1. ஆடுகளம் அமைக்கும் விதம் :
பூப்பந்தாட்டத்திற்குரிய ஆடுகளத்தை அமைப்பது மிக எளிது தான் என்றாலும், ஆடுகளத்தை உருவாக்கு முன் ஒருசில முக்கியமான குறிப்புக்களைக் கவனித்துச் செய்தால், சிறப்பாக அமையும்.
1. ஆடுகளத்திற்கான திடலைத் தேர்ந்தெடுக்கும் முன்னர், பள்ளம், மேடு, குழி இல்லாத சமதரையாக இடம் இருக்கிறதா என்பதைப் பார்த்துத் தீர்மானிக்க வேண்டும்.
2. இடப்பரப்பின் வசதியைப் பொறுத்து ஆடுகளம் அமையும் என்றாலும், வடக்கு தெற்கு திசைகளில் ஆடுகளத்தின் நீளப் பரப்பு அமைக்க முடியுமா என்பதையும் சிந்தித்து செயல்பட வேண்டும்.
கிழக்கு மேற்கு திசைகளில் ஆடுகளம் அமைந்து விடக்கூடாது என்பதில் அதிகக் கவனம் செலுத்த வேண்டும். சூரிய கிரணங்கள் நேராகப் பாய்ந்து கண்களைக் கூசவைப்பதால், யாராவது ஒரு குழுவினருக்கு ஆட இயலாத அளவுக்குத் தொந்தரவு தருவதாக அமைந்து விடும் என்பதால், வடக்கு தெற்கு திசை வருவதுபோல் ஏற்பாடு செய்துகொள்ள வேண்டும்.