உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காலந்தோறும் பெண்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28 காலந்தோறும் பெண்

வழக்கங்களில் இனம் காணமுடிகிறது. நாயர் வகுப்பினரின் கூட்டுக்குடும்பம் 'தறவாடு' எனப்படும். மூத்த ஆண், சகோதரி மக்களின் உரிமைகளை, தான் பாதுகாத்துப் பேணுவார். ஆசாம் பிரதேசத்து 'காரோ' இனத்தினர் ‘காஜி' குடியினர் இதேபோல் தாய்வழி மக்களாகவே அறியப்படுகின்றனர்.

வருணம், மற்றும் சாதிப்பிரிவுகள் தோன்றியதும் உயர்வகுப்பு ஆண், தாழ்ந்த வகுப்பு என்று கருதக்கூடிய பல பெண்களைத் திருமணம் செய்துகொண்டதும், குழந்தை மணத்தை வழக்காக்கியதும், 'சதி' என்று நெருப்பிலிட்டுப் பெண்ணை எரித்ததும் பெண்ணின் வீழ்ச்சியை முழுமையாக்கித் தீர்த்தன.

இந்நாள் ஒட்டுமொத்தமாக பாரத சமுதாயம் என்று வளர்ந்துவிட்ட சமுதாயத்தினரிடையே எத்தனை பிரிவுகள்!

ஆனால் பெண்ணை இரண்டாம்பட்சமாக வைக்கும் ஒரே நெறியான அத்தனை வேற்றுமை இழைகளையும் பின்னி இறுக்குகிறது.

சிறகைப் பிய்த்துக் கூண்டில் அடைத்து அலங்காரமாக வீட்டில் தொங்கவிட்டு “வீட்டுக் கிளி கொஞ்சுகிறது” என்று சொல்லுகிறோமே, அது நினைவுக்கு வருகிறது. "பாரத கலாசாரத்தையும் ஒருமைப் பண்பையும் பெண்களே காப்பாற்றுகிறார்கள்! ஆனால் எத்தனை மாறினாலும் வழிதவறிப் போனாலும் பெண் தனது கோட்டிலிருந்து வழுவாமல் நின்று அவனை வாழ வைக்கிறாள். அவளாலல்லவோ பாரதப் பண்பாடு காப்பாற்றப்படுகிறது.”

இந்தப் புகழாரம், சிறகு பிய்த்தெறியப்பட்டது தெரியாமலிருக்க வழங்கப்பெற்றிருக்கும் பொற்கூண்டு.