7.கருடாஸ்திரப் படலம்
கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை அவர்களின்[தொகு]
நாஞ்சில் நாட்டு மருமக்கள்வழி மான்மியம்[தொகு]
ஓர் அங்கதக் காவியம்[தொகு]
(வரிகள்: 01-50)[தொகு]
- என்று மருமகன் இயம்பிய மொழிகளை
- மாமன் கேட்டி மனமிக நொந்து
- “நல்ல தப்பா! நாகாஸ் திரங்கள்
- இத்தனை தானோ? இனிவே றுண்டோ?
- உன்னைச் சொல்லி ஒருகுறை யில்லை. (05)
- கலியன் முற்றின காலமி தல்லவோ?
- என்மாம னார்இறந்து வருஷம்எட் டாக
- யான்படும் பாடெலாம் யாரே அறிபவர்!
- நாலாண் டாக நல்ல விளைவிலை
- செலவு கழிந்ததே தெய்வச் செயலாம்!
- அடைமழை யாலே அழிந்ததோர் வருஷம்,
- வெயிலின் கொடுமையால் வெந்ததோர் வருஷம்,
- போன ஆண்டில் பொலியே இல்லை,
- கொக்குநோய் விழுந்து குடியைக் கெடுத்தது,
- கார்விளை வில்லை, பசானம் கரிந்தது, (15)
- விளைவிலை யாயினும் வீட்டுச் செலவில்
- ஒருகுறை யேனும் உண்டோ? அப்பா!
- பிள்ளைப் பேறும் பிறந்த நாளும்
- இல்லா வருஷம் இல்லையே அப்பா!
- குடும்பச் செலவுகள் கூறி முடியுமோ? (20)
- ஒன்றா? இரண்டா? ஒன்பதா? பத்தா?
- ஆண்டு தோறும் ஆலடி மாடன்
- கொடைக்கு ரூபாய் கொஞ்சமா செல்லும்?
- போன கொடைக்குப் புதிதாய் வந்த
- வில்லுக் காரி வீரம் மைக்கு
- நாலு சேலையும் ரூபாய் நாற்பதும்
- கொடுத்தது நீயும் கூடி யல்லவா?
- எனக்கு,
- சல்லடம் கச்சை தைக்க மாத்திரம்
- ஐம்பது ரூபாய் ஆச்சுதே, அப்பா!
- போக்கில் லாத பயல்களைப் போலத்
- துணியை அரையில் சுற்றிக் கொண்டு
- நானும் ஆடினால் நன்றா யிருக்குமா?
- காரணவன் என்றொரு கணிசம் வேண்டாமா?
- பிலே!
- சன்னதி முன்னே தறித்த கடாவுக்கு
- இருவது ரூபாய் எண்ணிவைத் தேனே!
- நீங்கள்,
- அப்பன் மக்கள் அனைவரும் இங்கே
- இருந்து தின்றது போதா தென்று (40)
- கொடியிறைச் சிகளும் கொண்டுபோ னீரே?
- இந்தச்செலவுகள் ஏற்படு வதனால்
- மாடனை வணங்கா திருகக லாமா?
- கடன்பட் டாயினும் காலா காலத்தில்
- வேண்டும் காரியம் செய்ய வேண்டாமா? (45)
- கொடைஓ ராண்டு கொடுக்க முடங்கினால்
- குடும்ப தோஷமும் குறையும் வராதோ?
- அடே!
- ஆத்தாள் செத்த அடியந் திரச்செலவு
- ஆயிரம் பணமா? ஆறாயி ரம்பணம் (50)
(வரிகள்: 51-100)[தொகு]
- என்று சொல்லவுன் வாய்க்கிய லாதோ?
- பந்தல் இல்லையா? பாடை இல்லையா?
- பறைமே ளங்களும் பாட்டும் இல்லையா?
- நாலு தெருவும் நடைமாற் றில்லையா?
- காள மில்லையா? கருங்கொம் பில்லையா? (55)
- களியல் கூத்தசை கம்புகள் இல்லையா?
- முரசு வாத்திய முழக்க மில்லையா?
- என்ன இல்லை என்தாய்க் கப்பா?
