விந்தன் கதைகள் 2/அன்பும் அதிகாரமும்

விக்கிமூலம் இலிருந்து

அன்பும் அதிகாரமும்

பாதுஷா லில்லாவின் பிறந்த நாளை முன்னிட்டு அன்று ஆப்கானிஸ்தானமே ஒரே கோலகலமாகக் காட்சியளித்தது. தங்களுடைய அன்பையும் ஆசீர்வாதத்தையும் பாதுஷாவிடம் தெரிவித்துக் கொள்வதற்காக மந்திரிப் பிரதானிகள், சேனாதிபதிகள், ஜாகீர்தார்கள், கலைஞர்கள், கவிஞர்கள் எல்லோரும் அன்று ராஜ சபையில் பிரசன்னமாயிருந்தனர். ராணி ஜிஜியாவுடன் லில்லாவும் வந்து சிம்மாசனத்தில் அமர்ந்து விட்டான். கவி இஸாவை மட்டும் அதுவரை காணவில்லை.

பாதுஷாவின் புருவங்கள் சற்றே நெரிந்தன. அதே சமயத்தில் கவி இஸா ராஜ சபைக்குள் பிரவேசித்தான். என்றுமில்லாதபடி அன்று ஒரு மானும் அவனைப் பின்தொடர்ந்து வந்தது. சின்னஞ்சிறுகுட்டி முதல் கட்டி வளர்க்காத அந்தமானை - பலாத்காரத்தின் துணை அணுவளவுமின்றி அன்பின் துணை ஒன்றையே பிரதானமாகக் கொண்டு அன்று வரை வளர்த்து வந்த 'அல்லா' என்ற அந்த அருமை மானை - அன்று தான் முதன் முதலாக அரண்மனைக்குத் தன்னுடன் அழைத்துக் கொண்டு வந்திருந்தான் இஸா.

அந்த மானைக் கண்ட மாத்திரத்தில் தன் மனதை அதனிடம் பறி கொடுத்து விட்டாள் ராணி ஜிஜியா. அவ்வளவுதான்! அவளுடைய அதரங்கள் ஒரு கணம் அரசனின் காதருகே சென்று ஏதோ முணுமுணுத்தன; அடுத்த கணம் பாதுஷாவின் முகத்தில் ஒர் அலட்சியப் புன்னகை மின்னி மறைந்தது.

இந்தக் காட்சியை கண்டதும் இஸாவுக்கு விஷயம் ஒருவாறு புரிந்துவிட்டது - அரசனாயிருக்கட்டும், அல்லது அவள் வேறு யாராகவாவது இருக்கட்டும் - அதிகாரத்திமிரையும், செல்வச் செருக்கையும் துணையாகக் கொண்டு, உலகத்தில் சகல விதமான காரியத்தையும் சாதித்துக் கொள்ளப் பார்க்கும் அக்கிரமம் இஸாவுக்கு எப்பொழுதுமே பிடிப்பதில்லை. ஆகவே, ராணி ஜிஜியாவின் ஆக்கிரமிக்கும் ஆசையும், பாதுஷாவின் அலட்சியப் புன்னகையும் அவனுக்கு அடக்க முடியாத ஆத்திரத்தையளித்தன.

அவன் எதிர்பார்த்தபடியே அடுத்த கணம் "இஸா...!" என்று அவனை அலட்சியமாக அழைத்தான் பாதுஷா. அப்பொழுது, அவனுடைய வலது கண்ணும் வலதுபக்கத்து மீசையும் சற்றே உயர்ந்து தாழ்ந்தன.

தன் உள்ளத்தில் பொங்கி வந்த உணர்ச்சிகளை யெல்லாம் ஒருவாறு அடக்கிக் கொண்டு, "ஷாஹுன்ஷா!" என்றுதன் ஆசனத்தை விட்டு எழுந்து வந்து சம்பிரதாயப்படி அரசனின் முன்னால் நின்றான் கவி.

"உன்னுடைய மானிடம்..." என்றான் பாதுஷா. தான் சொல்ல வந்ததை சொல்லி முடிக்கு முன்னரே, “என்னுடைய மான் இல்லை, மகராஜ்! அல்லாவினுடையது!" என்று அடித்துச் சொன்னான் கவி.

"தெரியும்; ஜிஜியா அந்த மானிடம் தன் மனதைப் பறிகொடுத்து விட்டாள்..."

"இருக்கலாம்; ஆனால் அந்த மானும் தன் மனதை ராணியிடம் பறி கொடுக்க வேண்டுமே!" என்றான் கவி.

