19
7. ஆனா அறிவாய் அகலான் அடியவர்க்கு வானாடர் காணாத மன்.
இ-ள் : நீங்காத ஞானமாய் அடியார்கள் உள்ளக் கமலத்தினைவிட்டு ஒருபொழுதும் பிரிதல் செய்யான், தான் தேவர்களால் காண்டற்கரிய மேலோனாயினும் என்க.
அடியவரெனவும், வானாடரெனவும் பொதுப்படக் கூறினமையால், யாவராயினும் அன்பர்க்கெளியவனாதலும், அன்பரல்லாதவர்க்கு அரியவனாதலும் உடையன் என்பதாம்."கனவிலுந்தேவர்க்கு அரியாய் போற்றி, நனவிலும் நாயேற் கருளினை போற்றி" என்றருளிச்செய்தார், போதவூர் புகழகம் போர்த்த மெய்யன்-வாதவூர் வந்த மறைமுதற் றலைவர்.
இதனால் அவன் அருள்புரியுமாறு கூறப்பட்டது.
விளக்கம் - வானநாடரும் அறிய ஒண்ணாத இறைவன் தான் அருளிய ஒழுக்க நெறியினைக் கடைப்பிடித்தொழுகும் அடியார்கள் உள்ளத்தே அகலாது இடங்கொண்டெழுந் தருளியுள்ளான் என்பது உணர்த்துகின்றது.
ஆன அறிவு-நீங்காத பேரறிவு. அடியவர்க்கு ஆனா அறிவாய் அகலான்’ எனவே, அன்புடைய அடியார்கள் உள்ளத்திலே நீங்காத பேரறிவாய் அகலாது எழுந்தருளியிருந்து அவர்களது மனம் ஐம்பொறிகளின் வழியே செல்லாவண்ணம் தடுத்துநிறுத்தித் திருத்திப் பணிகொள்ளுதல் அம்முதல்வனது அருளியல்பென்பதும், அவனது திருவருளின் வழியொழுகும் அடியார்கள் உள்ளத்தே இறைவன் பிரிவின்றி நிற்றலால் அவர்கள் ஈறிலாப் பேரின்ப வாழ்விற்கு உரியவராவரென்பதும் புலப்படுத்தியவாறு. இத்தொடர்,