7.கருடாஸ்திரப் படலம்

விக்கிமூலம் இலிருந்து

கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை அவர்களின்[தொகு]

நாஞ்சில் நாட்டு மருமக்கள்வழி மான்மியம்[தொகு]

ஓர் அங்கதக் காவியம்[தொகு]

(வரிகள்: 01-50)[தொகு]

என்று மருமகன் இயம்பிய மொழிகளை
மாமன் கேட்டி மனமிக நொந்து
“நல்ல தப்பா! நாகாஸ் திரங்கள்
இத்தனை தானோ? இனிவே றுண்டோ?
உன்னைச் சொல்லி ஒருகுறை யில்லை. (05)
கலியன் முற்றின காலமி தல்லவோ?
என்மாம னார்இறந்து வருஷம்எட் டாக
யான்படும் பாடெலாம் யாரே அறிபவர்!
நாலாண் டாக நல்ல விளைவிலை
செலவு கழிந்ததே தெய்வச் செயலாம்!
அடைமழை யாலே அழிந்ததோர் வருஷம்,
வெயிலின் கொடுமையால் வெந்ததோர் வருஷம்,
போன ஆண்டில் பொலியே இல்லை,
கொக்குநோய் விழுந்து குடியைக் கெடுத்தது,
கார்விளை வில்லை, பசானம் கரிந்தது, (15)
விளைவிலை யாயினும் வீட்டுச் செலவில்
ஒருகுறை யேனும் உண்டோ? அப்பா!
பிள்ளைப் பேறும் பிறந்த நாளும்
இல்லா வருஷம் இல்லையே அப்பா!
குடும்பச் செலவுகள் கூறி முடியுமோ? (20)
ஒன்றா? இரண்டா? ஒன்பதா? பத்தா?
ஆண்டு தோறும் ஆலடி மாடன்
கொடைக்கு ரூபாய் கொஞ்சமா செல்லும்?
போன கொடைக்குப் புதிதாய் வந்த
வில்லுக் காரி வீரம் மைக்கு
நாலு சேலையும் ரூபாய் நாற்பதும்
கொடுத்தது நீயும் கூடி யல்லவா?
எனக்கு,
சல்லடம் கச்சை தைக்க மாத்திரம்
ஐம்பது ரூபாய் ஆச்சுதே, அப்பா!
போக்கில் லாத பயல்களைப் போலத்
துணியை அரையில் சுற்றிக் கொண்டு
நானும் ஆடினால் நன்றா யிருக்குமா?
காரணவன் என்றொரு கணிசம் வேண்டாமா?
பிலே!
சன்னதி முன்னே தறித்த கடாவுக்கு
இருவது ரூபாய் எண்ணிவைத் தேனே!
நீங்கள்,
அப்பன் மக்கள் அனைவரும் இங்கே
இருந்து தின்றது போதா தென்று (40)
கொடியிறைச் சிகளும் கொண்டுபோ னீரே?
இந்தச்செலவுகள் ஏற்படு வதனால்
மாடனை வணங்கா திருகக லாமா?
கடன்பட் டாயினும் காலா காலத்தில்
வேண்டும் காரியம் செய்ய வேண்டாமா? (45)
கொடைஓ ராண்டு கொடுக்க முடங்கினால்
குடும்ப தோஷமும் குறையும் வராதோ?
அடே!
ஆத்தாள் செத்த அடியந் திரச்செலவு
ஆயிரம் பணமா? ஆறாயி ரம்பணம் (50)

(வரிகள்: 51-100)[தொகு]

