‘இருட்டு ராஜா’வின் கதாநாயகன் முத்துமாலை ஒரு சுவாரஸ்யமான பேர்வழி - ‘இன்ட்டரஸ்டிங் கேரக்டர்’. ஆனாலும் அவன் ஒரு சாதாரண சமூக மனிதன்.
எந்த மனிதனும் முழு அயோக்கியனில்லை. பரிபூரண நல்லவன் எவனும் இல்லை. கொடியன், தீயவன், ரொம்பவும் கெட்டவன் என்று பழிக்கப்படுகிற மனிதனிடமும் நல்ல பண்புகள் கலந்து கிடக்கின்றன. புனிதன், யோக்கியன், மிக நல்லவன் எனக் கருதப்படுகிற மனிதனுள்ளும் சில தீய குணங்கள் பதுங்கி வாழ்கின்றன.
பொதுவாக ஒவ்வொரு மனிதனுள்ளும் இயற்கையாகவே நல்ல குணங்களும் தீய பண்புகளும் கலந்தே இருக்கின்றன.
ஒருவன் கயவனாக, அதமனாக, மோசமானவனாக மாறுவதும், நல்லவனாகவே வளர்வதும் அவனுடைய சூழ்நிலைகள், அவனை பாதிக்கிற இதர மனிதர்கள், கால நிலைமைகள், இவற்றால் தாக்குறுகிற அவனது மனநிலை முதலியவற்றைப் பொறுத்து அமையும்.
முத்துமாலை சிந்திக்கத் தெரிந்தவன். அவன் ஒரு சந்தர்ப்பத்தில் கூறுவது போல, ‘வாழ்க்கை மனுசங்களோடு விளையாடுது. மனுசங்களை வச்சும்விளையாடுது.’ வாழ்க்கையினால், சமூகத்தினால், ஊரார் போக்கினால் பாதிக்கப்பட்ட அவன் ‘நாமும் வாழ்க்கையோடு-வாழ்க்கையை வச்சு-விளையாட வேண்டியதுதான்’ என்று துணிந்து விட்டான்.
ஊர்க்காரர்களே சான்று கூறுவது போல, அவன் ‘நன்மையை நெனச்சு நல்லதுகளை செய்யனுமின்னு