8.வாழ்த்துப் படலம்
Jump to navigation
Jump to search
கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை அவர்களின்[தொகு]
நாஞ்சில் நாட்டு மருமக்கள்வழி மான்மியம்[தொகு]
ஓர் அங்கதக் காவியம்[தொகு]
8. வாழ்த்துப் படலம்[தொகு]
(வரிகள்: 01-50)[தொகு]
- இக்கொடு மொழிகளாம் .... ....
- கருதற் கரிய கருடாஸ் திரங்கள்
- பலவும் நெஞ்சிற் பாய, மருமகன்
- புண்பட் டுள்ளம் பொறுக்க முடியாது,
- ஐயோ! என்றுகண் ணீர்விட்(டு) அழுது, (05)
- தந்தை தாயார் தம்மிடம் சென்று
- விளைந்த எல்லாம் விரிவா யுரைத்தான்;
- கோபம் பொங்கிக் கொதித்து வரும்படி
- சிற்சில இடையிற் சேர்த்தும் கொண்டான்.
- செப்பிய சொற்கள் தீயிற் காய்ச்சிய (10)
- கம்பிகள்போல்இரு காதும் நுழைந்திட,
- வீர பத்திரப் பிள்ளை வெகுண்டு
- கால்நிமி ஷத்(து)என் கணவரைக் கண்டு
- “அடடா மூடா! அதர்ம சண்டாளா!
- வஞ்சகா! கொடிய மறவா! குறவா! (15)
- நெஞ்சில் இரக்கம் இல்லா நீசா!
- மடையா! நீயென் மகனை நோக்கி
- ஊத்தை வாயால் உளறின மொழிகளை
- இன்னும் ஒருமுறை என்முன் வந்து
- சொல்லடா பார்ப்போம், சொல்லடா பார்ப்போம்! (20)
- பள்ளிப் பையனைப் பதினா றாண்டு
- திகையாப் பாலனை, தெரியாச் சிறுவனை
- கன்னியும் காப்பும் காணாக் குமரனை,
- கள்ளன் என்றும் கபடன் என்றும்
- கள்ளை யுண்டு களிப்பவன் என்றும் (25)
- தடியன் என்றும் மடியன் என்றும்
- தாசிகள் வீட்டுத் தானிகன் என்றும்,
- பழித்துப் பேசிய பாதகா! உன்தன்
- நாவை யரிந்து நாய்முன் எறிந்தா
- லன்றி என்சினம் ஆறா தே,அடா! (30)
- உன்மகன் சாமி ஒழுங்குகள் எல்லாம்
- யான்றி யேன்என் றிருந்தா யோடா?
- அவன்,
- பரத்தை நாடிப் பௌரணை தோறும்
- கன்னிப் பதிக்குப் போகும் காரணம் (35)
- பக்தியின் மிகுதியோ? பணத்தின் மிகுதியோ?
- உண்டு கொழுத்த உரத்தின் மிகுதியோ?
- உண்மை யறிய உனக்கு முடியுமோ?
- கள்ளுக் குடிக்கிற காரிய மெல்லாம்
- மந்தா ரம்புதூர் மதுவிளை நாடான் (40)
- கிட்டின முத்துவைக் கேட்டால் தெரியும்;
- நான்சொன் னால்நீ நம்புவை யோடா?
- பள்ளியில் உன்மகன் படித்துப் பெரிய
- பரீட்சையும் கொடுத்துப் பட்டமும் பெற்(று)ஒரு
- மாதவ ராயராய் வரட்டும், அப்பா! (45)
- நாடும் நகரும் நடுங்கட்டும், அப்பா!
- அழகு! அழகு! அதிசயம், அதிசயம்!
- பெற்ற புத்திரன் பெரும்பிழை செய்யினும்
- சிறுவன் செய்த சிறுபிழை என்பாய்,
- சினந்திட மாட்டாய், சிரித்து விடுவாய். (50)
(வரிகள்: 51-100)[தொகு]
- ஏசினும் பேசினும் எட்டி யடிப்பினும்
- மறுத்துரை செய்யாய், பொறுத்துக் கொள்வாய்.
- ‘மக்கள்மெய் தீண்டலுடற் கின்பம் மற்றவர்
- சொற்கேட்டல் இன்பம் செவிக்’கெனச் சொல்லும்
- உண்மைக் குறளின் உட்பொருள் அறிந்து (55)
- நடப்பவர் உன்போல நானிலத் தில்லை!
- ஆனால்,
- மருமகன் வந்து வணங்கி நின்று
- வாழ்த்த எண்ணி வாயைத் திறக்குமுன்
- வைதான் என்று பொய்தான் சொல்வாய்! (60)
- அடியேன் என்(று)அவன் அங்கை கூப்பினும்
- அடித்தான் என்(று)அநி யாயமே கூறுவாய்!
- காரண வா!உன் காரிய மெல்லாம்
- அற்புதம் அற்புதம்! அற்புதம்! அப்பா!
- ஒருகண் வெண்ணெயும் ஒருகண் நீறும் (65)
- வைப்பதும் உனக்கு வழக்கந் தானடா!
- இதற்குச் சாத்திரம் எங்கே பார்த்து
- வைத்திருக் கின்றீர், மாப்பிள்ளைத் துரையே!