பாதுஷாவின் கண்கள் 'ஜிவ்' வென்று சிவந்தன. அவன் கலகலவென்று பயங்கரமாகச் சிரித்தான். ராஜசபையில் பிரச்சன்னமாயிருந்தவர்களின் விழிகளெல்லாம் மிரண்டு விழித்தன.

"என்ன சொல்கிறாய்? ஜிஜியா அந்த மானை அடையவேண்டுமென்றால் அவளிடம் அது தன் மனதைப் பறி கொடுக்க வேண்டுமோ? - பேஷ், நன்றாயிருக்கிறது! - கழுத்தில் விலங்கைப் போட்டால் தானே மனதைப் பறி கொடுத்து விட்டுப் போகிறது!”

அவ்வளவுதான்; அரசனின் முன்னால் கவி தன் இரு கரங்களையும் அலட்சியமாக நீட்டி "இந்த கைகளில் விலங்கிடுவதற்கு முன்னால் அந்தமானின் கழுத்தில் விலங்கிடுவது யாராலும் முடியாத காரியம் பாதுஷா!" என்றான்.

வில்லாவின் கண்களில் தீப்பொறி பறந்தது. "என்ன என்னால் கூடவாமுடியாது!":என்றான்ஆச்சரியத்துடனும் அவமானத்துடனும்.

"என்னைப் பொறுத்தவரையில் எல்லோரையும் சமமாகத் தான் பாவிக்கிறேன், பாதுஷா!" என்றான் இஸா.

"கடைசி தடவையாகக் கேட்கிறேன்; என்னுடைய கோபத்துக்கு ஆளாக வேண்டாம்..."

"அல்லாவின் கோபத்தைத் தவிர வேறு யாருடைய கோபத்துக்கும் நான் அஞ்சுவதில்லை!"

வி.க. -36 கவியின் அஞ்சாநெஞ்சம் அரசனின் அதிகாரத் திமிரைக்கூட ஒர் அசக்கு அசக்கிவிட்டது. "வேறு வழி?" என்று கேட்டுக் கொண்டே அவன் இஸாவை ஏற இறங்கப் பார்த்தான்.

"வேண்டுமானால் அதை 'அரே அல்லா, வா!' என்று ராணியைக் கூப்பிடச் சொல்லுங்கள்; வந்தால் நான் அதைத் தடுக்க மாட்டேன்!” என்றான் இஸா.

பாதுஷா, ராணியின் முகத்தைப் பார்த்தான்; அவளும் குறிப்பறிந்து 'அரே அல்லா வா!' என்று அந்த மானை அன்புடன் அழைத்தாள்.

அதுவரை தன் இரு நீண்ட காதுகளையும் உயர்த்தி வளைத்து அவள் சொல்வதைத் தன் அகன்ற விழிகளால் கவனித்துக் கொண்டிருந்த 'அல்லா' உடனே கவி இஸாவுக்குப் பின்னால் சென்று மறைந்து கொண்டது. முகத்தில் புன்னகை தவழ, அந்த மானை அன்புடன் துக்கி மார்புடன் அணைத்துக் கொண்டான் கவி.

அன்பால் பிணைக்கப்பட்டிருந்த அந்த இரு ஜீவன்களுக்கு முன்னால் அரசனின் ஆணவமும் கொஞ்சம் ஒடுங்கிற்று. "ஆயிரம் மோகராக்கள் தருகிறேன்! மானைக் கொடுத்துவிடு!" என்றான்.

"அந்த மோகராக்களும் உமக்குச் சொந்தமில்லை; இந்த மானும் எனக்குச் சொந்தமில்லை; உலகத்தில் இருக்கும் எல்லாப் பொருளுமே உண்மையில் அல்லாவினுடையவையல்லவா? அவற்றில் எதையாவது விற்கவோ வாங்கவோ நமக்கு என்ன உரிமையிருக்கிறது?" என்று கேட்டான் கவிஇஸா.

பாதுஷா பொறுமையிழந்தான். "என்ன உளறுகிறாய்? நான் யார் என்று தெரியவில்லையா?" என்று அனலைக் கக்கினான்.

"தெரியாமலென்ன...!"

"தெரிந்தால் உடனே மானைக் கொடுத்து விடு; மன்னித்து விடுகிறேன்!"

"என்னை மன்னிக்கக் கூடியவர் ஒரே ஒருவர் தான் உண்டு; அவர்தான் அல்லா!" என்றான் கவி. அரண்மனையின் முகட்டை நோக்கி.

