பக்கம்:அர்த்தமுள்ள விளையாட்டுக்கள்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

35


எதுவும் செய்யாது, இடர்பட்டுத் துள்ளும் பந்தாக இருப்பது போலவே மனிதர்களும், உலக மகா சக்திகளின் இடையிலே, பந்துகளாக விளையாடப் படுகின்றனர்.

இப்படி நாம் எத்தனையோ கற்பனைகளையும் கருத்துக்களையும் கொள்ளலாம்.

பந்து என்பதற்கு உறவு என்றும் பொருள் கூறுவார்கள். உலகம் உருண்டை என்பதை பந்து வடிவம் என்றும் பாங்காக விவரித்துக் காட்டுவார்கள்.

இத்தகைய பந்து தான், விளையாட்டுக்களில் இடம் பிடித்துக் கொண்டிருப்பது மட்டுமன்றி, வழி நடத்திக் கொண்டும் இருக்கிறது.

பந்தைப் பக்குவமாகப் பெறுபவரும், மற்றவர்களிடம் பத்திரமாக ஆடுபவரும், நேரம் அறிந்து மற்றவர்களிடம் தள்ளி விடுபவரும் நிம்மதியாக விளையாடுகின்றார்கள். நேர்த்தியாக கடந்து கொண்டு, கீர்த்தியையும் பெற்றுக்கொள்கின்றார்கள்.

பந்தை முரட்டுத்தனமாகவும் முட்டாள்தனமாகவும் பயன்படுத்துபவர்கள், இடரிலும் இன்னலிலும், எதிர்பாராத மாற்றத்திலும், தடுமாற்றத்திலும் துன்புற்று வாழ்கின்றார்கள்.

ஆகவே, நல்ல வாழ்க்கையை நடத்திட விரும்புவோர், இந்தப் பந்து விளையாட்டுக்களில் ஈடுபட்டால், போதும்.எப்படி எப்படியெல்லாம் மனப்பக்குவம் அடைகின்றார்கள், பண்பாட்டினைப் பெறுகின்றார்கள், பரமானந்தம் கொள்கின்றார்கள், பகுத்தறிவை மிகுதிப்படுத்திக் கொள்கின்றார்கள் என்கிற பரிசுகளையெல்லாம் பெறுகின்றார்கள் என்று நாம் அறிந்து மகிழலாம்.

பந்து படுத்துவது பாடுகள் அல்ல. அவை கொடுப்பது பண்பாடுகள் என்றே நாம் உறுதியாகக் கூறலாம். விளையாட்டுக்கள் எப்பொழுதும் அர்த்தமுள்ளவைதான் என்பதற்கு பந்து ஒரு உண்மை சொரூபமாகவே விளங்குகிறது.