என்று சொல்லவுன் வாய்க்கிய லாதோ?
பந்தல் இல்லையா? பாடை இல்லையா?
பறைமே ளங்களும் பாட்டும் இல்லையா?
நாலு தெருவும் நடைமாற் றில்லையா?
காள மில்லையா? கருங்கொம் பில்லையா? (55)
களியல் கூத்தசை கம்புகள் இல்லையா?
முரசு வாத்திய முழக்க மில்லையா?
என்ன இல்லை என்தாய்க் கப்பா?
தோசை ஆயிரம் சுட்டு மூலையில்
ஆசை தீரவைத் தழுத தில்லையா? (60)
பத்துச் சாக்குப் பயறும் ஒன்றாய்
அடுத்த கிழமையில் அவிக்க வில்லையா?
தேங்காய்,
இரண்டா யிரத்துக் கதிகம் எடுத்து
வீடு வீடாய் விளம்ப வில்லையா? (65)
பதினா றன்று பார்ப்பார்க் கெல்லாம்
பட்டுக் கடையும் பாத ரட்சையும்
கட்டிலும் மெத்தையும் கடுக்கன்மோ திரமும்
பாயச பாத்திரம் பஞ்சபாத் திரமும்
அமுது படியும் அளிக்க வில்லையா? (70)
மேலும்,
பசுவும் கன்றும், பத்து மரக்கால்
நிலமும் தானமும் நெறிதவ றாமல்
செய்ய வில்லையா? தினமும் வெற்றிலைச்
செலவும் உனக்குத் தெரியா தோடா? (75)
படிப்புரை யருகில் வைத்த படிக்கம்
பத்திர காளி பலிபீ டம்போல்
ஆனதை நீயும் அறியா யோடா?
பத்துப் பெண்கள் பட்டினி கிடந்து
பருத்திப் பொதிபோல் பதினா றாம்நாள் (80)
வெளியில் வந்திட வேண்டு மானால்
அவர்,
எத்தனை தோசை இட்லிக் கெல்லாம்
ஏம காலரா யிருப்பர்? அப்பா!
இட்ட செலவெலாம் எடுத்துச் சொன்னால் (85)
எண்ணி முடியுமா? எழுதி முடியுமா?
சிதம்பரக் கட்டளை, செந்திற் கட்டளை,
மதுரைக் கட்டளை, வகைக்கொரு பூவில்
எண்பது கோட்டை நெல்லில் உழக்குக்
குறைந்த தானால் கொடுக்க முடியுமா? (90)
பேயும் அஞ்சும் பெரும்ப ழஞ்சி
ஐய னிடத்தில் ஆண்டு தோறும்
கொண்ட கடனைக் கொடுக்கா விட்டால்
அவர், வயிற்றை ஊத வைத்திடு வாரே!
குறளியை ஏவிக் கொன்றிடு வாரே! (95)
நினைத்திராமல் நிதமும் எத்தனை
செலவுகள் வந்திடும், தெரியுமா உனக்கு
‘சானல் வாச்சர்’ சந்தனத் தேவர்க்கு
‘அட்ரஸ்’ கொடுத்த வகைக்கோ ராறு
ரூபாய் இன்று ரொக்கம் கொடுத்தேன் (100)

(வரிகள்: 101-150)[தொகு]

இனி,
இந்தமாதம் இருபதாம் தியதி
‘கார்டர்’ அண்ணன் காடு மாறிப்
போகிறார். அவரைச் சும்மா போகச்
சொல்ல லாமோ? சொல்நீ அப்பா! (105)
இப்படி யிப்படி இன்னும் செலவுகள்
எத்தனை யோவரும்! எண்ணில் அடங்குமோ?
உழவன் மீதி உழவுக் கம்பென
உலகம் சொல்வதும் உண்மை யல்லவோ?
பிலே!நீ,
ஏழு வருஷமாய் இங்கிலீஷ் படித்தையே
ஏ,பி, ஸி,டி எழுதத் தெரியுமா?
எத்தனை பணத்தை வாரி யெறிந்தேன்,
எல்லாம் பாழுக் கிறைத்த நீர்போல்
ஆக்கிவிட் டாயே, அவலட் சணமே!
அந்தச்
சாஸ்தாங் கோவில் சாந்தி அய்யர்
மகனுக் கெத்தனை வயது காணும்
அவன்,
படித்து பி.ஏ. ‘பாசாய்’, நல்ல
பதிவியி லிருப்பதைப் பார்க்க வில்லையா?
உண்மை, உண்மை! ஒருதடை யில்லை.
பட்டினி கிடந்து படிப்பவர் மட்டுமே
பரிட்சை தேறுவர் பட்டமும் பெறுவர்!
அன்றி,
ஆமை வடைக்காய் அரைஞாண் பணயம்
போளிக் காகப் புத்தகம் பணயம்,
சீடைக் காகச் சிலேட்டுப் பணயம்,
முறுக்குக் காக மோதிரம் பணயம்,
காப்பிக் காக கடுக்கன் பணயம், (130)
‘காலரு’க் காகக் காறை பணயம்,
கூத்துக் காகக் குடையும் பணயம்,
இப்படி யாக எல்லாம் பணயம்,
வைத்துத் தின்னும் வயிற்றுக் கள்வர்
வாழ்ந்திடு வாரோ? வாழ்ந்திடு வாரோ? (135)
முருக்குத் தடிபோல் வளர்ந்தமுட் டாளே!
நீபணயம் வைத்த பண்டம் அனைத்தும்
எத்தனை தரம்நான் மீட்டி யெடுத்துத்
தந்தேன் அப்பா! தந்தேன் அப்பா!
அடே,
ஆறு வருஷமாய் ‘ஐகோர்ட்’ வரையும்
வழக்குப் பேசிஎன் மாமனா ருக்குப்
பணம்கடன் கொடுத்த பயல்களை எல்லாம்
பஞ்சாய்ப் பறத்தின பாதர் சிங்கமாம்
என்னையும் குடும்ப தோஷி என்றுநீ (145)
சொல்லவந்த தாயே! சொல்லவந்த தாயே!
விலைக்கு விற்ற விளையை மைனர்
வியாச்சியம் செயது, மீட்டினது உன்தன்
அப்பனா? நானா? ஆரடா? சொல்லு!
அன்பாய்ப பேசும்உன் அப்பனால் உனக்கு (150)

