பக்கம்:ஆழ்கடலில் சில ஆணிமுத்துகள்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
ஆழ் கடலில் சில ஆணி முத்துகள்


தோற்றுவாய்


பெறுதற்கரிய காதலி ஒருத்தியைப் பெற்ற பெறுதற்கரிய காதலன் ஒருவன், தான் அவள் மாட்டு நுகர்ந்த இன்பத்தின் சுவையைப் புனைந்துரைக்கவில்லை, உண்மை யாகவே உரைக்கின்றான்: அவன் அவள் கனிவாயை நுகர்ந்தானாம். அந் நுகர்ச்சியின் பயனை எவ்வாறு வெளியிடுவது? அவனுக்குப் பட்டதைச் சொல்லி விடுகிறான். இல்லை, அவன் சொல்ல வேண்டும் என்று எண்ணிச் சொல்லவில்லை. அவனையறியாது அந்நுகர்ச்சியின் தேக்கெறிவு சொற்களாக வெளிப்படுகின்றது. அந்தக் கனிவாய்ச் சுவை அவனது உயிர்க்கு இனிதாம்-இனிக்கின்றதாம். அது மட்டுமா? அமிழ்தமாகி அவனது ஆருயிர்க்கு எழுச்சி நல்குகின்றதாம். ஒரு முறையா? இரு முறையா? பலப்பல முறையும் இனிக்கின்றதாம். ஆருந்தோறும் ஆருந்தோறும்அனுபவிக்குந்தோறும் அனுபவிக்குந்தோறும் அமிழ்த மகிழ்வு மிகுகின்றதாம்; மிகுந்து கொண்டேயிருக்கின்றதாம்.

இது அவனது பட்டறிவு. அதாவது தலைசிறந்த தமிழ் மகனது பட்டறிவு. ஆண்டுக்கு இருமுறை மும்முறை மணவிலக்கு செய்து கொண்டு மறு மணம் புரிந்துகொள்ளுகின்ற, மனவளர்ச்சியற்ற மாக்களுக்கு இது விந்தையினும் விந்தை! வியப்பினும் வியப்பு! பழகப் பழகத் தமிழனுக்கு மனைவி மேல் இனிப்பு மிகுகின்றதே தவிர, குறையவேயில்லை; கசப்பாக மாறவும் இல்லை. எதைப்போல.. ?