறியாக் 159
காமங் கலக்கக் கலங்கிக் குழல்சரியத்
தாமஞ் சரியத் தனிநின்றாள் - நாமவேற் 160
சேரனு மீனவனுஞ் சேவிப்பச் செம்பியரில்
வீரனு மல்வெல்லை விட்டகன்றான் - மாரனும் 161
தக்குத் தகாதாளை யெய்து தரைப்படுத்தப்
புக்குத் தொடைமடக்கிப் போயினான் - மைக்குழல் 162
மங்கைப் பருவத் தொருத்தி மலர்பொதுளுங்
கங்கைப் புளினக் களியன்னம் - எங்கோனை 163
மன்னனை மன்னர் பிரானை வரோதயனை
தென்னனை வானவனைச் செம்பியனை- முன்னொருநாள் 164
கண்ட பெதும்பைப் பருவத்தே தன்கருத்தாற்
கொண்ட பரிவு கடைக்கூட்ட - புண்டரிகச் 165
செய்ய வடிமுதலாச் செம்பொன் முடியளவும்
மைய லகல மனத்திழைத்துக் - கையினால் 166
தீட்டுங் கிழியிற் பகற்கண் டிரவெல்லாம்
காட்டுங் கனவு தரக்கண்டு -நாட்டங்கொண் 167
டியாதொன்றுங் காணா திருப்பாள் பொருகளிற்றுத்
தாதொன்றுந் தொங்கற் சயதுங்கன் - வீதி 168
வருகின்றா னென்று மணியணிகள் யாவும்
தருகென்றாள் வாங்கித் தரித்தாள் - விரிகோதை 169
சூடினாள் பைம்பொற் றுகிலுடுத்தாள் சந்தனச்சே
றாடினா டன்பே ரணியணிந்தாள் - சேடியர் 170

[தொகு]

மங்கை தன்னையே ஐயுறுதல்[தொகு]

காட்டும் படிமக் கமலத்துக் கமலத்த
ஓட்டும் வதனத் தொளிமலர்ந்து - கேட்டு 171
விடைபோ மனங்கன்போல் வேல்விழிக டாமும்
படைபோய் வருவனபோற் பக்கம் - கடைபோய் 172
மறித்து மதர்மதர்த்து வார்கடிப்பு வீக்கி
எறிக்குங் குழைக்காதிற் கேற்றும் - நெறிக்கும் 173
அளக முதலாக வைம்பாற் படுத்த
வளர்கருங் கூந்தன் மலிந்துங் - கிளர 174
அரியன நித்திலத்தி னம்பொற் றோடித்தோள்
பரியன காம்பிற் பணைத்தும் - தெரியற் 175
சுவடு படுகளபத் தொய்யில்சூழ் கொங்கை:
குவடு படவெழுச்சி கொண்டும் - திவடர 176
முந்துங் கலையல்குன் மூரித் தடமகன்றும்
நொந்து மருங்கு னுடங்கியும் - வந்து 177
மிடையும் புதுவனப்பு விண்ணோரும் வீழ
அடையுந் தனதுருக்கண் டஞ்சிக் - கொடையனகன் 178
பண்டறியு முன்னைப் பருவத் துருவத்துக்
கண்டறியு மவ்வடிவு காண்கிலேன் - பண்டறியும் 179
முன்னை வடிவு மிழந்தேன் முகநோக்கி
என்னை யறிகலன்யா னென்செய்கேன் - தன்னை 180
வணங்கி வருவ தறிவ னெனவந்
திணங்கு மகளி ரிடைநின் - றணங்கும் 181
இறைவ னகளங்க னெங்கோன் குமரித்
துறைவ னிருபகுல துங்கன் - முறைமையால் 182
காக்குங் கடல்கடைந்த கைம்மலரு முந்திமலர்
பூக்கு முலகளந்த பொற்கழலும் - நோக்கும் 183
திருக்கொள்ளு மார்பமுந் தெவ்வேந்த ரெல்லாம்
வெருக்கொள்ளு மூரித்தோள் வெற்பும் - உருக்கும் 184
மகரக் குழைக்காது மாதரார் மாமை
நுகரப் புடைபெயரு நோக்கும் - துகிரொளியை 185
வௌவிய கோல மணிவாயு மெப்பொழுதும்
செவ்வி யழியாத் திருமுகமும் - எவ்வுருவும் 186
மாறுபடா வண்ணமுந்தன் வண்ணப் படிவத்து
வேறு படுவனப்பு மெய்விரும்பித் -தேறிப் 187
பிறையாம் பருவத்துப் பேருவகை யாம்பல்
நிறையா மதிக்கு நெகிழ்ந்தாங் - கிறைவனைக் 188
கண்டு மனமு முயிருங் களிப்பளவிற்
கொண்டு பெயர்ந்து கொல்யானை - பண்டு 189
நனவு கிழியிற் பகற்கண்டு நல்ல
கனவு தரவிரவிற் கண்டு - மனமகிழ்வாள் 190
தீட்ட முடியாத செவ்வி குறிக்கொள்ளும்
நாட்ட முறங்கா மையுநல்க - மீட்டுப் 191
பெயர்ந்தா டமர்தம் பெருந்தோள் களில்வீழ்ந்
தயர்ந்தா ளவணிலையீ தப்பாற் - சயந்தொலைய 192

