2.மாமி அரசியற் படலம்
Jump to navigation
Jump to search
கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை அவர்களின்[தொகு]
நாஞ்சில் நாட்டு மருமக்கள்வழி மான்மியம்[தொகு]
ஓர் அங்கதக் காவியம்[தொகு]
2. மாமி அரசியல் படலம்[தொகு]
- இவர்கதை இவ்வா றாக இனியென்
- மாமி கதையை வகுப்பேன்.
- அரங்கு பூட்டாம், அறைப்புரை பூட்டாம்,
- தட்டுப் பூட்டாம், சாய்ப்புப் பூட்டாம்
- அரிசியை நிதமும் அளந்து வைப்பாள்,
- நல்ல மிளகை நறுக்கி வைப்பாள்,
- கொல்ல மிளகைக் குறுக்கி வைப்பாள்,
- உப்பில் புளியை உருட்டி வைப்பாள்,
- கறிக்குத் தேங்காய் கருக்கி வைப்பாள்,
- கடுகையும் எண்ணிக் கணக்கிட்டு வைப்பாள்,
|
- தீபா வளிக்குத் தீபா வளியே
- எண்ணெ யறியும் என்தலை அம்மா!
- அரைக்க மஞ்சள் அளித்திடா மாமி
- குளிக்க மஞ்சள் கொடுத்திடு வாளோ?
- உம்மே லாணை ஒருநா ளாகிலும்
- கஞ்சியோ கூழோ காடி நீரோ
- கும்பி யாரக் குடித்ததே யில்லை!
- கந்தைத் துணிகள் கட்டிய தல்லால்,
- கண்டாங் கிகளைக் கண்டதே யில்லை!
- அடுக்களை நடையே நிலைய மாயினும்
- அங்கும் இங்கும் ஆக அவ்வீடு
- எங்கும் இருப்பாள் எங்கள் மாமி
- இவளொரு கண்ணுக் கிணைஅவ் இந்திரன்
- ஆயிரம் கண்ணும் ஆகா துண்மை!
- பின்னே நோக்கினும் முன்னுள தறியும்
- முன்னே நோக்கினும் பின்னுள தறியும்,
- எறும்பும் காணா இடத்திவள் காண்போம்,
- புகையும் நுழையா இடத்திவள் புத்திபோம்
- ஆணாய்ப் பிறந்தால் அகிலம் ஆள்வாள்
- இருகண் இருப்பின் இடமிது போதுமோ?
- எல்லாம் வல்ல எம்பெரு மான்இவள்
- குணத்தை அறிந்தே கொடுத்தான் ஒருகண்!
- கணகண என்றெக் கணமும் நாக்கின்
- அடிக்கும் மணிவிசை அடங்கி விடுமென்று
- எவரும் எண்ணி யிருந்ததே யில்லை.
- ஊரை முழுதும் உழக்கால் அளப்பாள்!
- நாட்டை முழுதும் நாழியால் அளப்பாள்!
- நரியை முன்னம் பரியாய் ஆக்கின
- நாதனும் கண்டு நாண, இவளும்
- யானையைப் பூனை யாக மாற்றுவாள்,
- பூனையை யானை யாக மாற்றுவாள்!
- ஐயோ! உலகுக் கெங்கள் அருமை
- அத்தை திருவிளை யாடலை யெல்லாம்
- பத்துப் பரஞ்சோ திகளே பாடினும்
- முடியா தென்றால், மூதறி வில்லா
- அடியாள் சொல்லி அறியப் படுமோ?
- இரக்கம் சிறிதும் இன்றி எனக்கிவள்
- இடுவாள் வேலைகள் இரவும் பகலும்
- குழந்தைக் குப்பால் கொடுக்க வொட்டாள்;
- கும்பி யாரக் குடிக்க வொட்டாள்!
- உண்ண வொட்டாள் உறங்க வொட்டாள்
- உடலைக் கீழே சரிக்க வொட்டாள்,
- அருமை மதினி அடிக்கடி அடிக்கடி
- சடைவா றுதற்குத் தாய்வீ ட்டைவாள்
- மக்களும் பின்னால் வருவர், புருஷன்
- இரண்டொரு நாள்கழித் தெட்டிப் பார்ப்பான்
- வந்தால், போகும் வரையிலும் என்னை
- அம்மியில் வைத்துச் சம்மந்தி யாக
- அரைத்து விடுவாள், ஐயம் அதற்கிலை.
- என்னிரு மக்களும் இவருக் கேவல்
- செய்து செய்து துரும்பாய்த் தேய்ந்தார்!