26
எண்ணக் குவியல்
எத்தனையோ இயக்கங்களில் இவ்வாமை புகுந்து அவற்றின் வளர்ச்சிகளைத் தடைப்படுத்தி, நோக்கங்களை நிறைவேற வொட்டாமல் தடுத்து, சிரித்து மகிழ்ந்து, செழித்து வளர்ந்து, வாழ்ந்து வந்திருக்கிறது.
எத்தனையோ சமூகங்களுக்குள் புகுந்து, அச்சமூகங்களின் அறிவைப் பாழாக்கி, அவர்களை முன்னேறிச் செல்ல முடியாத அளவுக்கு முடமாக்கி, அடுத்தவருக்கு அடிமைப்படுத்தி, அழுது அழுது மடியச் செய்து, ஆனந்தக் கூத்தாடி வந்திருக்கிறது.
எத்தனையோ மந்திரி சபைகளுக்குள் புகுந்து, அவர்களின் நாட்டுப் பற்றையெல்லாம் வீட்டுப் பற்றாக்கி, ஆள் மீது ஆளைத் தூக்கி அடித்து, ஆண்டுக்கொரு முறை ஆள்மாறச் செய்து, எவரையும் உட்கார்ந்து உருவான வேலைகளைச் செய்யவொட்டாமல் விரட்டி அடித்துக் கொண்டே வாழ்ந்து வந்திருக்கிறது.
முடிவாகக் கூறுமிடத்து, இந்த ஆமை புகுந்த வீடு எல்லாம், இடமெல்லாம், குட்டிச்சுவராகி வருகின்றன என்றே கூறவேண்டியிருக்கிறது.
நாடோ நகரமோ, வீதியோ வீடோ, வியாபாரமோ இயக்கமோ, சமூகமோ சங்கமோ, வேறு எதுவோ அது நிலைத்து நிற்க வேண்டுமானால், அது இந்த ஆமை நுழைவதற்குச் சிறிதும் இடங்கொடாதிருக்க வேண்டும்.
இவ்வாமையின் உயிர் நிலையை நீங்கள் நன்கு அறிந்து கொள்ளலாம். இது பேராசைத் தண்ணிரில் வாழுமே தவிரப் பெருந்தன்மைத் தரையிலே வாழாது. ஆமை தரைக்கு வந்தால் மடியும்; பொறாமை பெருந்தன்மைக்கு வந்தால் முடியும்.
ஆகவே, நாட்டின் நலனைக் கருதி, மக்கள் தங்கள் இருப்பிடங்களில் இவ்வாமை தோன்றாமையையும்,