கனவு
மறுபடியும் என்னை அரங்கில் நிறுத்தியாகிவிட்டது. அங்கு ஏற்கெனவே காகதி நடந்து கொண்டிருக்கிறது. மூலையி லிருந்து என்னை யாரோ முன் தள்ளுகிறார்கள். அரங்கில் யாரோ என்னைக் கைபிடித்து அங்கு இழுக்கிறார்கள். அரங்க விளக்குகள் கண்ணைப் பறித்து மேடைமீது குப்புற விழுகிறேன். . நான் காண்பது கனவா? நனவா? கனவுள் கனவா? கனவுக்கும் நனவுக்கும் வேறுபாடு என்ன? யாருக்கு யார் கனவு? அவர்களுக்கு நானா? எனக்கு அவர்களா? கனவும் கனவு காண்பதுமன்றி, கனவு காட்டுவது யார்? திடீரெனப் பாடம் மறந்த இந்நிலையில் நான் இப்போது விதுரஷகனா? வில்லனா?? கதாநாயகனா??? விளக்குகளுக்கப்பால் சூழ்ந்த பேரிருள் படலத்தினின்று கேள்விகள் மின்னலில் பொறித்தவையாய்க் கிளம்பி மண்டையுள் தெறிக்கின்றன. மெதுவாய் எழுகிறேன், நான் தோற்றுப்போனேன். என்னை விட்டால் போதும் இத்துடன் மேடையாசை விட்டேன் என்று சபையோரிடம் சரணடையக் கைகூப்பி மேடை விளிம்புக்குச் செல்கிறேன். என்னெதிரே முகசமுத்ரம். என்ன ஆச்சரியம்! அத்தனை முகமும் அதே முகம்!
அகன்ற நெற்றியில் நாலு கோடுகள். சுருண்ட வெள்ளை மயிர். அடர்ந்து நரைத்துத் தொங்கும் புருவத்தின் கீழ் தழல் மங்கிய மஞ்சள் விழிகள். வயதுக்கு மிஞ்சி மூப்பேறி நசுங்கிய முகத்தில் மூன்று நாள் தாடி. குழம்பி நின்றேன். இப்படியும் இருக்குமா? ஒரே முகம், அதுவும் எங்கோ கண்ட முகம்.
யார் முகம்?