8.வாழ்த்துப் படலம்

விக்கிமூலம் இலிருந்து

கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை அவர்களின்[தொகு]

நாஞ்சில் நாட்டு மருமக்கள்வழி மான்மியம்[தொகு]

ஓர் அங்கதக் காவியம்[தொகு]

8. வாழ்த்துப் படலம்[தொகு]

(வரிகள்: 01-50)[தொகு]

இக்கொடு மொழிகளாம் .... ....
கருதற் கரிய கருடாஸ் திரங்கள்
பலவும் நெஞ்சிற் பாய, மருமகன்
புண்பட் டுள்ளம் பொறுக்க முடியாது,
ஐயோ! என்றுகண் ணீர்விட்(டு) அழுது, (05)
தந்தை தாயார் தம்மிடம் சென்று
விளைந்த எல்லாம் விரிவா யுரைத்தான்;
கோபம் பொங்கிக் கொதித்து வரும்படி
சிற்சில இடையிற் சேர்த்தும் கொண்டான்.
செப்பிய சொற்கள் தீயிற் காய்ச்சிய (10)
கம்பிகள்போல்இரு காதும் நுழைந்திட,
வீர பத்திரப் பிள்ளை வெகுண்டு
கால்நிமி ஷத்(து)என் கணவரைக் கண்டு
“அடடா மூடா! அதர்ம சண்டாளா!
வஞ்சகா! கொடிய மறவா! குறவா! (15)
நெஞ்சில் இரக்கம் இல்லா நீசா!
மடையா! நீயென் மகனை நோக்கி
ஊத்தை வாயால் உளறின மொழிகளை
இன்னும் ஒருமுறை என்முன் வந்து
சொல்லடா பார்ப்போம், சொல்லடா பார்ப்போம்! (20)
பள்ளிப் பையனைப் பதினா றாண்டு
திகையாப் பாலனை, தெரியாச் சிறுவனை
கன்னியும் காப்பும் காணாக் குமரனை,
கள்ளன் என்றும் கபடன் என்றும்
கள்ளை யுண்டு களிப்பவன் என்றும் (25)
தடியன் என்றும் மடியன் என்றும்
தாசிகள் வீட்டுத் தானிகன் என்றும்,
பழித்துப் பேசிய பாதகா! உன்தன்
நாவை யரிந்து நாய்முன் எறிந்தா
லன்றி என்சினம் ஆறா தே,அடா! (30)
உன்மகன் சாமி ஒழுங்குகள் எல்லாம்
யான்றி யேன்என் றிருந்தா யோடா?
அவன்,
பரத்தை நாடிப் பௌரணை தோறும்
கன்னிப் பதிக்குப் போகும் காரணம் (35)
பக்தியின் மிகுதியோ? பணத்தின் மிகுதியோ?
உண்டு கொழுத்த உரத்தின் மிகுதியோ?
உண்மை யறிய உனக்கு முடியுமோ?
கள்ளுக் குடிக்கிற காரிய மெல்லாம்
மந்தா ரம்புதூர் மதுவிளை நாடான் (40)
கிட்டின முத்துவைக் கேட்டால் தெரியும்;
நான்சொன் னால்நீ நம்புவை யோடா?
பள்ளியில் உன்மகன் படித்துப் பெரிய
பரீட்சையும் கொடுத்துப் பட்டமும் பெற்(று)ஒரு
மாதவ ராயராய் வரட்டும், அப்பா! (45)
நாடும் நகரும் நடுங்கட்டும், அப்பா!
அழகு! அழகு! அதிசயம், அதிசயம்!
பெற்ற புத்திரன் பெரும்பிழை செய்யினும்
சிறுவன் செய்த சிறுபிழை என்பாய்,
சினந்திட மாட்டாய், சிரித்து விடுவாய். (50)

(வரிகள்: 51-100)[தொகு]

ஏசினும் பேசினும் எட்டி யடிப்பினும்
மறுத்துரை செய்யாய், பொறுத்துக் கொள்வாய்.
‘மக்கள்மெய் தீண்டலுடற் கின்பம் மற்றவர்
சொற்கேட்டல் இன்பம் செவிக்’கெனச் சொல்லும்
உண்மைக் குறளின் உட்பொருள் அறிந்து (55)
நடப்பவர் உன்போல நானிலத் தில்லை!
ஆனால்,
மருமகன் வந்து வணங்கி நின்று
வாழ்த்த எண்ணி வாயைத் திறக்குமுன்
வைதான் என்று பொய்தான் சொல்வாய்! (60)
அடியேன் என்(று)அவன் அங்கை கூப்பினும்
அடித்தான் என்(று)அநி யாயமே கூறுவாய்!
காரண வா!உன் காரிய மெல்லாம்
அற்புதம் அற்புதம்! அற்புதம்! அப்பா!
ஒருகண் வெண்ணெயும் ஒருகண் நீறும் (65)
வைப்பதும் உனக்கு வழக்கந் தானடா!
இதற்குச் சாத்திரம் எங்கே பார்த்து
வைத்திருக் கின்றீர், மாப்பிள்ளைத் துரையே!
போட்டும்;
ஆண்டு தோறும் அறுப்புக் கால(ம்)உன் (70)
நாலாம் மனைவி நாடகக் காரி,
வித்துத் தண்டும் வாளை மீனும்
முருங்கைக் காயும் மொச்சைக் கொட்டையும்
வட்டி வட்டியாய் வாங்கி வாங்கிக்
கறிகள் வைத்துக் கஞ்சியும் வைத்து, (75)
கஞ்சியை
ஆற்றி யாற்றி அரையரை அகப்பையாய்
விட்டுக் கொண்டு, விசிறி எடுத்து,
வியர்வை மாற வீசிக் கொண்டு,
பற்பல பேச்சிலும் பக்குவ மாக (80)
உண்மையும் பொய்யும் ஒருங்கு கலந்து
காலம் போக்கும் காரணம் இன்னதென்று
அப்ப முத்துநீ அறிவா யோடா?
கொட்டுக் குடலைப் புட்டும் தின்று,மேல்
குறுணிக் காப்பியும் குடித்தால் போதுமா? (85)
வீட்டுக் காரியம் விசாரித்து அறிய
மதியில் லாதவன் மனிதனா? மாடா
சாளையும் சோறும் சண்ணும் சப்பா,
களத்துச் சுவரைக் கடந்து போவது
எத்தனை வட்டிநெல் என்(று)அறி வாயோ? (90)
கூடப் பிறந்தவள் கும்பி கொதித்து
வந்துநின் றாலும், மாபா தகன்நீ,
ஆழாக்கு நெல்லும் அளித்திடு வாயோ?
அலர்தலை யுலகில் அறவழி நில்லா
அரசர் மகுடம் அனைத்தையும் ஒன்றாய் (95)
அடித்து நொறுக்கி அழலிற் காய்ச்சி
மாசெலம் அகற்றி வையகம் தொழுதன்
அடியில் இடும்செருப் பாணிகள் ஆக்கவும்
அவர்,
கொடுங்கோல் எல்லாம் குதிரைப் பாகர் (100)

