1956-ல் ஒரு நாள் மாலை சந்திப்பு

விக்கிமூலம் இலிருந்து


1952 என்று நினைவு. மே ஜூன் மாதமாக இருக்கவேண்டும். புர்லாவில் அது கடுங்கோடை காலம். வறுத்தெடுக்கும் என்றால் நிஜமாகவே வறுத்தெடுக்கும் தகிப்பு. அலுவலகம் காலை ஏழு மணிக்கே தொடங்கிவிடும். 1.30 மணி வரை தான். பின் ரூமுக்குத் திரும்பறது தான் (வீடு தான். நாலைந்து பேர் தாராளமாக இருக்காம். ஆனால் என்னவோ ரூம் என்று தான் சொல்வோம். ஏனிப்படி என்று சொல்லத்தெரியவில்லை. இப்போது எழுதுகிறபோது தான் அது வினோதமாக உறைக்கிறது) அலுவலகத்தில் கஸ் கஸ் தட்டி தொட்டி தொங்கும் ஜன்னல், அறைக்கதவுகளை அடைத்து. அடிக்கடி தண்ணீர் விட்டுக் கொண்டிருக்கவேண்டும். தனியாக இருந்த காலத்தில், அலுவலகத்திலேயே தங்கிவிடுவேன். மாலை ஐந்து அல்லது றுமணிக்குத் தான் ரூமுக்குப் போவேன். ஆனால் இப்போதெல்லாம் நேராக ஹோட்டலுக்குப் போய் சாப்பிட்டு விட்டு ரூமுக்குத் திரும்பிவிடுவது வழக்கமாயிற்று. தனி வீடு. வாடகை ஐந்து ரூபாய் தான். புதிதாய் வருகிறவர்களுக்கெல்லாம் கொடுப்பதற்கு வீடு கிடைக்காது. அப்படி புதிதாய் வரும் தமிழர்களை "பரவாயில்லை. வாங்க நம்ம ரூமுக்குப் போகலாம்" என்று சொல்லி என் வீட்டில் இடம் கொடுப்பேன். ஒரு சமயம் 10 பேர்களுக்கு மேல் என் வீட்டில் தங்கியிருந்திருக்கிறார்கள்.


சாப்பிட்டுவிட்டு ரூமுக்குத் திரும்பியதும் தண்ணீரில் மறுபடியும் உடம்பை அலம்பிக்கொண்டால் கொஞ்சம் உஷ்ணம் தணிந்த மாதிரி இருக்கும். பின் வேட்டியை மாத்திரம் கட்டிக்கொண்டு கட்டிலில் படுத்தால் று மணிக்குத்தான் விழித்தெழுவேன். சில சமயம் படித்துக் கொண்டிருந்தால் என்னையறியாது கண்ணயர்ந்து போகும். படித்துக் கொண்டிருந்தபோது ஜன்னல் அருகே ஏதோ நிழலாடியது. எழுந்து ஜன்னலுக்கு வெளியே பார்த்தால் ஒரு சிறு பெண், பார்த்தால் தமிழ்ப் பெண் போல இருந்தாள். பத்து பதினோரு வயதிருக்கும். அழுக்கு சட்டை பாவாடை, எண்ணெய் காணாத பரட்டைத் தலை. நின்று கொண்டிருந்தாள். எவ்வளவு நேரமாக நிற்கிறாளோ தெரியாது. பார்த்த பின்னும் ஏதும் பேசவில்லை. என்னம்மா, என்ன வேணும் என்று கேட்டேன். பதில் இல்லை. திரும்பக் கேட்டும் பதில் பேசவில்லை அவள். சரி என்று மறுபடியும் கட்டிலில் படுத்து படிக்கத் தொடங்கினேன். அவள் நகரவில்லை என்று பட்டது. படிக்கவும் ஓடவில்லை. வெளியில் அந்த வெயிலின் உக்கிரத்தில் ஒரு சிறு பெண் நின்று கொண்டிருக்கிறாள். மறுபடியும் எழுந்து உட்கார்ந்து கொண்டேன். 'சொல்லு என்ன வேணும்? பசிக்கிதா, காசு வேணுமா?" என்று கேட்டேன். அவள் கண்கள் நீர் கோர்த்து விட்டன. தயங்கித் தயங்கி விக்கிக் கொண்டே, "வீட்டிலே யாரும் சாப்பிடலை சார். அப்பாக்கு அணைக்கட்டிலே கால் ஒடிஞ்சு போச்சு. கட்டுப் போட்டு அனுப்பிச்சிட்டாங்க. அம்மாக்கு வேலை இல்லை. இத்தனை நாளா ஸ்பத்திரிலே அப்பாவோட இருந்தாங்க. நாங்க ரண்டு நாளா பட்டினி சார்." என்று அழுது கொண்டே சொன்னாள்.


