இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
முப்பது கோடியாம் இந்தியரும்
முனைந்து விடுதலைப் போரிடவே,
அப்போது காந்தி புதியதொரு
ஆயுதம் கண்டு பிடித்தனராம்.
சத்தியம், சாந்தம் கலந்துசெய்த
சத்தியாக் கிரகமே ஆயுதமாம்.
ஒத்துழையாமை இயக்கமுமே
உறுதியாய்க் காந்தி தொடங்கினராம்.
வெள்ளையர் தந்த பட்டமெலாம்
வேண்டா மெனச்சிலர் விட்டனராம்.
பள்ளிக்கு மாணவர் செல்வதில்லை.
பாதிப் படிப்போடே நின்றனராம்.
துன்பம் கொடுத்திடும் சட்டமெலாம்
துணிவாய் மீறி நடந்தனராம்.
அந்நியத் துணியைக் கொளுத்தினராம்.
அடக்கு முறையை எதிர்த்தனராம்.