பக்கம்:மனத்தின் தோற்றம்-ஆய்வுக் கட்டுரைகள்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சுந்தர சண்முகனார்

89



முன்பு சென்று காயக்கூடாதா?” என்று வருந்திப் பேசினாள் வசந்தவல்லி.

பின்னர் அவள் மன்மதனை விளித்து, “ஏ மன்மதா! அந்தப் பாவி நிலா காய்கிறது போதாதென்று இந்தத் தென்றல் காற்று என்னும் புலியும் பாய்கிறது. ஒன்றுக்கு இரண்டு உபத்திரவத்துக்கு மூன்று என்ற முறையில், பற்றாக்குறைக்கு நீயும் ஏன் என்னை இவ்வாறு கொல்லாது கொல்கிறாய்? உன் கைவரிசையை அந்தக் குற்றால நாதரிடம் போய்க் காண்பி பார்க்கலாம்! ஏன்? அவர் நெற்றிக் கண்ணால் சுட்டெரித்து விடுவார் என்று அஞ்சுகின்றாயா? ஒரு பெண்ணிடம் போர்தொடுக்கும் நீயும் ஒர் ஆண் மகனா? பேடியே போதாய்!” என்று ஏசிப் பேசினாள்.

தலைவியின் துன்பத்தைக் கண்ட தோழி ஆறுதல் பல சொன்னாள். சொல்லியும் தேறுதல் உண்டாகவில்லை. பின்பு தோழியை நோக்கிச் சிவன் திருமுன்பு தூது சென்று வா என்று சொன்னாள் வல்லி.

“ஐயோ! நான் எப்படி அவர் முன்பு துது செல்வேன். அவர் என்னைப் பற்றி என்ன எண்ணிக் கொள்வாரோ” என்று வெட்கப்பட்டாள் தோழி.

அதற்கு வசந்தவல்லி, தூது சென்றால் சிவன் ஒன்றும் எண்ணிக்கொள்ள மாட்டார். அது அவருக்கு வழக்கமான வாடிக்கை, அவரிடம் துது அனுப்புவோர் மிகப் பலர். அவ்வளவு ஏன்? அவரே சுந்தரருக்காகப் பரவை நாச்சியாரிடம் ஒருமுறைக்கு இருமுறையாகத் தூது சென்றுள்ளாரே! ஆகையால் அவரைப் பொறுத்தமட்டில் வெட்கமே வேண்டியதில்லை” என்று கூறினாள்.

‘அப்படி என்றால் நான் என்ன சொல்லவேண்டும்’ என்று கேட்டாள் தோழி.