மிகவும் பரிதாபமாக இருந்தது. "அழாதே. நான் ஒரு சீட்டு தரேன். இதை எடுத்துக்கிட்டு நான் வழி சொல்றேன். எங்க மெஸ்ஸ¤க்குப் போ. அவங்க சாப்பாடு தருவாங்க. சீக்கிரம் போ. இது மூடுற நேரம். இதோ பார் இடது பக்கம் இந்த மாதிரி சாரி சாரியா விடுங்க இருக்கு இல்லியா. அங்கேயிருந்து நாலாவது சாரி, முதல் வீடு. அங்கே ஒரு ஐயர் இருப்பாரு அவர்கிட்டே கொடு. எ•ப் 20 லே இருக்கறவரு கொடுதாருன்னு சொல்லு. என்ன?" தலையைத் தலையை ட்டிக்கொண்டிருந்தாள். "சரி உன் பேரென்ன? "ஊம் கமலாவா? சரி. நாளைக்கு ஏதாச்சும் பாத்திரம் எடுத்துட்டு வா. போ" என்று சொல்லி அனுப்பினேன்.


மறு நாள் கமலா வந்தாள், இரண்டு அலுமினியப் பாத்திரங்களோடு. இப்போது முகத்தில் ஒரு மெல்லிய புன்சிரிப்பு. அன்பு காட்டும் பரிச்சயமான மனிதருக்குத் தரும் புன்சிரிப்பு. "ஐயரு ஏதாச்சும் சொன்னாரா? ஒன்னும் கஷ்டமில்லியே" என்று கேட்டேன். பதிலுக்கு அவளிடமிருந்து வந்தது மறுபடியும் ஒரு புன்சிரிப்பும், லேசான தலையாட்டலும் தான். மறுபடியும் ஒரு சீட்டு எழுதிக்கொடுத்தேன். போகும்போது புன்சிரிப்புடன் திரும்பிப் பார்த்துக் கொண்டே சென்றாள்.


இது கொஞ்ச நாள் தொடர்ந்தது. இதன் பின் பிரச்சினைகள் உருவாகத்தொடங்கின. இரண்டாம் நாள் இரவு சாப்பிடப் போன போது, மெஸ் ஐயர், மெதுவாக ரம்பித்தார். "சாமினாதன், இரக்கப் படறதெல்லாம் சரி. ஆனால் இப்படி எத்தனை பேர் இருக்கா? எல்லாருக்கும் நாம செய்ய முடியுமா? நீங்க அப்பா அம்மாக்கு பணம் அனுப்பவேண்டாமா? அப்புறம் அவா பாடு கஷ்டமா போயிடப்போறது. அதையும் பாத்துக்கோங்கோ?" அடுத்த இரண்டு நாள் கழித்து, "சாமிநாதன் நீங்க பண்றது நன்னா இல்லே. எனக்கென்னாச்சு, எனக்கு பணம் வரது. அதுக்கு மேலே நான் சொல்றதுக்கு இல்லே." என்றார். குரலில் கொஞ்சம் கடுமை தென்பட்டது.