[தொகு]

மடந்தை[தொகு]

வெந்து வடிவிழந்த காமன் விழிச்சிவப்பு
வந்து திரண்டனைய வாயினாள் - அந்தமில் 193
ஓலக் கடலேழு மொன்றா யுலகொடுக்கும்
காலக் கடையனைய கட்கடையாள் - ஞாலத்தை 194
வீட்டி வினைமுடிக்க வெங்கால தூதுவர்கள்
கோட்டி யிருக்குங் குவிமுலையாள் - நாட்ட 195
வடிவின் மருங்குலான் மாரனைப்போன் மேலோர்
முடிவு லுணர்வை முடிப்பாள் - கடிதோடிப் 196
போகா தொழியா திடையென்று போய்முடியல்
ஆகாமை கைவளரு மல்குலாள் - பாகாய 197

[தொகு]

பந்தாடுதல்

சொல்லி யொருமடந்தை தோழியைத் தோள்வருந்தப் புல்லி நிலாமுற்றம் போயேறி - வல்லிநாம் 198

சேடிய ரொப்ப வகுத்துத் திரள்பந்து கோடியர் கண்டுவப்பக் கொண்டாடி - ஓடினால் 199

என்மாலை நீகொள்வ தியாங்கொள்வ தெங்கோமான் தன்மாலை வாங்கித் தருகென்று - மின்னனையான் 200

வட்டித் தளகமுங் கொங்கையும் வார்தயங்கக் கட்டிக் கனபந்து கைப்பற்றி - ஒட்டிப் 201

பொருதிறத்துச் சேடியர்தம் போர்தொலையத் தானே இருதிறத்துக் கந்துகமு மேந்திப் - பெரிதும் 202

அழுந்து தரளத் தவைதன்னைச் சூழ விழுந்து மெழுந்து மிடைய - எழுந்துவரி 203

சிந்த விசிறு திரையி னுரையூடு வந்த வனச மகளேய்ப்ப - முந்திய 204

செங்காந்த ளங்கை சிவக்குஞ் சிவக்குமென் றங்காந்து தோள்வளைக ளார்ப்பெடுப்பத் - தங்கள் 205

நுடங்குங் கொடிமருங்கு னொந்தசைந்த தென்றென் றடங்குங் கலாப மரற்றத் - தொடங்கி 206

அரிந்த குரலினவா யஞ்சீ றடிக்குப் பரிந்து சிலம்பு பதைப்ப - விரிந்தெழும் 207

கைக்கோ விடைக்கோ கமல மலரடிக்கோ மைக்கோல வோதியின்மேல் வண்டிரங்க - அக்கோதை 208

பந்தாடி வென்று பருதி யகளங்கன் சந்தாடு தோண்மாலை தாவென்று - பைந்துகிற் 209

றானை பிடித்தலைக்கும் போதிற் றனிக்குடைக்கீழ் யானைமேல் வெண்சா மரையிரட்டச் - சேனை 210

