அது சிறிய ஊர்; ஆனாலும் பெரிய மணமுள்ள மக்கள் அதில் வாழ்ந்தார்கள். அவர்களுடைய பெருமையை உலகத்துக்குத் தெரிவிப்பதற்காகவே இருப்பவர்களைப் போலப் பல சிறிய மனமுடையவர்களும் அங்கே இருந்தார்கள். ஒருவர் சில நிலங்களை வைத்துக் கொண்டு தம்மால் இயன்ற அளவுக்கு அறம் செய்து வந்தார். வேறு பலர் நாளுக்கு நாள் தம்முடைய செல்வத்தைப் பெருக்கிக்கொண்டு வாழ்ந்தார்கள். அந்தச் செல்வர்கள் வாழ்ந்ததனால் ஊருக்குப் புகழ் உண்டாக வில்லை. சின்னக் குடித்தனக்காரராகிய வேளாளர் இருந்ததனால் வேறு ஊர்களிலிருந்து ஏழைகள் வருவார்கள்; புலவர்கள் வருவார்கள்; அந்த அறச் செல்வரிடம் உதவி பெற்றுச் செல்வார்கள்; தாம் போகும் இடங்களில் எல்லாம் அவருடைய புகழைப் பரப்பிக் கொண்டே போவார்கள். இதனால் அந்த ஊருக்குப் புகழ் உண்டாயிற்று. -
அடிக்கடி புலவர்கள் வந்து போவார்கள். அந்த வேளாளருக்குத் தமிழ் ஆர்வம் அதிகம். புலவர்களிடம் பாடல்களைக் கேட்டு இன்புறுவார். தமிழன்பும் அற நினைவும் ஒருங்கே இணைந்த அவரிடம் யாருக்குத்தான் அன்பு பிறக்காது?
ஒருநாள் ஒளவையார் காதில் அந்த நல்லவருடைய புகழ் விழுந்தது. நல்ல மனிதர்கள் எங்கே இருந்தாலும் தேடிச் சென்று பார்த்துப் பாராட்டுவது அந்தப் பெருமாட்டிக்கு இயல்பு. இந்த வேளாண்செல்வரையும்