ராஜம் கிருஷ்ணன் 23
இவை எல்லாவற்றிற்கும் மேலாக மருத்துவம் பயின்ற பெண்களால் ஆதாயம் இருக்கிறது என்று உணர்ந்து, மருத்துவம் பயின்ற பெண் வேண்டும் என்று திருமண விளம்பரங்களில், தேவை விளம்பரம் செய்பவர்கூட என்னென்ன முக்கியமான அம்சங்களைக் குறிக்கிறார்கள்!
Slim, Fair, Tall... ஒல்கி, ஒசிந்து உயரமாக சிகப்பாக... என்று எந்த ஆணும் தான் திருமணம் செய்துகொள்ள இருக்கும் பெண்ணுக்கு இலக்கணம் வகுத்து நிபந்தனை போடுகிறான்.
எந்தப் பெண்ணும் தனக்கு வாழ்க்கைத் துணைவனாகக் கூடிய ஆண் இப்படி இருக்க வேண்டும் என்பதை வெளிப்படையாக விளம்பரம் செய்துவிட முடியாது. அவள் வேண்டுமானால் கனவு காணலாம். வெளிப்படையாகப் பெற்றோர் கோரக் கூடியதெல்லாம் படிப்பு, உத்தியோகம் அல்லது தொழில், பொருளாதாரம் சார்ந்த நிலை, சாதி போன்ற பொதுத் தகுதிகள்தாம். தனித்தன்மை பற்றிக் கேள்வி கிடையாது. அத்துடன் அவளுக்கு மடமை அச்சம் ஆகிய குறைகள் சிறப்பானவை, 'பேதமை என்பது மாதரணிகலம்' என்று வலியுறுத்தப்பட்ட வாசகம்.
அவள் ஒல்கி ஒசிந்து கொடியாய்த் துவண்டு மானின் மருண்ட விழிகளால் தனது அச்சத்தையும் சஞ்சலத்தையும் குறிப்பால் உணர்த்திக்கொண்டு ஆண் ஒருவனுக்காகத் தவிப்பவளாக இருக்க வேண்டும்.
இந்த இலக்கணங்களில்லாமல், அறிவு, சிந்தனைத் திறம், உடலாற்றல், தொழிற்பயிற்சி ஆகிய கூறுகளுடன் ஒரு பெண் இருந்தால் அவளுடைய மேன்மை ஆற்றலை அவனால் பொறுக்க இயலாது. அவள் தலைமீது கை வைத்து (அல்லது கால் வைத்து) அழுத்திக் கொண்டு ஆதிக்க அரசோச்ச முடியாது. அதற்காக அவளுடன் எதிரிட்டுப் போர் புரிய இயலுமா?