மிடையப் பவளமு நித்திலமு மின்ன அடையப் பணிலங்க ளார்ப்ப - புடைபெயர 211

வார்ந்து மகர வயமீன் குலமுழுதும் போந்து மறுகு புடைபிறழச் - சேர்ந்து 212

பதலை முழங்கப் பகட்டேற்றி விட்ட மதலைகண் முன்னர் மலிய - விதலையராய்த் 213

தாழுந் தொழிலிற் கிளைபுரக்கத் தன்னடைந்து வாழும் பரதர் மருங்கீண்ட - வீழுந்திக் 214

கன்னியு நன்மதையுங் கங்கையுஞ் சிந்துவும் பொன்னியுந் தோயும் புகார்விளங்க - மன்னிய 215

செங்கோற் றியாக சமுத்திர நண்ணுதலும் தங்கோ மறுகிற் றலைப்பட்டுத் - தங்களில் 216

ஒட்டிய வொட்ட முணராதே தோள்வளையும் கட்டிய மேகலையுங் காவாதே - கிட்டித் 217

தொழுதா ளயர்ந்தா டுளங்கினாள் சோர்ந்தாள் அழுதா ளொருதமிய ளானாள் - பழுதிலாக் 218

காக்குந் துகிலு மிலங்கு பொலன்கலையும் போக்கு நிதம்பம் புனைகென்று - வீக்கும் 219

மணிக்கச்சுந் தம்முடைய வான்றூசுங் கொங்கை பணிக்கக் கடைக்கண் பாரா - அணிக்கமைந்த 220

குன்றாத நித்திலக் கோவையும் பொன்னிறத்த பொன்றாத பட்டும் புனைகென்று - நின்று 221

கொடுத்தன கொங்கைகளுங் கொண்டன தானும் அடுத்தனர் தோண்மே லயர்ந்தாள் -கடுத்துக் 222

கவரு மனங்கனுடன் கைகலந்த தன்றித் தவரு முதுகிளவித் தாய - ரவரெங்கும் 223

கூசினார் சந்தம் பனிநீர் குழைத்திழைத்து பூசினா ராலி பொழிந்தொழிந்தார் - வீசினார் 224

இட்டார் நிலவி லிளந்தென் றலுங்கொணர்ந்து சுட்டார் குளரி தொகுத்தெடுத்தார் - விட்டாரோ 225

பள்ள மதனிற் படரும் பெரும்புனல்போல் உள்ள முயிரை யுடன்கொண்டு -வள்ளல்பின் 226

ஓதை மறுகி லுடன்போன போக்காலிப் பேதை நடுவே பிழைத்தொழிந்தாள் - மாதரில் 227

[தொகு]

அரிவை

வாரி படுமமுத மொப்பாண் மதுகரஞ்சூழ் வேரி கமழ்கோதை வேறொருத்தி - மூரித்தேர்த் 228

தட்டுஞ் சிறுகப் பெருகி மரகதத்தாற் கட்டுங் கனபொற் கலாபாரம் - பட்டும் 229

துகிலுங் கரப்பச் சுடர்பரப்பக் கைபோய் அகில்கின்ற வல்கு லரிவை - இகலி 230

ஒருக்கி மருங்குகடிந் தொன்றினைவந் தொன்று நெருக்கிய மாமை நிரம்பித் - தருக்கி 231

இடங்கொண்டு மின்னுக் கொடியொன் றிரண்டு குடங்கொண்டு நின்றதெனக் கூறத் - தடங்கொண் 232

டிணைத்துத் ததும்பி யிளையோர்க ணெஞ்சம் பிணைத்துத் தடமுகட்டிற் பெய்து - பணைத்துப் 233

பெருமை யுவமை பிறங்கொலிநீர் ஞாலத் தருமை படைத்ததனத் தன்னம் - கருமை 234

எறித்துக் கடைபோ யிருபுடையு மெல்லை குறித்துக் குழையளவுங் கொண்டு -மறித்து 235

மதர்த்து வரிபரந்து மைந்தர் மனங்கள் பதைத்து விழநிறத்திற் பட்டுத் - ததைத்த 236

கழுநீர் மலரின் கவினழித்து மானின் விழிநீர்மை வாய்த்த விழியாள் - முழுதும் 237

நெறிந்து கடைகுழன்று நெய்த்திருண்டு நீண்டு செறிந்து பெருமுருகு தேக்கி - நறுந்துணர் 238

வார்ந்து கொழுந்தெழுந்த வல்லியாய் மாந்தளிர் சோர்ந்து மிசையசைந்த சோலையாய்ச் - சேர்ந்து 239

