விந்தன் கதைகள் 2/இரக்கம்

விக்கிமூலம் இலிருந்து
இரக்கம்

முக்கால் கெஜம் ஜாக்கெட் துணி வாங்குவதற்காக மூன்று மணி நேரம் சைனாபஜாரைச்சுற்றிச் சுற்றி வந்த பிறகு, முரளியும், சரளாவும் வீட்டுக்குச் செல்வதற்காகப் பஸ்நிலையத்தை நோக்கி வந்து கொண்டிருந்தனர்.

“நாக்கை வரட்டுகிறது; எங்கேயாவது ஐஸ்கிரீம் சாப்பிட்டால் தேவலையே!" என்று சுற்றுமுற்றும் பார்த்தாள் சரளா.

“சரியாய்ப் போச்சி, அந்தப் பக்கம் இருக்கும் போதே அதைச் சொல்லியிருக்கக் கூடாதா? இந்தப் பக்கம் வந்த பிறகுதான் சொல்ல வேண்டுமா?" என்றான் முரளி அலுப்புடன்.

"இதுதான் நுண்ணிடைப் பெண் ஒருத்திக்காக நீங்கள் நூற்றிரண்டு மலைகளைச்சாடும் லட்சணமாக்கும்?"என்றாள் சரளா.

தனக்காகத்தன் இனத்தையே பழிக்கும் அவளிடம் அதற்கு மேல் என்ன பேசுவது. அவனுக்காக நூற்றிரண்டு மலைகளைச் சாடாவிட்டாலும் நூற்றிரண்டடி நீளமுள்ள சாலையையாவது சாடுவோம் என்று அவன் திரும்பினான். அப்போது அழுதுவடியும் ஆண்சிங்கத்தின் குரலொன்று கேட்கவே இருவரும் திரும்பிப் பார்த்தனர்; எதிர்த்தாற் போலிருந்த நீதி மன்றத்திற்கு எதிரே யாரோ ஒருவன் தலைவிரி கோலமாக உட்கார்ந்து அழுது கொண்டிருந்தான்.

"பாவம் என்ன கஷ்டமோ" என்றாள் சரளா.

"எதுவாக வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும், பிறர் கஷ்டத்துக்கு நாம் காரணமல்ல என்பது எங்கள் பேராசிரியர் வாக்கு" என்றான் முரளி.

"அவர் கிடக்கிறார்! அதற்காகக் கண்ணிருந்தும் குருடராக, காதிருந்தும் செவிடராக நாம் வாழ்வதா, என்ன? வாருங்கள், போய் என்னவென்று விசாரிப்போம்" என்று அவனை அழைத்துக் கொண்டு சென்றாள் அவள்.

"என்னய்யா, என்ன நடந்தது?"அவ்வளவுதான்; அவனுடைய கால்களைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு அதை நான் எப்படி அம்மா, சொல்வேன்? எப்படி ஊருக்குத் திரும்பிப் போவேன்?" என்று அவன் கதறினான்.

"ஏன், உனக்கு இந்த ஊர் இல்லையா?” என்று கேட்டாள் அவள்.

"இல்லை, எனக்கு இளிச்சவாயன் பட்டி?”

“இங்கே எதற்கு வந்தாய்?"

"அந்த வெட்கக் கேட்டை ஏன் கேட்கறீங்க, எனக்கு ஸினிமா ஸ்டார்ஜில்ஜில் சுந்தரியைக் கண்ணாலம் பண்ணிக்கணும்னு ஆசை;"

"ம்......"

"அதுக்காக நான் பணம் சேர்க்கிறதுக்குள்ள அவளுக்கு வயசாயிப் போச்சு!"

"ம்........ "

"அடுத்தாற்போல் புல்புல் தாராவைக் கண்ணாலம் பண்ணிக்கலாம்னு பார்த்தேன்"

"ம்.........."

"அவளுக்கும் வயாசியிப்போச்சி!"

"அடபாவமே, அவர்களுக்கு வயசாக ஆக உனக்கு மட்டும் வயசு குறைந்து கொண்டே வந்ததாக்கும்?" என்றான் முரளி குறுக்கிட்டு.

"ரொம்ப அழகாத்தான் இருக்கு! இப்படிப்பட்டவர்களுடைய அறியாமைக்காக நாம் அழுவதா, சிரிப்பதா? வாயை மூடிக் கொண்டு பேசாமலிருங்கள்!" என்றாள் சரளா.

"இதோ மூடிக் கொண்டுவிட்டேன்"என்று அவன் உடனேதன் வாயை மூடிக் கொண்டு விட்டான்.

"ம், அப்புறம்......?”

"கடைசியா குமாரி குலோப்ஜானையாச்சும் கண்ணாலம் பண்ணிக்கலாம்னு நெனைச்சி, அவளுக்கு ஒரு கடிதாசி எழுதிப் போட்டேன்!"

"ம்......."