(வரிகள்: 101-150)[தொகு]

தாங்குதற் குரிய சவுக்குகள் ஆக்கவும்
ஈட்டி வாள்இவை யாவையும் முறித்துப்
பண்பட நிலம்உழு படைகள் ஆக்கவும்
கொடிகள் கொற்றக் குடைகள் இவற்றைச்
சிறுசிறு துண்டாய்க் கீறிச் சிறுமியர் (105)
பாவைக்கு அணிபா வாடைகள் ஆக்கவும்
நாடும் நகரும் நாசம் செய்யும்
பென்னம் பெரிய பீரங்கி களை
இந்திய நாட்டில் இழுத்துக் கொணர்ந்து
செந்நெல் கோதுமை தீங்கரும்(பு) என்று (110)
பன்னப் படுபல பயிர்களுக்கும் ஓங்குநம்
நிலங்களில் என்றும் நீர்வளம் பெருகக்
கங்கை யமுனை காவிரி முதலிய
வற்றிலா நதிகளில் மடைகள் ஆக்கவும்
கங்கணம் கட்டியெம் காவலர் காவலன் (115)
ஐந்தாம் ஜியார்ஜாம் அமரா பரணன்
பூதலம் மீதலம் பாதலம் நடுங்க
ஏம கால தூதரும் இளைக்கக்
கடும்போர் செய்யுமிக் காலந் தன்னில்
காரண வர்களே! காரண வர்களே! (120)
குடும்பந் தோறும் கொடுங்கோ லரசு
நிலைத்திட முயல்வது நீதிதா னாகுமோ?
அது,
நீணிலத்து இனியொரு நிமிடம் நிற்குமோ?
ஐயோ! இவர்செய்யும் அநியா யங்களை (125)
அறிபவர் யாரே! அறிபவர் யாரே!
கொடுங்கோ லரசர் குடிகளைப் போல்,இக்
காரண வர்களின் கைக்கீழ்த் தங்கி
இரவும் பகலும் எவ்வெப் பொழுதும்
மாறாக் கண்ணீர் வடிய விட்டுத் (130)
தீராத் துயரம் திருநாள் எண்ணி
நைந்து நொந்து நாளைக் கழிப்பவர்
எத்தனை யெத்தனை எத்தனை யென்பேன்!”
என்றெலாம் சொல்லி இனிய மொழிகளால்
வாழ்த்தி நல்ல வரங்களும் கொடுத்துத் (135)
தெருவில் இறங்கினார்; சிறிது தூரம்
சென்று, பின்னும் சீறிச் சினந்து
வந்தார்! வந்த வரவில், மண்டை
படீரென வாசற் படியில் மோத
முன்னிலும் கோபம் மூண்டு, “மூடா! (140)
வஞ்சகா! உன்குட வண்டியைக் கலக்கிப்
போடு கிறேன்பார் .... ....
.... .... .... ....
.... .... ..... .....
படபட என்று பற்பல மொழிகளைப் (145)
பொரித்துக் கொட்டிப் போனார், அம்மா!
கணவரோ,
வைய வைய வைரக் கல்லும்
திட்டத் திட்டத் திண்டுக் கல்லும்
ஆகி யிருந்தனர் .... .... (150)

எட்டாவது, வாழ்த்துப் படலம் முற்றியது[தொகு]

பார்க்க[தொகு]

நாஞ்சில் நாட்டு மருமக்கள்வழி மான்மியம்
மருமக்கள்வழி மான்மியம் - கவிமணி
1.குலமுறை கிளத்துப் படலம்
2.மாமி அரசியற் படலம்
3.கேலிப் படலம்
4.கடலாடு படலம்
5.பரிகலப் படலம்
6.நாகாஸ்திரப் படலம்
7.கருடாஸ்திரப் படலம்
9.கோடேறிக் குடிமுடித்த படலம்
10.யாத்திரைப் படலம்
11.கும்பியெரிச்சல் படலம்
"https://ta.wikisource.org/w/index.php?title=8.வாழ்த்துப்_படலம்&oldid=443598" இலிருந்து மீள்விக்கப்பட்டது