பக்கம்:அகமும் புறமும்.pdf/353

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

346 • அகமும் புறமும்

ஆனால், அதற்குரிய வழியை மட்டும் மேற்கொள்வதில்லை பெரியோர்.

‘புகழ் எனின் உயிரும் கொடுக்குவர்.’ (புறம்–182)

என்று புறநானூறு பறை சாற்றுகிறது.

ஆனாலும், ஏன் அனைவரும் அதற்குரிய வழியை மேற்கொள்வதில்லை என்பதை அறிய வேண்டுமன்றோ? காரணம் இருவகைப்படும். ஒன்று, வழி இன்னது என்றே அறியாமல் இருப்பது; இன்னொன்று. வழி இது என்று அறிந்திருந்தும், வேறு காரணங்களால் முயற்சியை மேற்கொள்ளாமல் இருப்பது. இவ்வினத்தைச் சேர்ந்திருப்போர் மிகச் சிலரே. பெரும்பாலோரைப் பொறுத்தமட்டில் வழி இன்னதென்றே அறியாமல் இருப்பதே உண்மை. அதிலும், ஒரு விந்தை என்ன என்றால், தவறான வழிகளை உண்மை வழி என்று நினைத்திருக்கும் திரிபுணர்ச்சியேயாம். ஏதோ ஒரு செயலைச் செய்துவிட்டு அதனால் புகழ் தம்மிடம் வந்து சேர வேண்டும் என்று நினைப்பவர் பெரும்பாலும் ஏமாற்றமே அடைவர். ஒருவேளை புகழ் வருவது போலத் தோன்றினும், அது நிலைத்து இருப்பதில்லை. காரணம், வருவது புகழன்று அது ‘இசை’ என்று கூறப்படும். அவன் உயிருடன் இருக்கும்வரை அதுவும் இருந்து, அவனுடன் கூடவே அதுவும் அழிந்துவிடும். போர்களால் தம்புகழ் பரப்ப நினைத்த பழந்தமிழ் மன்னர் இவ்வினத்தைச் சேர்ந்தவரேயாவர். புகழ் பின்னரும் நிலைத்திருப்பதாகலின் அதனை அடையும் வழியும் வேறாய் உளது. அதனை விரும்பி வேட்டையாடுபவர்களை அது விட்டு ஓடும் இயல்புடையது; தன்னைப்பற்றிச் சிறிதும் கவலைப்படாதவர்களிடம், தானே வலியச்சென்று அடையும் இயல்புடையது.