"ஹா!" என்றான் பாதுஷா. அவன் கை உடைவாளை உருவ விரைந்தது. அதற்குள் என்ன நினைத்தானோ என்னமோ, "இவனைக் கொண்டு போய்ச் சிறையில் தள்ளுங்கள்!" என்றான்.

அடுத்த கணமே அவருடைய ஆக்கினை நிறைவேற்றி வைக்கப்பட்டது.

இருள் கவிந்த சிறையிலே, காலைக் கதிரவனையும் மாலை மதியையும், பனி மூடிய மலைத் தொடர்களையும், மலர் நிறைந்த சோலைகளையும், வானளாவிய மரங்களையும் வானம்பாடிக் குருவிகளையும் கவி இஸா காண முடியுமா? - அவற்றையெல்லாம் காணாமல் அவன் கவி இதயம் வெடித்து விடும் போலிருந்தது. ஆனாலும் சிறையின் ஜன்னல் வழியே பார்க்க முடிந்த அவனுடைய அருமை மான், அன்பைக் கவர்ந்த மான், அரண்மனை உத்தியான வனத்தில் கழுத்தில் விலங்கிடப்பட்டுக் கண்ணிர் வடித்துக் கொண்டிருந்த மான் அயர்ச்சி அடைந்திருந்த அவன் உள்ளத்துக்கு ஒரளவு உணர்ச்சியூட்டிற்று.

"அரே, அல்லா!' என்று சிறையிலிருந்தபடியே அந்த மானை அன்புடன் கூவி யழைப்பான் இஸா. அது இழுத்துப் பறித்துக் கொண்டு எப்படியாவது அவனை அடைந்துவிடத் துடியாய்த் துடிக்கும். ஆனால் அதன் பலன்? - இரும்புச் சங்கிலி இறுகி இறுகி அதன்கழுத்தில் செக்கச்செவேரென்று இரத்தம் கசியச் செய்துவிடும். அந்தக் காட்சியைக் கண்டதும் கவியின் உள்ளம் பதை பதைக்கும், நெஞ்சு நெக்குருகிக் கண்ணிர் கசிந்துவிடும். ஒரு கையால் தன் கண்ணை மூடிக்கொண்டு இன்னொரு கையால் "வேண்டாம் அல்லா, வேண்டாம்!” என்று இரைந்தபடி சமிக்ஞை காட்டி அதை வேண்டிக் கொள்வான் இஸா.

'அல்லா' வோ அவனை 'வா, வா!' என்று அழைப்பது போல் மருண்டு நோக்கித் தன் முன் கால்கள் இரண்டையும் தூக்கி தூக்கி நிற்கும்.

"பொறு அல்லா பொறு! காலம் மாறும்!" என்பான் கவி.

'அல்லா'வைப் பிரிந்ததிலிருந்து அவனுக்கு உணவு செல்லவில்லை. உறக்கம் கொள்ளவில்லை. அவனைப் பிரிந்ததிலிருந்து 'அல்லா'வும் அதே நிலைமையில் தானிருந்தது.

ராணி ஜிஜியாவோ 'அல்லா'வின் அன்பைப் பெறுவதற்கு என்ன வெல்லாமோ செய்து பார்த்தாள். அடிக்கடி அதன் முதுகை அன்புடன் தடவிக் கொடுக்க யத்தனிப்பாள். அதற்கு இடங் கொடுக்காமல் 'அல்லா' இப்படியும் அப்படியுமாகத் துள்ளித்துள்ளி ஒடி அவளை அலக்கழிக்கும்.

வேளைக்கு வேளை விதம் விதமான இரைகளை எடுத்துக் கொண்டு ஜிஜியாவின் தோழிகள் 'அல்லா'விடம் வருவார்கள். அவற்றை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. 'அல்லா', தோழிகள் மனமுடைந்து போய் விஷயத்தை ராணியிடம் தெரிவிப்பார்கள். அவளே நேரில் வருவாள். என்னவெல்லாமோ கொஞ்சி குலாவி ஒரு பிடி புல்லையாவது அதன் வாயில் திணித்துவிடப் பார்ப்பாள். 'அல்லா'வோ தன்னால் முடிந்தவரை வாயை இறுக மூடிக்கொண்டு தலையைத் திருப்பிக் கொள்ளும். இதனால் ராணி ஜிஜியா அடைந்த வேதனை கொஞ்சநஞ்மன்று. ஆனால் அந்தப் பாழும் ஆசை மட்டும் அவளை விடவேயில்லை.