திருவிருந்து தாமரையாய்ச் சென்றடைந்த வண்டின் பெருவிருந்து பேணுங் குழலாள் - பொருகளிற்றின் 240

வந்து மறுகி லொருநாண் மனுகுலத்தோன் தந்த பெரிய தனிமைக்கண் - செந்தமிழ்க் 241

கோனே கவர்ந்தெம்மைக் கொண்டனன் வந்தெமக்குத் தானே தரிற்றருக வென்பனபோல் - பூநேர் 242

இணைக்கையுந் தோளு மிடுதொடிக ளேந்தா துணைக்கண் டுயிற்றத் துயிலா - மணிக்கூந்தல் 243

போது மறந்தும் புனையா பொலங்கச்சு மீது படத்தரியா வெம்முலைகள் - சோதி 244

அடுக்குங் கனபொற் றுகில்பேணா தல்குல் கொடுக்குங் தெருணெஞ்சு கொள்ளா - தெடுக்கும் 245

கருப்புச் சிலையனங்கன் கையம்பால் வீழும் நெருப்புக் குருகி நிறைபோய் - இருப்புழிப் 246

பாடிய பூவைக்கும் யாதும் பரிவின்றி ஆடிய தோகைக்கு மன்பின்றிக்- கூடிய 247

கிள்ளைக்குந் தம்மிற் கிளரு மிளவன்னப் பிள்ளைக்குகு மாற்றான் பெயர்ந்துபோய்க் - கொள்ளை 248

பயக்கு மலர்க்குரவப் பந்தர்ப் படப்பை நயக்கு மிளமரக்கா நண்ணி - வயக்களிற்று 249

மன்னன் குலப்பொன்னி வைகலு மாடுதிரால் அன்னங்கா ணீரென் றழிவுற்றும் - சென்னி 250

பெருகும் புகாரடையப் பெற்றீரான் மற்றைக் குருகுகா ளென்று குழைந்தும் - கருகிய 251

நீலக் குயிலினங்கா ணீர்போலுஞ் சோணாட்டுச் சோலைப் பயில்வீ ரெனத்துவண்டும் - பீலிய 252

பேரியன் மஞ்ஞை பெறுதிராற் கொல்லியும் நேரியுஞ் சேர வெனநெகிழ்ந்தும் - நேரியன் 253

தண்டுணர்ப்பே ராரம் பலகாலுந் தைவந்து வண்டுகாள் வாழ்வீ ரெனமருண்டும் - தொண்டிக்கோன் 254

மன்றன் மலயத்து வாளருவி தோய்ந்தன்றே தென்றல் வருவ தெனத்திகைத்தும் - நின்றயர்கால் 255

மன்னர்க்கு மன்னன் வளவ னகளங்கள் முன்னர்ப் பணில முழங்குதலும் - மின்னிற்போய் 256

பேணுந் திருமடனு மென்றும் பிரியாத நாணும் பெருவிருப்பா னல்கூரக் - காணுங்கால் 257

ஏய்ப்ப வெதிர்வந்து விரவி யுருவவொளி வாய்ப்ப முகபங் கயமலர்ந்தாள் - போய்ப்பெருகும் 258

மீதா ரகலல்குல் வீழ்கின்ற மேகலையும் போதாத வண்ணம் புடைபெயர்ந்தாள் - சோதி 259

குழைய நடுவொடுக்குங் கொங்கையுந் தோளும் பழைய படியே பணைத்தான் - பிழையாத 260

பொன்னித் துறைவன் பொலந்தார் பெறத்தகுவார் தன்னிற் பிறரின்மை சாதித்தாள் - சென்னிக்குப் 261

பாராண் முலையாலும் பங்கயத்தா டோளாலும் வாரா விருப்பு வருவித்தான் - ஓராங்கு 262

[தொகு]