- போட்டும்;
- ஆண்டு தோறும் அறுப்புக் கால(ம்)உன் (70)
- நாலாம் மனைவி நாடகக் காரி,
- வித்துத் தண்டும் வாளை மீனும்
- முருங்கைக் காயும் மொச்சைக் கொட்டையும்
- வட்டி வட்டியாய் வாங்கி வாங்கிக்
- கறிகள் வைத்துக் கஞ்சியும் வைத்து, (75)
- கஞ்சியை
- ஆற்றி யாற்றி அரையரை அகப்பையாய்
- விட்டுக் கொண்டு, விசிறி எடுத்து,
- வியர்வை மாற வீசிக் கொண்டு,
- பற்பல பேச்சிலும் பக்குவ மாக (80)
- உண்மையும் பொய்யும் ஒருங்கு கலந்து
- காலம் போக்கும் காரணம் இன்னதென்று
- அப்ப முத்துநீ அறிவா யோடா?
- கொட்டுக் குடலைப் புட்டும் தின்று,மேல்
- குறுணிக் காப்பியும் குடித்தால் போதுமா? (85)
- வீட்டுக் காரியம் விசாரித்து அறிய
- மதியில் லாதவன் மனிதனா? மாடா
- சாளையும் சோறும் சண்ணும் சப்பா,
- களத்துச் சுவரைக் கடந்து போவது
- எத்தனை வட்டிநெல் என்(று)அறி வாயோ? (90)
- கூடப் பிறந்தவள் கும்பி கொதித்து
- வந்துநின் றாலும், மாபா தகன்நீ,
- ஆழாக்கு நெல்லும் அளித்திடு வாயோ?
- அலர்தலை யுலகில் அறவழி நில்லா
- அரசர் மகுடம் அனைத்தையும் ஒன்றாய் (95)
- அடித்து நொறுக்கி அழலிற் காய்ச்சி
- மாசெலம் அகற்றி வையகம் தொழுதன்
- அடியில் இடும்செருப் பாணிகள் ஆக்கவும்
- அவர்,
- கொடுங்கோல் எல்லாம் குதிரைப் பாகர் (100)
(வரிகள்: 101-150)[தொகு]
- தாங்குதற் குரிய சவுக்குகள் ஆக்கவும்
- ஈட்டி வாள்இவை யாவையும் முறித்துப்
- பண்பட நிலம்உழு படைகள் ஆக்கவும்
- கொடிகள் கொற்றக் குடைகள் இவற்றைச்
- சிறுசிறு துண்டாய்க் கீறிச் சிறுமியர் (105)
- பாவைக்கு அணிபா வாடைகள் ஆக்கவும்
- நாடும் நகரும் நாசம் செய்யும்
- பென்னம் பெரிய பீரங்கி களை
- இந்திய நாட்டில் இழுத்துக் கொணர்ந்து
- செந்நெல் கோதுமை தீங்கரும்(பு) என்று (110)
- பன்னப் படுபல பயிர்களுக்கும் ஓங்குநம்
- நிலங்களில் என்றும் நீர்வளம் பெருகக்
- கங்கை யமுனை காவிரி முதலிய
- வற்றிலா நதிகளில் மடைகள் ஆக்கவும்
- கங்கணம் கட்டியெம் காவலர் காவலன் (115)
- ஐந்தாம் ஜியார்ஜாம் அமரா பரணன்
- பூதலம் மீதலம் பாதலம் நடுங்க
- ஏம கால தூதரும் இளைக்கக்
- கடும்போர் செய்யுமிக் காலந் தன்னில்
- காரண வர்களே! காரண வர்களே! (120)
- குடும்பந் தோறும் கொடுங்கோ லரசு
- நிலைத்திட முயல்வது நீதிதா னாகுமோ?
- அது,
- நீணிலத்து இனியொரு நிமிடம் நிற்குமோ?
- ஐயோ! இவர்செய்யும் அநியா யங்களை (125)
- அறிபவர் யாரே! அறிபவர் யாரே!
- கொடுங்கோ லரசர் குடிகளைப் போல்,இக்
- காரண வர்களின் கைக்கீழ்த் தங்கி
- இரவும் பகலும் எவ்வெப் பொழுதும்
- மாறாக் கண்ணீர் வடிய விட்டுத் (130)
- தீராத் துயரம் திருநாள் எண்ணி
- நைந்து நொந்து நாளைக் கழிப்பவர்
- எத்தனை யெத்தனை எத்தனை யென்பேன்!”
- என்றெலாம் சொல்லி இனிய மொழிகளால்
- வாழ்த்தி நல்ல வரங்களும் கொடுத்துத் (135)
- தெருவில் இறங்கினார்; சிறிது தூரம்
- சென்று, பின்னும் சீறிச் சினந்து
- வந்தார்! வந்த வரவில், மண்டை
- படீரென வாசற் படியில் மோத
- முன்னிலும் கோபம் மூண்டு, “மூடா! (140)
- வஞ்சகா! உன்குட வண்டியைக் கலக்கிப்
- போடு கிறேன்பார் .... ....
- .... .... .... ....
- .... .... ..... .....
- படபட என்று பற்பல மொழிகளைப் (145)
- பொரித்துக் கொட்டிப் போனார், அம்மா!
- கணவரோ,
- வைய வைய வைரக் கல்லும்
- திட்டத் திட்டத் திண்டுக் கல்லும்
- ஆகி யிருந்தனர் .... .... (150)