உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாரதியார் குயிற்பாட்டு.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குயில்....கதையை மொழிதல்

37

மாடன் வெறிகொண்டான், மற்றுவனும் அவ்வாறே;
காவலன்றன் மைந்தனுமக் கன்னிகையும் தானும் அங்கு
தேவசுகங் கொண்டு விழியே திறக்கவில்லை; 145
ஆவிக் கலப்பின் அமுத சுகந்தனிலே
மேவியங்கு மூடி யிருந்த விழிநான்கு;
ஆங்கவற்றைக் கண்டமையால் ஆவியிலே தீப்பற்றி
ஓங்கும் பொறிகள் உதிர்க்கும் விழிநான்கு.;
மாடனுந்தன் வாளுருவி மன்னவனைக் கொன்றிடவே 150
ஓடிவந்தான்; நெட்டைக் குரங்கனும் வாளோங்கி வந்தான்;
வெட்டிரண்டு வீழ்ந்தனகாண் வேந்தன் முதுகினிலே;
சட்டெனவே மன்னவனும் தான்திரும்பி வாளுருவி
வீச்சிரண்டில் ஆங்கவரை வீழ்த்தினான்; வீழ்ந்தவர்தாம்
பேச்சிழந்தே அங்கு, பிணமாகக் கிடந்துவிட்டார்; 155
மன்னவனும் சோர்வெய்தி மண்மேல் விழுந்து விட்டான்
பின்னவனை நீயும் பெருந்துயர்கொண் டேமடியில்
வாரி யெடுத்துவைத்து வாய்புலம்பக் கண்ணிரண்டும்
மாரி பொழிய மனமிழந்து நிற்கையிலே,
கண்ணை விழித்(து)உனது காவலனும் கூறுகின்றான்; 160
பெண்ணே, இனிநான் பிழைத்திடேன்; சில்கணத்தே
ஆவி துறப்பேன், அழுதோர் பயனில்லை;
சாவிலே துன்பமில்லை; தையலே, இன்னமும் நாம்
பூமியிலே தோன்றிடுவோம், பொன்னே! நினைக்கண்டு
காமுறுவேன்; நின்னைக் கலந்தினிது வாழ்ந்திடுவேன்; 165
இன்னும் பிறவியுண்டு; மாதரசே இன்பமுண்டு;
நின்னுடன் வாழ்வினினி நேரும் பிறப்பினிலே”
என்று சொல்லிக் கண்மூடி, இன்பமுறு புன்னகைதான்
நின்று முகத்தே நிலவுதர, மாண்டனன்காண்;
மாடனிங்கு செய்ததோர் மாயத்தால் இப்பொழுது 170
பீடையுற புள்வடிவம் பேதையுனக்(கு) எய்தியது;
வாழி நின்றனன் மன்னவனும் தொண்டை வளநாட்டில்
ஆழிக் கரையின் அருகேயோர் பட்டினத்தில்
மானிடனாத் தோன்றி வளருகின்றான்; நின்னையொரு
கானிடத்தே காண்பான். கனிந்துநீ பாடும்நல்ல 175
பாட்டினைத்தான் கேட்பான். பழவினையின் கட்டினால்