(வரிகள்: 151-200)[தொகு]

அரைக்கா சுக்கோர் ஆதாய முண்டோ?
மூத்த
காரணவர் பெற்ற கன்றுகள் கூடி
ஆயிரம் ரூபாய்க்கு ஆவ லாதி
வைத்ததை நீயும் மறந்தா யோடா? (155)
அந்த
உகந்துடை மைப்பணம் ஒன்றும் அவருக்கு
இல்லா தாக்க என்னபா டெல்லாம்
பட்டேன் அப்பா! பார்த்தது மில்லையோ?
குசும்பன் சாமியும் குண்டுணிச் சுப்புவும்
உன்
அப்பனும் கூடி ஆலோ சனைகள்
செய்த தெல்லாம் தெரியும், தெரியும்!
அறிந்த வித்தைகள் அனைத்தையும் அவரைக்
காட்டச் சொல்போ, காட்டச் சொல்போ! (165)
கோர்ட்டில் வியாச்சியம் கொட்க்கச் சொல்போ
‘செருப்பா லடித்தா செலவுக்கு வாங்குவார்?
வாங்கட்டும் வாங்கட்டும்! வட்டி முடையட்டும்!
நாஞ்சி னாட்டுக்கு நன்மையுண் டாகட்டும்!
இனியுள காலம் எக்கா ரணவனும் (170)
காடும் மேடும் கடையும் சுற்றி
ஊணும் உறக்கமும் இன்றி உழைத்து
விளையும் விளைவெலாம் வீசித் தூற்றி,
சுரமும் பதரும் இல்லா தகற்றி
சாக்கில் அளந்து தலையில் எடுத்து (175)
மாதா மாதம் மருமகன் ராஜா
திருவுளங் கொண்டெழுந் தருளி யிருக்கும்
கொட்டா ரத்தில் கொண்டு சென்று
அவர்,
குறட்டைச் சுருதியில் கும்ப கர்ணப் (180)
படலம் அன்பாய்ப் பாரா யணம்செய்யும்
காலமா யிருந்தால், காத்துநின்று அல்லது
நடுமனை கீறி ‘நாயும் புலியும்’
இஷ்டர்கள் கூட இருந்தி ழுக்கும்
வேளையா யிருந்தால் விலகிநின்று அல்லது (185)
புகையிலை வாயிற் போட்டுக் கொண்டு
பொடியும் மூக்கில் ஏற்றிக் கொண்டு
‘இறக்கு, வெட்டு’என இரைந்து கொண்டு
இடையிடைச் சண்டையும் எழுப்பிக் கொண்டு
பக்க மந்திரிகள் பலரொடும் சீட்டுக் (190)
கச்சேரி செய்யும் காலமா யிருந்தால்
ஓரிடம் மாறி ஒதுங்கி நின்று
தாயப் போர்க்கொரு தடைசெய் யாமல்
குடித்தன மில்லாமல் குறிகள் அறிந்து
தடித்தன மில்லாச் சமயம் பார்த்து (195)
‘அரசே! பெருந்திரு அமுதுக் காக
இம்மா தத்துக்கு ஏற்படும் நெல்லிதை
அளந்து களஞ்சியத்து ஆக்கிடக் கற்பனை
பாலித் தருள்வீர்’ என்று பணிந்து
நிற்கும் படிக்கு நீயும் கோர்ட்டுத் (200)

