உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காலந்தோறும் பெண்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராஜம் கிருஷ்ணன் 43

லட்சுமி, கௌரி விரதங்கள் பூசனைகள் பெண்களுக்கே உரித்தானவை. அவர் தம் மாங்கல்யம் விளங்கவும் குங்குமம் மஞ்சள் வாடாது துலங்கவும் இன்னும் பிற சௌபாக்கியங்கள் பெருகவும் செய்யப்பெறும் பூசைகள்தாம். இந்தப் பூசையில் இவளுடைய உடலுழைப்பு மட்டுமே தொண்ணூற்றொன்பது விழுக்காடு, ஏனைய குடும்ப உறுப்பினர் ருசித்து உண்ணும் பலகாரம் செய்வதிலேயே ஈடாக்கப்படுகிறது. அலுவலகம், பள்ளி நேரத்திற்கு முன் பூசை முடிக்க வேண்டும். 'ராகுகாலம்' என்ற ஒன்று குறுக்கே நிற்கும். முக்கியமான பூசை செய்யும் 'குரு' வானவர் நூறு வீடுகளுக்குப் போக வேண்டும். காலை ஆறு மணிக்குக் கௌரிக்கு நேரம் கொடுத்துள்ளார். அதற்குள் இவள் ஒருத்தியே, இடித்து அரைத்து, எடுத்துப்போட்டு கிண்டிக் கிளறி, இட்லி, கொழுக்கட்டை, அதிரசம் வடை என்று செய்ய வேண்டும். அம்மன் அலங்காரம் முடிக்க வேண்டும். இன்னும் எத்தனையோ சிறுசிறு நச்சுப்பணிகள் நிறைவேற்ற வேண்டும்.

குருவானவர், வந்து மெயில் வேகத்தில் மந்திரங்களைச் சொல்லி மணியை அடிக்க இவள் மலரைத் தூவி, அர்ச்சனையை முடிக்கிறாள். பதினைந்து நிமிடம்கூட இல்லை. தட்சணையைப் பெற்றுக்கொண்டு அடுத்த பூசைக்குச் சைக்கிளிலோ, ஸ்கூட்டரிலோ விரைகிறார் அவர்.

ஏன், இப்படி ஒரு குருவை எதிர்பார்த்து, அவசர பூசை செய்ய வேண்டும்?

இந்த மந்திரமோ, அல்லது, புரிந்த தமிழ் வாசகமோ அவளே படித்து, ஒன்றிப் பூசையைச் செய்யக்கூடாதா? அதற்குரிய தகுதி அவளுக்கு இல்லையா?

பெண் கடவுளைத் தொழுவதன் நோக்கமே கணவனின் ஆயுள், மற்றும் அவன் சுகபோகங்களின் வண்மையைச் சார்ந்ததாகிறது. அந்தப் பூசனையல்லாது, அறிவுக்கும் ஞானத்துக்குமான சரசுவதிதேவியின் பூசனைகூடப் பெண்-