தெரிவை

கோது விரவாக் கொழும்பாகு கொய்தளிரீன் போது புலராப் பொலங்கொம்பு - மீது 263

முயலா லழுங்கா முழுத்திங்கள் வானிற் புயலா லழுங்காப் புதுமின் - இயல்கொண் 264

டெழுதாத வோவிய மேழிசைய வண்டு கொழுதாத கற்பகத்தின் கொம்பு - முழுதும் 265

இருளாக் கலாபத் திளந்தோகை யென்றும் தெருளாக் களியளிக்குந் தேறல் - பொருளால் 266

வருந்தக் கிடையாத மாணிக்கம் யார்க்கும் அருந்தத் தெவிட்டா வமுதம் - திருந்திய 267

சோலைப் பசுந்தென்ற றூதுவர வந்தி மாலைப் பொழுதுமணி மண்டபத்து - வேலை 268

விரிந்த நிலாமுன்றில் வீழ்மகரப் பேழ்வாய் சொரிந்த பனிக்கற்றை தூங்கப் - பரிந்துழையோர் 269

பூசிய சாந்தங் கமழப் பொறிவண்டு மூசிய மௌவன் முருகுயிர்ப்பத் - தேசிகப் 270

பேரிசை யாழ்ப்பாணன் பேதை விறலியொடும் சேர வினிதிருந்த செவ்விக்கண் - நேரியும் 271

[தொகு]

தசாங்கம்

கோழியும் வேங்கையு முப்பணையுங் கோரமும் பாழி யயிரா பதப்பகடும் - ஆழியான் .272

சூடிய வாரமு மாணையுஞ் சோணாடும் காடு திரைத்தெறியுங் காவிரியும் - பாடுகென 273

கூன லியாழெடுத்தான் பாணன் கொதித்தெழுந்து வேன லரசனுந்தன் வில்லெடுத்தான் - தேனியிர் 274

தந்திரி யாழ்ப்பாணன் றைவந்தான் றைவந்தான் வெந்திறன் மாரனுந்தன் வில்லினாண் - முந்த 275

நிறைநரம்பு பண்ணி நிலைதெரிந்தான் பாணன் திறன்மதனு மம்பு தெரிந்தான் - விறலியொடும் 276

பாண னெருபாணி கோத்தான் பலகோத்தான் தூணி தொலையச் சுளிந்துவேள் - மாண 277

இசைத்தன பாண னியாழ்ப்பாணி யெய்து விசைத்தன வேனிலான் பாணி - விசைத்தெழுந்த 278

வீணை யிசையாலோ வேனிலா னம்பாலோ வாணுதல் வீழா மதிமயங்காச் - சேணுலாம் 279

வாடை யனைய மலயா நிலந்தனையும் கோடை யிதுவென்றே கூறினான் - நீடிய 280

வாரை முனிந்த வனமுலைமேல் விட்டபனி நீரை யிதுவோ நெருப்பென்றான் - ஊரெலாம் 281

காக்குந் துடியை யழிக்குங் கணைமாரன் தாக்கும் பறையென்றே சாற்றினாள் - சேக்கைதொறும் 282

வாழு முலகத் தெவரு மனங்களிப்ப வீழு நிலவை வெயிலென்றாள் - கோழிக்கோன் 283

எங்கோ னகளங்க னேழுலகுங் காக்கின்ற செங்கோல் கொடுங்கோல் சிலர்க்கென்றான் - கங்குல் 284

புலருந் தனையும் புலம்பினா ளாங்குப் பலரும் பணிந்து பரவக் - குலகிரிசூழ் 285

ஆழிப் புவன மடைய வுடையபிரான் சூழிக் கடாயானை தோன்றுதலும் -யாழின் 286

[தொகு]

யானையை நோக்கிக் கூறுதல்

இழைக்கு மிசைமுதலா மெப்பகைக்கு மாற்றா துழைக்கு முயிர்தழைப்ப வோடிப் - பிழைத்னளாய் 287

முட்டுந் திகிரி கிரியின் முதுமுதுகிற் கட்டுங் கடவுட் கடாயானை - யெட்டும் 288

தரிக்கு முலகந் தனிதரித்த கோனைப் பரிக்கு மயிரா பதமே - செருக்கிப் 289

பொருந்த நினையாத போர்க்கலிங்க ரோடி இருந்த வடவரைக ளெல்லாம் - திருந்தா 290

விதையம் பொருதழிந்த விந்தமே போலப் புதைய நடந்த பொருப்பே - சிதையாாத 291

திங்கட் குலத்திற்குந் தெய்வப் பொதியிற்கும் அங்கட் பழங்குமரி யாற்றிற்கும் - தங்கள் 292

