பாட்டுக்கொரு புலவன் பாரதி 31
என்று எள்ளி நகையாடினார். மேலும், தமிழ் ஜாதியைப் பற்றிப் பாரதியார் 1916 ஆம் ஆண்டு, ஏப்பிரல் திங்கள் மூன்றாம் நாள், சுதேசமித்திரன் பத்திரிகையில் பின்வருமாறு வெளியிட்டார்:
"இந்த நிமிஷத்தில் தமிழ் ஜாதியின் அறிவு, கீர்த்தி, வெளியுலகத்திலே பரவாமல் இருப்பதை நானறிவேன். போன நிமிஷம் தமிழ் அறிவொளி சற்றே மங்கியிருந்ததையும் நான் அறிவேன். ஆனால், போன நிமிஷம் போய்த் தொலைந்தது. இந்த நிமிஷம் சத்தியம் இல்லை. நாளை வரப்போவது சத்தியம். மிகவும் விரைவிலே தமிழின் ஒளி உலக முழுவதிலும் பரவாவிட்டால், என் பேரை மாற்றி அழையுங்கள்!”
தமிழ் மொழி குறித்துப் பாரதியாரின் எண்ணமும் கனவும் இக்கூற்றின் வழி இனிது புலனாதல் காண்க.
'ஆன்ற மொழிகளி னுள்ளே— உயர்
ஆரியத் திற்கு நிகரென வாழ்ந்தேன்’
என்று, தமிழின் பழமையையும் பெருமையையும் குறிப்பிட்ட பாரதியார்,
'யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல
இனிதாவது எங்கும் காணோம்!'
என்றும்,
'தெள்ளுற்ற தமிழமுதின் சுவைகண்டார்
::இங்கமரர் சிறப்புக் கண்டார்’
—தமிழ்: 4
என்றும்,
'சொல்லில் உயர்வுதமிழ்ச் சொல்லே;—அதைத்
தொழுது படித்திடடி பாப்பா’
—பாப்பாப் பாட்டு: 1
என்றும், தம் தமிழ் மொழிப்பற்றினைப் புலப்படுத்தியுள்ளார்.