- தோசை ஆயிரம் சுட்டு மூலையில்
- ஆசை தீரவைத் தழுத தில்லையா? (60)
- பத்துச் சாக்குப் பயறும் ஒன்றாய்
- அடுத்த கிழமையில் அவிக்க வில்லையா?
- தேங்காய்,
- இரண்டா யிரத்துக் கதிகம் எடுத்து
- வீடு வீடாய் விளம்ப வில்லையா? (65)
- பதினா றன்று பார்ப்பார்க் கெல்லாம்
- பட்டுக் கடையும் பாத ரட்சையும்
- கட்டிலும் மெத்தையும் கடுக்கன்மோ திரமும்
- பாயச பாத்திரம் பஞ்சபாத் திரமும்
- அமுது படியும் அளிக்க வில்லையா? (70)
- மேலும்,
- பசுவும் கன்றும், பத்து மரக்கால்
- நிலமும் தானமும் நெறிதவ றாமல்
- செய்ய வில்லையா? தினமும் வெற்றிலைச்
- செலவும் உனக்குத் தெரியா தோடா? (75)
- படிப்புரை யருகில் வைத்த படிக்கம்
- பத்திர காளி பலிபீ டம்போல்
- ஆனதை நீயும் அறியா யோடா?
- பத்துப் பெண்கள் பட்டினி கிடந்து
- பருத்திப் பொதிபோல் பதினா றாம்நாள் (80)
- வெளியில் வந்திட வேண்டு மானால்
- அவர்,
- எத்தனை தோசை இட்லிக் கெல்லாம்
- ஏம காலரா யிருப்பர்? அப்பா!
- இட்ட செலவெலாம் எடுத்துச் சொன்னால் (85)
- எண்ணி முடியுமா? எழுதி முடியுமா?
- சிதம்பரக் கட்டளை, செந்திற் கட்டளை,
- மதுரைக் கட்டளை, வகைக்கொரு பூவில்
- எண்பது கோட்டை நெல்லில் உழக்குக்
- குறைந்த தானால் கொடுக்க முடியுமா? (90)
- பேயும் அஞ்சும் பெரும்ப ழஞ்சி
- ஐய னிடத்தில் ஆண்டு தோறும்
- கொண்ட கடனைக் கொடுக்கா விட்டால்
- அவர், வயிற்றை ஊத வைத்திடு வாரே!
- குறளியை ஏவிக் கொன்றிடு வாரே! (95)
- நினைத்திராமல் நிதமும் எத்தனை
- செலவுகள் வந்திடும், தெரியுமா உனக்கு
- ‘சானல் வாச்சர்’ சந்தனத் தேவர்க்கு
- ‘அட்ரஸ்’ கொடுத்த வகைக்கோ ராறு
- ரூபாய் இன்று ரொக்கம் கொடுத்தேன் (100)
(வரிகள்: 101-150)[தொகு]
- இனி,
- இந்தமாதம் இருபதாம் தியதி
- ‘கார்டர்’ அண்ணன் காடு மாறிப்
- போகிறார். அவரைச் சும்மா போகச்
- சொல்ல லாமோ? சொல்நீ அப்பா! (105)
- இப்படி யிப்படி இன்னும் செலவுகள்
- எத்தனை யோவரும்! எண்ணில் அடங்குமோ?
- உழவன் மீதி உழவுக் கம்பென
- உலகம் சொல்வதும் உண்மை யல்லவோ?
- பிலே!நீ,
- ஏழு வருஷமாய் இங்கிலீஷ் படித்தையே
- ஏ,பி, ஸி,டி எழுதத் தெரியுமா?
- எத்தனை பணத்தை வாரி யெறிந்தேன்,
- எல்லாம் பாழுக் கிறைத்த நீர்போல்
- ஆக்கிவிட் டாயே, அவலட் சணமே!
- அந்தச்
- சாஸ்தாங் கோவில் சாந்தி அய்யர்
- மகனுக் கெத்தனை வயது காணும்
- அவன்,
- படித்து பி.ஏ. ‘பாசாய்’, நல்ல
- பதிவியி லிருப்பதைப் பார்க்க வில்லையா?