"அதுக்கு வேண்டிய பணத்தை எடுத்துகிட்டு அடுத்த நாளே வரும்படி அவ குமாஸ்தா பதில் எழுதியிருந்தான்!”

"ம்........." "சந்தோஷத்துக்குக் கேக்கணுமா? கண்ணு போட்ட மாடு, குட்டி போட்ட ஆடு எல்லாத்தையும் வித்து ஐநூறு ரூபா எடுத்து கிட்டுப் பறந்து வந்தேன்!"

"ம்.........”

"சொன்னது சொன்னபடி குமாஸ்தா ஸ்டேஷனுக்கும் வந்திருந்தான்.....!"

"ம்......."

"கேட்டது கேட்டபடி நான் ஐநூறு ரூவாயை எடுத்து அவன் கையிலே கொடுத்தேன்"

"ஐயோ , பாவம்!"

"ரெண்டு பேருமாகச் சேர்ந்து இங்கே வந்தோம்......!"

"எங்கே வந்தீர்கள்?"

"இங்கேயேதான்!"

"ம்........."

அவன் என்னை வெளியே நிறுத்திப்பிட்டு, "கொஞ்ச நேரம் இங்கேயே உட்கார்ந்துகிட்டு இரு; அம்மா என்ன பண்றாங்கன்னு பார்த்து விட்டு ஒரு நிமிஷத்துல வயந்துட்றேன்"னு உள்ளே போனான். ஒரு நிமிசம்ரெண்டு நிமிசமாச்சு; ஒரு மணியாச்சு; இரண்டு மணியாச்சு; ஒருநாள் ரெண்டு நாளாச்சு, போனவன் போனவன்தான்; திரும்பி வரவேயில்லை!"

"அவன் எப்படி வருவான்?"

"அதுக்கப்புறம் என்னடான்னா, இங்கே வரவங்க போறவங்க எல்லாம் இது குலோப்ஜான் வீடில்லே, ஐ கோர்ட்டுன்னு சொல்லிச் சிரிக்க ஆரம்பிச்சுட்டாங்க!"

"அவர்கள் கிடக்கிறார்கள்! நீ வா, எதற்கும் போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய்ப் புகார் எழுதிவைப்போம்!" என்று அவனை அழைத்துக்கொண்டு சென்றாள் சரளா. முரளியும் அவளைத் தொடர்ந்தான்.

போலீஸார் அவன் விலாசத்தை குறித்து வைத்துக் கொண்டு, "தகவல் கிடைத்ததும் தெரிவிக்கிறோம்" என்றார்கள்.

"அப்படின்னா நான் ஊருக்குப் போகலாமுங்களா?"

"பேஷாய்ப் போகலாம்!"

அவ்வளவுதான்; "அதுக்குக் கூட எங்கிட்ட பணம் இல்லீங்களே!" என்று அவன் மறுபடியும் அங்கேயே உட்கார்ந்து அழ ஆரம்பித்து விட்டான். சரளா அவனிடம் பத்து ரூபாயை எடுத்துக் கொடுத்து விட்டு வெளியே வந்தாள்.

"நல்ல வேளை குலோப்ஜானையே கொண்டு வந்து அவனுக்கு கல்யாணம் செய்து வைக்காமல் விட்டாயே, அந்த மட்டும் சந்தோஷம்!" என்றான் முரளி.

அலைந்த அலைச்சல் தீர, ஆளுக்கோர் ஐஸ்கிரீமுக்குப் பதிலாக ஆளுக்கு இரண்டு ஐஸ்கிரீமை அவர்கள் தீர்த்துக் கட்டிக் கொண்டிருந்தபோது, "என்னடா, என்ன கெடைச்சது?" என்றான் அவர்களுக்குச் சற்று தூரத்தில் உட்கார்ந்திருந்த ஒருவன், இன்னொருவனை நோக்கி.

"பத்து ரூபாய் தாண்டா! அதுவும் அவன் கொடுக்கலே, அவனோட ஒரு குட்டி வந்தாபாரு, அவ கொடுத்தா!" என்றான் இவன்.

"போயும் போயும் இன்னிக்குப் பொம்பிளைதானா கெடைச்சா, ஏமாத்த? ஐயோ, பாவம்!" என்றான் அவன்.

சரளா இதைக் கேட்டதும் திடுக்கிட்டுத் திரும்பினாள்? அதே குலோப்ஜான் காதலன்!

அவளை அவன் கண்டதும் தன் சகாவுடன் வெளியே விரைந்தான்.

"போலீஸ், போலீஸ்!" என்று கத்தினாள் சரளா, ஆத்திரத்துடன்.

"ஸ், போலீசை ஏன் அனாவசியமாக கூப்பிடுகிறாய்? அவர்களிடம் நீ இரக்கம் காட்டலாம். உன்னிடம் அவர்கள் இரக்கம் காட்டக் கூடாதா?" என்றான் முரளி.