(வரிகள்: 201-250)[தொகு]

தீர்ப்பைப் பெற்றுச் சீக்கிரம் வாபோ!
உள்ளநா ளெல்லாம் உங்கட் காகநான்
உழைத்தது இந்த ஊர்அறி யாதோ?
பெண்டாட் டிக்கும் பிள்ளை கட்கும்
இத்தனை நாளாய் எத்தனை கொடுத்தேன்? (205)
உண்ணச் சோறும் உடுக்கத் துணியும்
கொடுத்தால், என்ன குறைவாய் விடுமோ!
அடிமைகள் போல்இவர் அத்தனை வேலையும்
செய்வதும் உனக்குத் தெரியா தோடா?
வயலைப் பார்த்து வாஎனில் ‘கிழட்டுப் (210)
பயலே! உனக்குப் பயித்தியம்’ என்பாய்!
‘கொத்தை அளந்து கொடுஎன் றால்நீ
வைத்த ஆளோ? மாட்டேன் என்பாய்!
போன பூவில் புளியடிச் சூடு
வட்டந் தள்ளி வரும்போது உன்னிடம், (215)
‘களத்தில் சென்று கண்காணி’ என்றேன்,
அந்தப் படியே அவ்விடம் சென்றுநீ
நிமிஷப் பொழுதில் நெல்அரைக் கோட்டை
கடத்தி விட்ட கதையும் எனக்குத்
தெரியா தோடா? திருட்டுப் பயலே! (220)
மறுநாள்,
விடியற் காலம் விசாரிப்புக் காரன்
சாக்கும் இருபதாம் நம்பர் ‘ஷாப்பில்’
இருந்தது கண்டுவந்து என்னிடம் சொன்னான்,
வெளியில் சொன்னால் வெட்க மல்லவோ? (225)
ஊரும் நாடும் ஒன்றாய்ச் சிரிக்குமே!
என்றுபே சாது இருந்து விட்டேன்,
அடே!
செப்பில் கிடந்த திருக்குப்பூ அன்று
எப்படி இறங்கி இரண்டாம் குடியாள் (230)
கொண்டையில் சென்று குடியே றியது?
என்னைக் குடும்ப தோஷி யென்று
கூற உனக்குவாய் கூச வில்லையோ?
குடும்பத் துக்கொரு குறையும் வராமல்
காரியம் பார்க்கும் கார ணவர்களில் (235)
எல்லா வகையிலும் என்னைப் போல
நல்லவர் இந்த நாஞ்சில் நாடு
பன்னி ரண்டு படாகையில் உண்டோ?”
என்று வீரம் பேசி எழுந்தனர்.

ஏழாவது, கருடாஸ்திரப் படலம் முற்றியது[தொகு]

பார்க்க[தொகு]

நாஞ்சில் நாட்டு மருமக்கள்வழி மான்மியம்
மருமக்கள்வழி மான்மியம் - கவிமணி
[[]]
1.குலமுறை கிளத்துப் படலம்
2.மாமி அரசியற் படலம்
3.கேலிப் படலம்
4.கடலாடு படலம்
5.பரிகலப் படலம்
6.நாகாஸ்திரப் படலம்
8.வாழ்த்துப் படலம்
9.கோடேறிக் குடிமுடித்த படலம்
10.யாத்திரைப் படலம்
11.கும்பியெரிச்சல் படலம்
"https://ta.wikisource.org/w/index.php?title=7.கருடாஸ்திரப்_படலம்&oldid=443599" இலிருந்து மீள்விக்கப்பட்டது