பக்கம்:இலங்கைக் காட்சிகள்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இலங்கையில் இறங்கினேன்

23

அவர் வாய்மொழியால் தெளிந்தேன். இதைப்பற்றி முன்பு சிந்திக்காமல் இருந்திருந்தால் அவர் பேசியதில் அத்தனை சுவாரசியம் தோன்றியிராது. முன்பு சிந்தித்தமையினால் அவருக்கு நான் செய்தி ஏதேனும் சொல்வதைப்பற்றி யோசிப்பதற்கு முன் அவர் சொன்ன 'ச்சொல்'லில் ஈடுபட்டு நின்றேன். நான் செய்தியை யோசிப்பதாக நண்பர் எண்ணியிருக்கக் கூடும்.

அவர் விருப்பப்படி நான் என் மகிழ்ச்சியைத் தெரிவித்தேன். இலங்கைக்கு வந்தது தமிழ்நாட்டுக்கு வந்ததைப் போலவே இருக்கிறது. இலங்கைக்கும் தமிழ் நாட்டுக்குமிடையில் எவ்வித வேற்றுமையையும் என்னால் காண முடியவில்லை. இலங்கைக்கு இப்பொழுதுதான் முதல் முறையாக நான் வருகிறேன். இதற்கு முன் இந்த நாட்டுக்கு வரும் சந்தர்ப்பம் எனக்கு ஏற்படவில்லை. என் பழைய நண்பர்களின் முகங்களை விமான நிலையத்தில் இறங்கியவுடன் பார்க்கும்பொழுது பரமானந்தமாயிருக்கிறது" என்றேன்.

எல்லோரும் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டோம். அன்று இரவு வீரகேசரி ஆசிரியர் வீட்டில் தங்குவதாக ஏற்பாடு செய்திருந்தார்கள்.

வண்டியிலே போய்க்கொண்டிருக்கும்போதே ஆசிரியர் ஹரன் தமிழ்நாட்டைப்பற்றி மிக ஆவலாகப் பல செய்திகளை விசாரித்தார். தமிழ் நாட்டில் உள்ள வறுமை நிலையை என்னால் சொல்லாமல் இருக்க முடியவில்லை. நான் நேரிலே கண்ட காட்சி ஒன்றைச் சொல்லி அதன் மூலம் இங்குள்ள வறுமையைப் புலப்படுத்த எண்ணினேன். “ரெயில்வே ஸ்டேஷனில் நாம் எதையாவது சாப்பிட்டுக்கொண்டிருந்தால் பசி