படிக்கும் பொருநிருப பன்னகங்கள் வீழ இடிக்குந் தனியசனி யேறே - கடிப்பமைந்த 293

யாம முரசா லிழந்த நிறைநினது தாம முரசு தரப்பெற்றேன் - நாம 294

விடைமணி யோசை விளைத்தசெவிப் புண்ணின் புடைமணி யோசைப் புலர்ந்தேன் - தடைமுலைமேல் 295

ஆறா மலயக்கா லட்டசூ டுன்செவியில் மாறாப் பெருங்காற்றான் மாற்றினேன் - வேறாகக் 296

கூசும் பனித்திவலை கொண்டுபோ மென்னுயிர்நீ வீசு மதத்திவலை யான்மீட்டேன் - மூசிய 297

காருலா மோதக் கடல்முழங்க வந்ததுயர் நேரிலா நீமுழங்க நீங்கினேன் - பேரிரவில் 298

என்மே லனங்கன் பொரவந்த வின்னலெல்லாம் நின்மே லன்கன்வர நீங்கினேன் - இன்னும் 299

கடைபோல வென்னுயிரைக் காத்தியேல் வண்டு புடைபோகப் போதும் பொருப்பே - விடைபோய்நீ 300

ராட்டுந் தடங்கலக்கின் மாரற் கயில்வாளி காட்டுந் தடமே கலக்குவாய் - கேட்டருளாய் 301

கார்நாணு நின்கடத்து வண்டொழியக் காமனார் போர்நாணின் வண்டே புடைத்துதிர்ப்பாய் - பார்நாதன் 302

செங்கைக் கரும்பொழியத் தின்கைக் கனங்கனார் வெங்கைக் கரும்பே விரும்புவாய் - எங்கட் 303

குயிரா யுடலா யுணர்வாகி யுள்ளாய் அயிரா பதமேநீ யன்றே - பெயராது 304

நிற்கண்டா யென்றிரந்து நின்றா ணுதலாக விற்கொண்ட பேரிளம்பெண் வேறொருத்தி - கொற்கையர்கோன் 305

[தொகு]

பேரிளம் பெண்

மல்லற் புயத்தினகன் மால்யானைக் கைபோலக் கொல்லத் திரண்ட குறங்கினாள் - எல்லையில் 306

கோடுங் கொலைகுயின்ற சேடன் குருமணிவேய்ந் தாடும் படமனைய வல்குலான் - சேடியாய்த் 307

தம்மை யெடுக்கு மிடைகடிந்த தம்பழிக்குக் கொம்மை முகஞ்சாய்த்த கொங்கையாள் - செம்மை 308

நிறையு மழகா னிகரழித்துச் செய்யாள் உறையு மலர்பறிப்பா ளொப்பாள்ன் - நறைகமழும் 309

மாலை பலபுனைந்து மான்மதச் சாந்தெழுதி வேலை தருமுத்த மீதணிந்து - சோலையில் 310

மானு மயிலு மனைய மடந்தையரும் தானு மழகு தரவிருப்பத் - தேனிமிர் 311

ஊற விளம்பாளை யுச்சிப் படுகடுந் தேறல் வழிந்திழிந்த செவ்விக்கண் - வேறாக 312

வாக்கி மடனிறைத்து வண்டு மதுநுரையும் போக்கி யொருத்தி புகழ்ந்துகா - நோக்கி 313

வருந்திச் சிறுதுள்ளி வள்ளுகிரா வெற்றி அருந்தித் தமர்மே லயர்ந்தாள் - பொருந்தும் 314

