ராஜம் கிருஷ்ணன் 33
அனைத்தும் உடல்பரமான எல்லா இன்பங்களையும் அநுபவிப்பதையே சார்ந்து இருந்தன.
ஆணும் பெண்ணும், இணைவதற்கடையாளமான லிங்க சின்னத்தை இந்தத் தென்புலத்து மக்கள் வழிபட்டார்கள். வடபுலத்து வெள்ளைச் சாதியினர் தாமிரத்தையும் தங்கத்தையும் ஒதுக்கி ஒதுங்கி செல்பவர்களாக நின்றுவிடவில்லை. அவர்கள் தென்புலத்தாரோடு வந்துமோதினர்.
காலப்போக்கில், இவர்களை வென்றும் இமயத்தை ஒட்டி வாழ்ந்த இன்னும் பல கருப்பு இன மக்களோடு போராடியும் வடபுலத்துக்காரர் இந்திய நாட்டின் வடபகுதிகளில் தங்களை ஊன்றச் செய்து கொண்டனர். இவர்களே ஆரியர்கள் என்று பொதுவாக வழங்கப் பெற்றனர். இவர்களில் முந்தைய தனித்தன்மை போய், ஒருவரை ஒருவர் விலக்க ஒண்ணாமல் கலந்தும் காலாகாலம், பழக்க வழக்கங்களில் பலவற்றை மாற்றிக்கொள்ளவும் அவசியங்கள் நேர்ந்துவிட்டன. இந்த இனத்தாரிடையே நிகழ்ந்த பல போர்களை அடித்தளமாகக் கொண்டே, இந்நாட்டின் புகழ்பெற்ற இதிகாசங்களாகிய இராமாயண மகாபாரதங்கள் உருவாயின எனலாம்.
இந்தோ-இரானியராக இருந்த சமுதாயத்தினர், இவ்வாறு இந்தியா வந்து பல இனத்தாரோடு மோதி வென்று, கலந்து ஆரிய சமுதாயமாக ஊன்றிய காலவரையை, கி.மு. 2500-லிருந்து, 1500 வரையிலான நீட்சியில் உட்படுத்துகிறார்கள் வரலாற்று ஆசிரியர்கள்.
இந்தக் காலத்தில், பல்வேறு முனிவர்கள், அல்லது குரவர்களின் கவித்துவ மலர்ச்சியினால் உருவாகிய மிக இனிய சந்தங்களை உடைய பாடல்கள், இயற்கையைக் கடவுளராகப் புகழ்ந்து போற்றுகின்றன. இப்பாடல்கள், பல நூறு ஆண்டுகளாக மனித இனத்தின் நினைவாற்றல் மற்றும் நுட்பமான மொழித்திறன், ஓசை நயங்களுக்குச் சான்றாக, வரி வடிவம் காணாமலே காப்பாற்றப்பட்டு வந்திருக்கின்றன என்றால், வியப்பாக இல்லையா?கா.பெ. - 3