- உண்மை, உண்மை! ஒருதடை யில்லை.
- பட்டினி கிடந்து படிப்பவர் மட்டுமே
- பரிட்சை தேறுவர் பட்டமும் பெறுவர்!
- அன்றி,
- ஆமை வடைக்காய் அரைஞாண் பணயம்
- போளிக் காகப் புத்தகம் பணயம்,
- சீடைக் காகச் சிலேட்டுப் பணயம்,
- முறுக்குக் காக மோதிரம் பணயம்,
- காப்பிக் காக கடுக்கன் பணயம், (130)
- ‘காலரு’க் காகக் காறை பணயம்,
- கூத்துக் காகக் குடையும் பணயம்,
- இப்படி யாக எல்லாம் பணயம்,
- வைத்துத் தின்னும் வயிற்றுக் கள்வர்
- வாழ்ந்திடு வாரோ? வாழ்ந்திடு வாரோ? (135)
- முருக்குத் தடிபோல் வளர்ந்தமுட் டாளே!
- நீபணயம் வைத்த பண்டம் அனைத்தும்
- எத்தனை தரம்நான் மீட்டி யெடுத்துத்
- தந்தேன் அப்பா! தந்தேன் அப்பா!
- அடே,
- ஆறு வருஷமாய் ‘ஐகோர்ட்’ வரையும்
- வழக்குப் பேசிஎன் மாமனா ருக்குப்
- பணம்கடன் கொடுத்த பயல்களை எல்லாம்
- பஞ்சாய்ப் பறத்தின பாதர் சிங்கமாம்
- என்னையும் குடும்ப தோஷி என்றுநீ (145)
- சொல்லவந்த தாயே! சொல்லவந்த தாயே!
- விலைக்கு விற்ற விளையை மைனர்
- வியாச்சியம் செயது, மீட்டினது உன்தன்
- அப்பனா? நானா? ஆரடா? சொல்லு!
- அன்பாய்ப பேசும்உன் அப்பனால் உனக்கு (150)
(வரிகள்: 151-200)[தொகு]
- அரைக்கா சுக்கோர் ஆதாய முண்டோ?
- மூத்த
- காரணவர் பெற்ற கன்றுகள் கூடி
- ஆயிரம் ரூபாய்க்கு ஆவ லாதி
- வைத்ததை நீயும் மறந்தா யோடா? (155)
- அந்த
- உகந்துடை மைப்பணம் ஒன்றும் அவருக்கு
- இல்லா தாக்க என்னபா டெல்லாம்
- பட்டேன் அப்பா! பார்த்தது மில்லையோ?
- குசும்பன் சாமியும் குண்டுணிச் சுப்புவும்
- உன்
- அப்பனும் கூடி ஆலோ சனைகள்
- செய்த தெல்லாம் தெரியும், தெரியும்!
- அறிந்த வித்தைகள் அனைத்தையும் அவரைக்
- காட்டச் சொல்போ, காட்டச் சொல்போ! (165)
- கோர்ட்டில் வியாச்சியம் கொட்க்கச் சொல்போ
- ‘செருப்பா லடித்தா செலவுக்கு வாங்குவார்?
- வாங்கட்டும் வாங்கட்டும்! வட்டி முடையட்டும்!
- நாஞ்சி னாட்டுக்கு நன்மையுண் டாகட்டும்!