மயக்கத்து வந்து மனுதுங்க துங்கன் நயக்கத் தகுங்கனவு நல்கும் - முயக்கத்து 315

மிக்க விழைவு மிகுகளிப்பு மத்துயிலும் ஒக்க விகல வுடனெழுந்து - பக்கத்து 316

வந்து சுடரு மொருபளிக்கு வார்சுவரில் தந்த தனதுநிழ றானோக்கிப் - பைந்துகிர்க் 317

காசுசூ ழல்குற் கலையே கலையாகத் தூசு புடைபெயர்ந்து தோணெகிழ்ந்து - வாசஞ்சேர் 318

சூடிய மாலை பரிந்து துணைமுலைமேல் ஆடிய சாந்தி னணிசிதைந்து - கூடிய 319

செவ்வாய் விளர்ப்பக் கருங்கண் சிவப்பூர வெவ்வா ணுதலும் வெயரரும்ப - இவ்வாறு 320

கண்டு மகிழ்ந்த கனவை நனவாகக் கொண்டு பலர்க்குங் குலாவுதலும் - வண்டுசூழ் 321

வேரிக் கமழ்கோதை வேறாகத் தன்மனத்திற் பூரித்த மெய்யுவகை பொய்யாகப் - பாரித்த 322

தாமக் கவிகை நிழற்றச் சயதுங்கன் நாமக் கடாக்களிற்று நண்ணுதலும் - தேமொழியும் 323

கண்டதுங் கெட்டேன் கனவை நனவாகக் கொண்டது மம்மதுச்செய் கோலமே - பண்டுலகிற் 324

செய்த தவஞ்சிறிது மில்லாத தீவினையேற் கெய்த வருமோ விவையென்று - கைதொழுது 325

தேறி யொருகாலுந் தேறாப் பெருமையல் ஏறி யிரண்டா வதுமயங்கி - மாறிலாத் 326

தோழியர் தோண்மே லயர்ந்தாளத் தோழியரும் ஏழுயர் யானை யெதிரோடி - ஆழியாய் 327

மாடப் புகாருக்கும் வஞ்சிக்குங் காஞ்சிக்கும் கூடற்குங் கோழிக்குங் கோமானே - பாடலர் 328

சாருந் திகிரி தனையுருட்டி யோரேழு பாரும் புரக்கும் பகலவனே - சோர்வின்றிக் 329

காத்துக் குடையொன்றா லெட்டுத் திசைகவித்த வேத்துக் குலகிரியின் மேருவே - போர்த்தொழிலால் 330

ஏனைக் கலிங்கங்க ளேழனையும் போய்க்கொண்ட தானைத் தியாக சமுத்திரமே - மானப்போர் 331

இம்ப ரெழுபொழில் வட்டத் திகல்வேந்தர் செம்பொன் மவுலிச் சிகாமணியே - நம்பநின் 332

பாரிற் படுவன பன்மணியு நின்கடல் நீரிற் படுவன நித்திலமும் - நேரியநின் 333

வெற்பில் வயிரமும் வேந்தநின் சோணாட்டுப் பொற்பின் மலிவன பூந்துகிலும் - நிற்பணியக் 334

கொண்டா யிவடனது கொங்கைக் கொழுஞ்சுணங்கும் தண்டா நிறையுந் தளிர்நிறமும் - பண்டைத்

துயிலுங் கவர்ந்ததுநின் தொல்குலத்து வேந்தர் பயிலுந் திருநூற் படியோ - புயல்வளவ 336

மன்னிய தொண்டை வளநாடு வாளியும் பொன்னி வளநாடு பூஞ்சிலையும் - கன்னித் 337

திருநாடு தேருங் குறையறுப்பச் செய்தால் திருநாண் மடமகளிர் தம்மை - ஒருநாளவ் 338

வேனற் கரசன் விடுமே யவன்சினமிப் பானற்கண் ணல்லா ளுயிர்ப்பரமே - ஆனக்கால் 339

குன்றே யெனத்தகுநின் கோபுரத்திற் றூங்குமணி ஒன்றே யுலகுக் கொழியுமே - என்றினைய 340

கூறி வணங்கிடு மிவ்வளவுங் கோதையர்மேற் சீறி யனங்கன் சிலைவளைப்ப - மாறழியக் 341

குத்துங் கடாக்களிற்றுப் போந்தான் கொடைச்சென்னி உத்துங்க துங்க னுலா. 342

வெண்பா[தொகு]

கையு மலரடியுங் கண்ணுங் கனிவாயும்
செய்ய கரிய திருமாலே - வையம்
அளந்தா யகளங்கா வாலிலைமேற் பள்ளி
வளர்ந்தாய் தளர்ந்தாளிம் மான்.

விக்கிரம சோழனுலா முற்றிற்று

"https://ta.wikisource.org/w/index.php?title=விக்கிரம_சோழனுலா&oldid=7405" இலிருந்து மீள்விக்கப்பட்டது