அறையில் தான் ரகளை. அது கிண்டலாக வேஷம் தரித்து வந்தது. அந்தப் பெண்ணை வந்த முதல் நாள் தான் அவர்கள் தாமதமாக வந்ததால் பிரச்சினை இருக்கவில்லை. மறு நாளிலிருந்து சிலர் எனக்கும் முன்னதாகவும், என்னோடும், அல்லது சற்று முன் பின்னதாகவும் வந்தவர்கள், அந்தச் சிறுமி வருவது வாடிக்கையாகவே, ஒரு நாள் ஒருவன் சொல்வான், " சாமிநாத வள்ளலே, வாங்க, உங்க கொடைக்காக ஒரு ஏழை காத்திருக்கு" அறைக்குள் இருந்த மற்றவர்கள் சிரிப்பார்கள். நானும் அவர்கள் சிரிப்பில் கலந்து கொள்வேன். இன்னொரு நாள் " இரும்மா, கர்ண மகாராஜா முகம் கழுவிக்கிட்டிருக்கார். கூப்பிடறேன்" என்று காமெண்டரி மாறும். இன்னொரு நாள் " என்ன கர்ண மகாராஜா, இன்னும் உங்கள் பிரஜையைக் காணோமே? என்று வரும் ஒரு காமெண்டரி. ளைப் பொறுத்து, அவர் வாசாலகம், கற்பனை பொறுத்து கேலி வசங்கள், குரல் எல்லாம் வித வித ரூபங்கள் எடுக்கும். தமாஷாகத் தான் இருக்கும். "கேலி எல்லாம் இருக்கட்டும் சாமிநாதன், இது கட்டுபடி யாகுமா? யோசிச்சீங்களா" என்று அப்பப்போ யாராவது ஒருவன் ரொம்ப ஸீரியசாகக் கேட்பான். நியாயம் தான். ஆனால் மாதக் கடைசியில் தானே கொடுக்கணும். கொடுத்தால் போச்சு. அனேக செலவுகள் கடனிலேயே நடந்துவிடும். சம்பல்பூர் போய் சினிமா பார்க்கத் தான் காசு வேண்டும். பிரசினை இல்லை. ஒரு நாள் மெஸ் ஐயரே, கொஞ்சம் அதிகமாகவே கோபித்துக் கொண்டுவிட்டார். முகம் சரியில்லை. அவரும் நண்பர்களும் சொல்வது நியாயம் தான். ஆனால் அந்தச் சிறுமியை எப்படி வெறுங்கையோடு போகச் செய்வது? மாதக் கடைசி வர, வர, என்னடா செய்யப் போகிறோம் என்று தான் இருந்தது. அய்யரும் "இந்த மாசம் பில் என்னவா இருக்கும்னு ஏதாவது ஐடியா இருக்கா சாமினாதன்? " என்று கேட்டார்.


அறையில் ஒரு நாள் ஒரு சர்ச்சையே நடந்தது. "அந்த பொண்ணு சொல்றது நிஜம் தான்னு என்ன நிச்சயம்? பிச்சை எடுக்கறதுன்னு ரம்பிச்சுட்டா பொய் என்ன, என்னன்னெல்லாம் நடக்கிறது, தெரியாதா சாமிநாதன்?" என்ற கேள்வியே திரும்பத் திரும்ப வந்தது. எனக்கு என்னவோ அந்தப் பொண் பொய் சொல்லும் என்று தோன்றவில்லை.