- இனியுள காலம் எக்கா ரணவனும் (170)
- காடும் மேடும் கடையும் சுற்றி
- ஊணும் உறக்கமும் இன்றி உழைத்து
- விளையும் விளைவெலாம் வீசித் தூற்றி,
- சுரமும் பதரும் இல்லா தகற்றி
- சாக்கில் அளந்து தலையில் எடுத்து (175)
- மாதா மாதம் மருமகன் ராஜா
- திருவுளங் கொண்டெழுந் தருளி யிருக்கும்
- கொட்டா ரத்தில் கொண்டு சென்று
- அவர்,
- குறட்டைச் சுருதியில் கும்ப கர்ணப் (180)
- படலம் அன்பாய்ப் பாரா யணம்செய்யும்
- காலமா யிருந்தால், காத்துநின்று அல்லது
- நடுமனை கீறி ‘நாயும் புலியும்’
- இஷ்டர்கள் கூட இருந்தி ழுக்கும்
- வேளையா யிருந்தால் விலகிநின்று அல்லது (185)
- புகையிலை வாயிற் போட்டுக் கொண்டு
- பொடியும் மூக்கில் ஏற்றிக் கொண்டு
- ‘இறக்கு, வெட்டு’என இரைந்து கொண்டு
- இடையிடைச் சண்டையும் எழுப்பிக் கொண்டு
- பக்க மந்திரிகள் பலரொடும் சீட்டுக் (190)
- கச்சேரி செய்யும் காலமா யிருந்தால்
- ஓரிடம் மாறி ஒதுங்கி நின்று
- தாயப் போர்க்கொரு தடைசெய் யாமல்
- குடித்தன மில்லாமல் குறிகள் அறிந்து
- தடித்தன மில்லாச் சமயம் பார்த்து (195)
- ‘அரசே! பெருந்திரு அமுதுக் காக
- இம்மா தத்துக்கு ஏற்படும் நெல்லிதை
- அளந்து களஞ்சியத்து ஆக்கிடக் கற்பனை
- பாலித் தருள்வீர்’ என்று பணிந்து
- நிற்கும் படிக்கு நீயும் கோர்ட்டுத் (200)
(வரிகள்: 201-250)[தொகு]
- தீர்ப்பைப் பெற்றுச் சீக்கிரம் வாபோ!
- உள்ளநா ளெல்லாம் உங்கட் காகநான்
- உழைத்தது இந்த ஊர்அறி யாதோ?
- பெண்டாட் டிக்கும் பிள்ளை கட்கும்
- இத்தனை நாளாய் எத்தனை கொடுத்தேன்? (205)
- உண்ணச் சோறும் உடுக்கத் துணியும்
- கொடுத்தால், என்ன குறைவாய் விடுமோ!
- அடிமைகள் போல்இவர் அத்தனை வேலையும்
- செய்வதும் உனக்குத் தெரியா தோடா?
- வயலைப் பார்த்து வாஎனில் ‘கிழட்டுப் (210)
- பயலே! உனக்குப் பயித்தியம்’ என்பாய்!
- ‘கொத்தை அளந்து கொடுஎன் றால்நீ
- வைத்த ஆளோ? மாட்டேன் என்பாய்!
- போன பூவில் புளியடிச் சூடு
- வட்டந் தள்ளி வரும்போது உன்னிடம், (215)
- ‘களத்தில் சென்று கண்காணி’ என்றேன்,
- அந்தப் படியே அவ்விடம் சென்றுநீ
- நிமிஷப் பொழுதில் நெல்அரைக் கோட்டை
- கடத்தி விட்ட கதையும் எனக்குத்
- தெரியா தோடா? திருட்டுப் பயலே! (220)
- மறுநாள்,
- விடியற் காலம் விசாரிப்புக் காரன்
- சாக்கும் இருபதாம் நம்பர் ‘ஷாப்பில்’
- இருந்தது கண்டுவந்து என்னிடம் சொன்னான்,
- வெளியில் சொன்னால் வெட்க மல்லவோ? (225)
- ஊரும் நாடும் ஒன்றாய்ச் சிரிக்குமே!
- என்றுபே சாது இருந்து விட்டேன்,
- அடே!
- செப்பில் கிடந்த திருக்குப்பூ அன்று
- எப்படி இறங்கி இரண்டாம் குடியாள் (230)
- கொண்டையில் சென்று குடியே றியது?
- என்னைக் குடும்ப தோஷி யென்று
- கூற உனக்குவாய் கூச வில்லையோ?
- குடும்பத் துக்கொரு குறையும் வராமல்
- காரியம் பார்க்கும் கார ணவர்களில் (235)
- எல்லா வகையிலும் என்னைப் போல
- நல்லவர் இந்த நாஞ்சில் நாடு
- பன்னி ரண்டு படாகையில் உண்டோ?”
- என்று வீரம் பேசி எழுந்தனர்.