இந்தக் காட்சிகளையெல்லாம் காராக் கிரகத்தின் ஜன்னல் மூலம் ஒருவாறு காணும் பாக்கியம் பெற்றிருந்த இஸா, ஒரு பக்கம் இன்பமும் இன்னொரு பக்கம்துன்பமும் அடைவான்.

இதயத்தோடு இதயம் ஒன்றிப்போயிருந்த இரு ஜீவன்களும் எத்தனையோ நாட்களை இப்படியே உணவின்றி உறக்கமின்றிக் கழித்துவிட்டன. ஆனால், பாதுஷா...?

அந்த இரு ஜீவன்களுக்குமிடையே இருக்கும் அன்பைத் தன் அதிகாரத் திமிரால், ஆயிரம் மோகராக்களால் பெற முடியாவிட்டாலும், சிறைப்படுத்திச் சித்திரவதை செய்வதன் மூலம் பெற்றுவிட முடியுமென்று நினைத்தான்!

இவர்களுக்கு மத்தியில் என்றைக்காவது ஒரு நாள் 'அல்லா'வின் உள்ளத்தில் தனக்கும் இடம் கிடைக்குமென்று எண்ணிப் பொறுமையுடன் நாளைக் கழித்து வந்தான் ஜிஜியா.

அன்று காலை வழக்கம் போல் நமாஸ் செய்து விட்டு ஜன்னலருகே வந்து நின்று 'அல்லா'வை நோக்கினான் இஸா. எந்த நேரமும் நிமிர்ந்து நின்று இஸாவின் வரைவையே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் அல்லா அன்று ஏனோ தரையில் சோர்ந்து விழுந்து கிடந்தது!

கவி இலா, அரே அல்லா அரே அல்லா என்று கதறினான்.

அவனுடைய கதறல் அந்த மானின் காதில் விழுவதற்கு அதனுடைய உடம்பில் உயிர் இருந்தால் தானே!

'அல்லா' தன் உயிரை அன்புக்கு அர்ப்பணம் செய்து விட்டதை அறியாத இஸா மேலும் மேலும் "அரே அல்லா, அரே அல்லா!" என்று கதறிக் கொண்டே யிருந்தான்.

அதே சமயத்தில் தன் தோழிகளின் மூலம் செய்தி கேட்ட ராணி ஜிஜியா அங்கே ஒடோடியும் வந்தாள். 'அல்லா'வை இப்படியும் அப்படியுமாக புரட்டிப் பார்த்துவிட்டு அவள் அழுது கொண்டே சிறையின் ஜன்னலை நோக்கினாள்.

இஸாவுக்கு விஷயம் புரிந்து விட்டது.

அவன் வானத்தை நோக்கித் தன் இரு கைகளையும் ஏந்தி "அரே அல்லாஹுத ஆலா! 'அல்லா'வை உன் திருவடிக்கு அழைத்துக் கொண்டு விட்டாயா?" என்று கேட்டு விட்டுக் கண்ணிர் மல்கிய கண்களுடன் சிறையின் வாயிலை நோக்கித் திரும்பினான்.

என்ன விந்தை இது! 'கடக்'கென்று பூட்டுத் திறக்கும் சத்தமும் 'லொடக்'கென்று நாதங்கி கழன்று விழும் சத்தமும் அவன் காதில் விழுந்தன.

அடுத்த கணம் 'படார், படார்' என்று சிறைக் கதவுகளைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்த பாதுஷா இஸாவின் முன்னால் மண்டியிட்டு அவன் இரு கைகளையும் பற்றி, "என்னை மன்னித்துவிடு, இஸா!" என்று வேண்டிக் கொண்டான்.

"மாட்டார், அல்லாஹுத ஆலா உம்மை ஒரு போதும் மன்னிக்க மாட்டார்!" என்று சொல்லி அவன் பிடியிலிருந்து விலகிக் கொண்ட இஸா, "அரே, அல்லா இதோ நானும் உன்னுடன் வந்து விட்டேன்! அரே, அல்லா இதோ, நானும் உன்னுடன் வந்து விட்டேன்!" என்று ஆவேசத்துடன் இரைந்து கொண்டே, சிறை வாயிலை விட்டுச்சிட்டுக் குருவி போல் பறந்து சென்றான்!

அரண்மனை நெடுகிலும் நின்று காவல் புரிந்த ஆயுத பாணிகளான வீரர்கள் யாரும் அவனை ஏனோ தடுக்கவில்லை!