ஒவ்வொரு நாள் மாலையும் நண்பர்களோடு, இரண்டு மூன்று மைல் தூரம் வெயில் தணிந்ததும் நடந்து செல்வது வழக்கம். ஒரு நாள் அணைக்கட்டுக்குச் செல்லும் ரோடு வழியாகப் போய்க்கொண்டிருந்த போது வலது பக்கம் உள்ள குளத்தின் எதிர்க்கரையின் ஒரு ஓரத்தில் இருந்த மரத்தினடியில் ஒரு குடும்பம் உட்கார்ந்திருந்தது. அதில் ஒரு சிறு பெண், கமலாவா அது? மாம். கமலா தான். பக்கத்தில் அவளுடைய அம்மா, அப்பாவாக இருக்கவேண்டும். அவர்கள் நல்லாத்தானே இருக்காங்க' என்று தோன்றிற்று. ஸ்பத்திரிலே அப்பா, கால் அடிபட்டு, பட்டினி.. எல்லாம் பொய்யா? அந்தச் சின்னப் பொண்ணு என்னை முட்டாளாக்கீட்டது போல இருக்கே. த்திரமாக வந்தது. என் கிட்ட பொய் சொன்னது மட்டுமா? எல்லோரும் கிண்டல் பண்ணும்படியல்லவா ய்விட்டது? அத்தோடு மெஸ் ஐயரோட தர்மோமதேசம் வேறு. ஒன்றும் பதில் சொல்லமுடியாமல்.... கோபம் கோபமாக வந்தது. நாளைக்கு வரட்டும் இனிமேல் ஏமாறப் போறதில்லை. ரூமுக்குத் திரும்பினேன். "வெங்கட் நீங்கள்ளாம் சொன்னாப்பல அந்தப் பொண்ணு ஏமாத்திருக்குன்னு தோன்றது" என்றேன் நண்பனிடம். அவன் ஒன்றும் சொல்லவில்லை. நண்பர்கள் எல்லோருக்கும் என்னிடம் ஒரு பச்சாத்தாப உணர்வு போல. மௌனமாக எனக்கு இரக்கப்படுவது போல. "சரி முதல் தேதி வந்ததும் மெஸ் பில் கட்டணுமே, அதைப் பத்தி யோசி" என்றுதான் அவர்கள் சொல்ல முடிந்தது.


மறு நாள் ஜன்னலுக்கு வெளியே "ஸார்" என்று குரல் கேட்டது. கமலா தான் நின்று கொண்டிருந்தாள். நான் முகம் உயர்த்தியதும், தீன குரலில், "எல்லாம் தீந்து போச்சுன்னு சொல்லீட்டாங்க ஸார்" என்றாள் அவள். எனக்கு வந்த கோபத்தில், "அதுக்கு என்னை என்ன செய்யச் சொல்றே. நீ இனிமே இங்கே வராதே. உங்களுக்கெல்லாம் கொஞ்சம் கூட இரக்கப்படக்கூடாது. எவ்வளவு நாளைக்கு நான் உங்களுக்கெல்லாம் சோறு போட முடியும்? இவ்வளவு நாள் உன் பேச்சைக் கேட்டேனில்லே. அது என் தப்பு. போ வேறே யார் கிட்டேயாவது போய்க் கேள். இனிமே இங்கே வராதே.." பொரிந்து தள்ளி விட்டேன். அவளுக்கு நான் இப்படி இரைந்தது அதிர்ச்சியாக இருந்திருக்கவேண்டும். பயத்தில் மூச்சு பேச்சற்றுப் போனாள். அழுகை முட்டிக்கொண்டு வந்தது போலும். கண்களைத் துடைத்துகொண்டே விசும்பும் குரல் கேட்டது. அவள் திருப்பிப் போய்க்கொண்டிருந்தாள்.


அதன் பிறகு அவளை நாங்கள் இருந்த பக்கம் பார்க்கவில்லை. முதலில் கொஞ்ச நாட்கள், அவள் என்ன செய்வாள் சின்னப் பொண். "கொடுக்கறாங்களே போய் வாங்கிட்டு வா" என்று அனுப்பப்பட்டால் அவள் என்ன செய்வாள்? ஒரு வேளை நான் அப்படிக் கத்தியிருக்கக் கூடாதோ, இதமாகச் சொல்லியிருக்கலாமோ என்றெல்லாம் மனது கிடந்து அலையும். பின்னர் எல்லாம் மறந்து விட்டது.


