பக்கம்:அவள் ஒரு மோகனம்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

6


“எஸ்... நெக்ஸ்ட், ப்ளீஸ்!” என்றாள், ஓங்கிய குரலில்; அழைப்பு மணியின் சத்தமும் இணைந்திருக்கலாம்.

“வணக்கங்க?” என்றாள், அந்த அழகி, தன் முகவரிச் சீட்டை மேஜையில் வைத்தாள்!

“வாங்க, வாங்க; அப்படி உட்காருங்க; உடம்புக்கு என்ன?” என்று விசாரித்தாள், டாக்டர் ரேவதி.

“மென்ஸஸ் டைம்லே, முன்னாடியும், பின்னாடியும் வயிற்று வலியினாலே நான் ரொம்பவும் கஷ்டப்பட்டுப் போறேனுங்க! எங்கள் செவர்லேட் வண்டி கொண்டாந்து விட்டுட்டுப் போகாட்டி, நான் திண்டாடியிருப்பேன்!”

“அப்படியா? கவலைப்படாதீங்க; சீக்கிரம் குணப்படுத்திடுறேன்! ஆமா, உங்கள் பேரைச் சொல்லலையே?”

“நீங்கள் கேட்கலீங்களே, டாக்டர்?”

இவள் படு டம்பக்காரியாக இருப்பாள் போலிருக்கிறது! ‘செவர்லே’யை எங்கே பிடித்தாளாம்? “அப்படியா?” என்றாள், ரேவதி.

“என் பேர் மந்தாகினி!”

“ரொம்ப அபூர்வமாகக் காதிலே விழுகிற அழகான பேர்தான். உங்கள் கணவர்...” என்று கேட்டவள், நோயாளிப் பெண்மணியின் கழுத்தில் கிடந்த தாலியை எடை போடுவதில் ஆர்வம் காட்டினாள்.

“என்னோட அத்தான், நான் வயிற்று வலியாலே துடிக்கிறதைக் கண்டாலே போதும்; அவரும் சின்னப் பையனாட்டம் செருமிச் செருமி அழத் தொடங்கிடுறாங்கம்மா! .”

“நான் அதைப் பற்றிக் கேட்கல்லே. அவரைப் பற்றித்தான் கேட்டேன்!”