2.மாமி அரசியற் படலம்

விக்கிமூலம் இலிருந்து

கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை அவர்களின்[தொகு]

நாஞ்சில் நாட்டு மருமக்கள்வழி மான்மியம்[தொகு]

ஓர் அங்கதக் காவியம்[தொகு]

2. மாமி அரசியல் படலம்[தொகு]

இவர்கதை இவ்வா றாக இனியென்
மாமி கதையை வகுப்பேன்.
அரங்கு பூட்டாம், அறைப்புரை பூட்டாம்,
தட்டுப் பூட்டாம், சாய்ப்புப் பூட்டாம்
அரிசியை நிதமும் அளந்து வைப்பாள்,
நல்ல மிளகை நறுக்கி வைப்பாள்,
கொல்ல மிளகைக் குறுக்கி வைப்பாள்,
உப்பில் புளியை உருட்டி வைப்பாள்,
கறிக்குத் தேங்காய் கருக்கி வைப்பாள்,
கடுகையும் எண்ணிக் கணக்கிட்டு வைப்பாள்,

"பிள்ளையவர்கள் வரைந்த சமுதாயச் சித்திரம் ஒருநூதன இலக்கிய வகையை நமது தமிழ்மக்களுக்குக் கொடுத்தது. இவ் இலக்கியவகையில் நகைப்பும் இகழ்ச்சியும் சோகமும் ஒன்றாகக் கலந்துவரும். பெரியதோர் பயனும் விளைவதாகும்.” -வையாபுரிப்பிள்ளை
“பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில், ஆங்கிலம் பயின்றவர்கள் அம்மொழியிலுள்ள இலக்கிய வகைகளைத் தத்தம் இந்திய மொழிகளுக்கு அறிமுகப்படுத்துவதில் பேரார்வம் கொண்டிருந்தனர். பல ஆங்கிலமொழிப் படைப்புகளைத் தமிழாக்கித் தந்தவர்களுள் குறிப்பிடத்தக்கவரான ‘கவிமணி’ அங்கதம் உத்தியைத் தமிழில் தருவதில் ஆர்வம் காட்டி, ‘நாஞ்சில் நாட்டு மருமக்கள்வழி மான்மியம்’ என்னும் தலைப்பில, ஒரு சமுதாயத்தின் குறைபாடுகளைக் கழிவிரக்கத்துடனும், நகைச்சுவையுடனும் தருகிறார்.” -முனைவர் வை.கிருஷ்ணமூர்த்தி, 2007.

தீபா வளிக்குத் தீபா வளியே
எண்ணெ யறியும் என்தலை அம்மா!
அரைக்க மஞ்சள் அளித்திடா மாமி
குளிக்க மஞ்சள் கொடுத்திடு வாளோ?
உம்மே லாணை ஒருநா ளாகிலும்
கஞ்சியோ கூழோ காடி நீரோ
கும்பி யாரக் குடித்ததே யில்லை!
கந்தைத் துணிகள் கட்டிய தல்லால்,
கண்டாங் கிகளைக் கண்டதே யில்லை!
அடுக்களை நடையே நிலைய மாயினும்
அங்கும் இங்கும் ஆக அவ்வீடு
எங்கும் இருப்பாள் எங்கள் மாமி
இவளொரு கண்ணுக் கிணைஅவ் இந்திரன்
ஆயிரம் கண்ணும் ஆகா துண்மை!
பின்னே நோக்கினும் முன்னுள தறியும்
முன்னே நோக்கினும் பின்னுள தறியும்,
எறும்பும் காணா இடத்திவள் காண்போம்,
புகையும் நுழையா இடத்திவள் புத்திபோம்
ஆணாய்ப் பிறந்தால் அகிலம் ஆள்வாள்
இருகண் இருப்பின் இடமிது போதுமோ?
எல்லாம் வல்ல எம்பெரு மான்இவள்
குணத்தை அறிந்தே கொடுத்தான் ஒருகண்!
கணகண என்றெக் கணமும் நாக்கின்
அடிக்கும் மணிவிசை அடங்கி விடுமென்று
எவரும் எண்ணி யிருந்ததே யில்லை.
ஊரை முழுதும் உழக்கால் அளப்பாள்!
நாட்டை முழுதும் நாழியால் அளப்பாள்!
நரியை முன்னம் பரியாய் ஆக்கின
நாதனும் கண்டு நாண, இவளும்
யானையைப் பூனை யாக மாற்றுவாள்,
பூனையை யானை யாக மாற்றுவாள்!
ஐயோ! உலகுக் கெங்கள் அருமை
அத்தை திருவிளை யாடலை யெல்லாம்
பத்துப் பரஞ்சோ திகளே பாடினும்
முடியா தென்றால், மூதறி வில்லா
அடியாள் சொல்லி அறியப் படுமோ?
இரக்கம் சிறிதும் இன்றி எனக்கிவள்
இடுவாள் வேலைகள் இரவும் பகலும்
குழந்தைக் குப்பால் கொடுக்க வொட்டாள்;
கும்பி யாரக் குடிக்க வொட்டாள்!
உண்ண வொட்டாள் உறங்க வொட்டாள்
உடலைக் கீழே சரிக்க வொட்டாள்,
அருமை மதினி அடிக்கடி அடிக்கடி
சடைவா றுதற்குத் தாய்வீ ட்டைவாள்
மக்களும் பின்னால் வருவர், புருஷன்
இரண்டொரு நாள்கழித் தெட்டிப் பார்ப்பான்
வந்தால், போகும் வரையிலும் என்னை
அம்மியில் வைத்துச் சம்மந்தி யாக
அரைத்து விடுவாள், ஐயம் அதற்கிலை.
என்னிரு மக்களும் இவருக் கேவல்
செய்து செய்து துரும்பாய்த் தேய்ந்தார்!


இரண்டாவது, மாமி அரசியற் படலம் முற்றியது[தொகு]

பார்க்க[தொகு]

நாஞ்சில் நாட்டு மருமக்கள்வழி மான்மியம்
மருமக்கள்வழி மான்மியம் - கவிமணி
1.குலமுறை கிளத்துப் படலம்
3.கேலிப் படலம்
4.கடலாடு படலம்
5.பரிகலப் படலம்
6.நாகாஸ்திரப் படலம்
7.கருடாஸ்திரப் படலம்
8.வாழ்த்துப் படலம்
9.கோடேறிக் குடிமுடித்த படலம்
10.யாத்திரைப் படலம்
11.கும்பியெரிச்சல் படலம்
"https://ta.wikisource.org/w/index.php?title=2.மாமி_அரசியற்_படலம்&oldid=447208" இலிருந்து மீள்விக்கப்பட்டது