மூன்று நான்கு வருடங்கள். அலுவலகத்திலிருந்து ஹோட்டல் இருக்கும் கடைத்தெருவுக்குப் போகும் வழியில் இருந்த வெற்றிடத்தில் ஒரு சினிமாக் கொட்டகை வந்திருந்தது. ஆரம்பத்தில் அங்கு இங்கிலீஷ், வங்காளி, ஹிந்தி படங்கள் என்று தொடங்கினாலும், ஒன்றிரண்டு மாத காலத்துக்குள் அணைக்கட்டிலிருந்து வரும் தமிழ்க் கூட்டத்தைப் பார்த்ததும், பெரும்பாலும் தமிழ்ப் படங்களையே வரவழைக்கத்தொடங்கினான். பஞ்சாபி தான். இருக்கலாம். ஆனால் தமிழ்க் காசுதானே நிறைய வருகிறது!சாயந்திரமானால் திருவிழாக்கூட்டம் போல் தான் கூட்டம் அலை மோதும், தமிழ்ப் படம் காட்டப்படும் நாட்களில், அந்தக் கொட்டகையில் தான் நான் 'On the Water Front', பாதேர் பஞ்சலி, மேக் டாகே தாரா, என்று பார்க்கக் கிடைத்த வாய்ப்பு, 'நாகேஸ்வர ராவ் நடித்த தேவ் தாஸ், பரா சக்தி என்று பாதை திரும்பியது. மூன்று நான்கு நாட்களுக்கு ஒரு முறை படம் மாறும். க, எப்போதும் அங்கு கூட்டம் சாலையை அடைத்துக் கொண்டிருக்கும்.


ஒரு நாள் அந்த கூட்டத்தினிடையே புகுந்து வெளியேறியதும், பின் தொடர்ந்து வந்த மணி, " சாமிநாதன், ஒரு பொண்ணு உங்களையே பாத்துட்டு இருந்துச்சுய்யா, "சார்" னு கூப்டாப்பல கூட இருந்துச்சு" என்றதும், சரிய்யா வாய்யா" என்று அலட்சியப்படுத்தியது, "இல்லே சாமிநாதன் விளையாட்டு இல்லே நிஜம்மாத்தான்" என்று சற்று கோபத்துடன் அடித்துச் சொல்லவே, நான் திரும்பிப் பார்த்தேன். அந்த கூட்டத்தில் என்ன தெரியும்? சரி போகுது போகலாம். தேடினால், மறுபடியும் எதிர்ப்படுவா அந்தப் பொண்ணு" என்று சொன்னேன். அந்தக் கதை அன்றோடு முடிந்தது.


பின் ஒரு நாள் அலுவலகம் முடிந்தும் வெளியேறி சாலையைக் கடந்து கொண்டிருக்கும் போது, கூட வந்த மணி, "சாமிநாதன், அதோ பாருங்க, அந்த பொண்ணுதான், கூட ஒரு அம்மா வராங்க. அன்னிக்கு நான் சொல்லலே, உங்களையே பாத்துட்டு இருந்ததுன்னு, அது தான்" என்று சற்று தூரத்தில் வந்துகொண்டிருந்த ஒரு நடுத்தர வயது ஸ்திரீயும் கூட பதினைந்து வயது இருக்கும் பெண்ணும் வந்து கொண்டிருந்தார்கள். நாங்கள் அவர்களைப் பார்க்கிறோம் என்று தெரிந்ததும் சிரித்துக் கொண்டே "சார், சார்" என்று கூவிக்கொண்டும் எங்களை நோக்கி வந்தனர். கிட்ட வந்ததும், " சார், உங்களைத் தான் இத்தனை நாளா தேடிக்கிட்டு இருக்கோம். நாலு நா முந்தி இவதான் சொன்னா, கொட்டாகையண்டே சாரைப் பாத்தேன்னு, அது கூப்பிட்டுச்சாம், உங்க காதிலே விழலே..." அந்த அம்மா சொல்லிக்கொண்டே போனாள். அந்தப் பெண் என்னைப் பார்த்து சிரித்துக் கொண்டே இருந்தது. பாவாடை சட்டை தான். பளிச்சென்று முகம் மலர, என்னை நிமிர்ந்து பார்த்துக்கொண்டே இருந்தாள்.


