வரிகளில் வெளிப்படும் விரக்தியோடு கூடிய நகைச்சுவை (Grim Humour) என்னைக் கவர்கிறது.
சமுதாயத்திலிருந்து நீயும்
என்னைப் பிரித்து விட்டாய்
என்று சொல்வதை வைத்து சமுதாயத்திலிருந்து நீங்கள் அந்நியமாகி விட்டதாய் அவசரப்பட்டு முடிவுகட்ட முடியாது.
உங்கள் சொந்த வாழ்வின் அவலம் மட்டுமன்றிச் சமூக அவலத்தையும் உங்கள் தோள்கள் சுமக்கின்றன என்பதைப் பல கவிதைகளில் என்னால் கண்டுகொள்ள முடிகிறது.
மனைவியை இழந்துவிட்டால் வாழ்க்கை வெறிச்சோடிப் போகத்தான் செய்யும். ஆனால் தன்னையே பார்த்துப் பரிதாபப்பட்டுக் கொள்ளாமல், சொந்த உணர்ச்சிகளிலேயே கரைந்து போகாமல் சாவைச் சபிப்பதிலேயே பொழுதைப் போக்காமல் சமுதாயக் கொடுமைகளைச் சாடுவதற்கு முன்வந்திருப்பது ஒரு நல்ல முன்னுதாரணம்தான்.
நினைவுகளையே
ஆடையாக உடுத்திக் கொண்டு
எத்தனை நாள்தான் நான்
பிறந்த மேனியாக அலைவதுவோ?
என்று நீங்கள் ஆடையில்லாது திரியும் ஆயிரமாயிரம் ஏழைகளின் தரித்திர வாழ்வை இணைத்து ஒடுக்கப்பட்ட மக்களோடு உங்களை ஐக்கியப்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள்.
இப்படி எழுதுவது எனக்குப் பிடிக்கிறது.
32