9
இவ்வித விளக்கஉரை கிடைக்கும் அவளது தோழிகளிடமிருந்து!
மற்றவர்கள் தன்னைப் பற்றி என்ன சொல்வார்கள் என்கிற கவலையே பத்மாவுக்குக் கிடையாது. அவள் மனம் பகற் கனவிலே பறந்து கொண்டிருக்கும். அவள் கற்பனை இன்பமயமான எதிர்காலம் என்கிற பசுஞ்சோலையிலே வட்டமிட்டு மயங்கும். லட்சியக் கனவுகளைச் சித்திரித்துக்கொண்டிருக்கும் சிந்தனை. ஆகவே, தன் வாழ்வில் புரட்சிகரமான புதுமை வேண்டும் என அவள் எண்ணியதில் வியப்பில்லை. லட்சியக் கொள்கைகளே-நடைமுறையில் சாத்தியமா; அனுபவ சாத்தியமாகலா மெனினும் நீண்டநாள் வெற்றி தருமா என்றெல்லாம் கவலைப் படுவானேன் என எண்ணி-தீவிரமாக எதிர்த்திருக்கும் ஞானி பிளாட்டோவின் கருத்துக்கள் அவளுக்குப் பிடித்துவிட்டன.
'உடல்நலம் நிறைந்த நாட்டிலே, இனிய காட்சிகளும் இன்னொலிகளும் மிகுந்த சூழலில், அனைத்திலும் உறையும் நலனையும் எழிலையும் நுகரக் கூடியவர்களாக வாழவேண்டும் இளம்பிராயத்தினர் எல்லோரும். புனித வெளியிலிருந்து பாடிவரும் தென்றல் போல அழகு, நலமளிக்கும் அழகு, ம்க்களுக்கு ஆத்ம இன்பம் தந்து, அறிவின்பத்திற்குத் துணை புரியட்டும் ... இனிமையான பூரணத்துவத்தைக் காதலிக்கலாம். அழகு நிறைந்த ஆன்மாவும் அழகு மிகுந்த உருவமும் ஒன்றும் போது, விளைவு கண்களுக்கும் அறிவுக்கும் விருந்து. ஆனால் இன்ப வேட்கை அதிகமானால், மனிதன் துயரினால் தன் பண்புகளிலிருந்து வழுவி விட நேர்வது போலவே, 'மனிதம்' இழந்து விடுகிறான். நல்ல குணங்கள், பண்புகள், உயர் பண்புகளை யெல்லாம் துரத்தி மனிதனை மிருகமாக்கி விடுகிறது காமம். அது வெறித்தனமானது.ஆனால் புனிதமான காதல்-