"யாரும்மா நீங்க, எனக்குத் தெரியலையே, என்னை எப்படித் தெரியும்? என்னை எதுக்குத் தேடணும்..


"ஐயா, நீங்க மறந்திட்டீங்க போல. இந்தப் பொண்ணு தினமும் சொல்லிட்டு இருக்கும். நீங்க தெய்வம் போல காப்பத்தினீங்க. தினம் உங்க கிட்டேருந்து தான் சோறு வாங்கீட்டு வரும். அவரு கால்லே காயம்பட்டு ஆஸ்பத்திரிலே கிடந்தாருங்க; வேலை இல்லே. எல்லாரும் பட்டினி. என்ன செய்றதுன்னேதெரிலீங்க. ரொம்ப கஷ்டப்பட்டுடோம். நீங்க மாத்திரம் அப்போ காப்பாத்தாட்டி, என்ன செஞ்சிருப்போமோ, தெரீலே, இப்ப அவர் காலு சரியாயிட்டுதுங்க. ரெண்டு பேரும் வேலை பாக்கறோம். அதை உங்களைப் பாக்கணும் பாக்கணும்னுட்டு இருந்தோம்ங்க. இவ கூட ரெண்டு மூனு தடவ நீங்க இருந்த வீட்டுப்பக்கம் போய்ப் பாத்துச்சுங்க. பூட்டியிருக்குன்னு வந்து சொல்லிச்சு. நீங்க வீடு மாறி போயிட்டீங்க போல இருக்கு. அய்யா, நாங்க இப்போ நல்லா இருக்கோம்ங்க. ஒரு குறையும் இல்லே. அதாங்க, உங்களைப் பாத்து சொல்லணும்னுட்டு, பாக்கவே முடியலை........"


கமலாவா இது! நல்லா வளர்ந்து இருந்தாள். புதுசு போல இருந்தது அவள் பாவாடை சட்டை. வெள்ளைத் துணியில் பச்சைப் பூப்போட்டது. முகம் மலர சிரித்துக்கொண்டே ஆர்வத்துடன் என்னையே அண்ணாந்து பார்த்துக் கொண்டிருந்தாள். அவர்களைப் பார்க்க சந்தோஷமாக இருந்தது.


அந்த அம்மாள் இன்னமும் என்னமோ சொல்லிக்கொண்டே இருந்தாள். "ஐயா, நீங்க வீட்டுக்கு கட்டாயம் ஒருக்கா வரணும். அவரு இப்போ ஷி•ப்ட்லே இருக்காரு. உங்களை அவரும் பாக்கணும்னாரு. நீங்க ஒருக்கா வந்தா எங்க எல்லாருக்கும் சந்தோஷமா இருக்கும்யா....."

"சரிம்மா, கட்டாயம் வரேன். ரொம்ப சந்தோஷம்மா" என்று சொன்னேன். சந்தோஷமாகத் தான் இருந்தது.

மணிக்கு ஒரே திகைப்பு. "சாமி, நீங்க பெரிய்யளுய்யா" என்று திகைப்பும் ஆச்சரியமும் மலங்க. எனக்கும் சந்தோஷமாகத்தான் இருந்தது. கூடவே ஒரு உறுத்தலும். "சீ, ஒரு நிமிஷ கோபத்திலே என்னல்லாம் பேசீட்டேன்? என்று.


"இல்லே மணி, அவங்கதான் ரொம்ப பெரிய மனுஷங்கங்க. அந்த பொண்ணும் சரி, அவ அம்மாவும் சரி, நல்லதை மாத்திரம் தான் அவங்க நினைவிலே தங்கியிருக்கு. மற்றதெல்லாம் மறந்துட்டது பாருங்க. அது பெரிய விஷயம். ஒரு நிமிஷத்திலே நாங்க உங்களை விட பெரியவங்கன்னு அவங்க சொல்லலை. ஆனால் அதான் இப்போ நடந்திருக்கு..... "

குறிப்புகள்[தொகு]

  • 3.10.06