3.கேலிப் படலம்
Jump to navigation
Jump to search
கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை அவர்களின்[தொகு]
நாஞ்சில் நாட்டு மருமக்கள்வழி மான்மியம்[தொகு]
அங்கதக் காவியம்[தொகு]
3.கேலிப் படலம்[தொகு]
- என்மகன் சாமி, ஏதோ ஒருநாள்
- அத்தை மகளென விளையாட் டாகவே
- வேண்டு மென்றோ, ‘வீர லெச்சுமி!
- குலுக்கை போலக் குறுகிப் போனாயே!
- எருமை போல இளைத்துப் போனாயே!
|
- பனந்தூர் போலப் பாறிப் போனாயே!
- வயிற்றில் உனக்கு மடிப்புகள் எத்தனை?
- இன்னும் சிலநாள் இங்கிருப் பாயேல்,
- வாசலும் வேறே மாற்றவே வேண்டும்.
- குதிலும் வெளியாய்க் கொஞ்சனா ளாச்சுதே!
- பந்தய நெல்லும் பாதி யாச்சுதே!
- நீங்களும் வந்து நெடுநா ளாச்சுதே!
- இந்த ஆடி முழுதுமிங் கிருந்து
- புதுநெல் வரினும் போகமாட் டீரோ?
- நல்லது, நல்லது, நல்லது அம்மா!
- தின்பவ னெல்லாம் தின்பான் போவான்
- திருக்கணங் குடியான் தெண்ட மிறுப்பான்!
- அவியல் பொரியல் துவையல் தீயல்
- பச்சடி தொவரன் கிச்சடி சட்டினி
- சாம்பார் கூட்டுத் தயிர்ப்புளி சேரி
- சேனை எத்தன் சேர்த்தெரி சேரி
- பருப்பு பப்படம் பாயசம் பிரதமன்
- பழமிவை யோடு படைப்புப் போட
- எத்தனை நாளைக் கெங்களால் ஏலும்?
- அரசனும் கூட ஆண்டி யாவனே!
- இப்படி உண்மை யிருக்க, ‘யாவும்
- மக்களுக் காக வாரிக் கொடுத்தான்
- கடன்கள் வாங்கினான் கைசீட் டெழுதினான்,
- ஒற்றி கொடுத்தான்’ என்றுன் பெற்றோர்
- எங்கள் ஐயாவைத் தூற்றுவ தெல்லாம்
- உணர்வில் லாமல் உளறுவ தல்லவோ?’
- என்று கூறிய மொழிகள் யாவையும்
- மங்கை கேட்டு மனம்நொந் தழுது
- ஒன்றைப் பத்தாய்ப் பெருக்கி உடனே
- தாய்க்குச் சொன்னாள், தந்தையும் அறிந்தார், (35)
- பையப் பையப் பாட்டியும் அறிந்தாள்;
- யாவரும் கூடி என்கண் மணியை
- ‘உனக்கிங் கென்ன உண்டடா பயலே?
- உடையக் காரியைத் தடைவையோ பயலே?
- பத்திர மாயிரு! பழைய காட்டுக்கு
- அனுப்பி விடுவேன், அறிநீ பயலே!’
- என்றிப் படிநா எழுந்தது சொல்லி
- ஏசி வசைகள் பேசிப் பிரம்பால்
- ஐயோ! ரத்தஞ் சிந்த அடித்தனர்.
- காணா தென்று கண்ணில் மிளகும்
- இட்டனர்! இரக்கம் கெட்டவர், பாவிகள்
- நடந்ததை யெல்லாம் நன்கறிந் தாலும்
- யாதும் பேசா திருப்பர்என் கணவர்.