பக்கம்:அகமும் புறமும்.pdf/376

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழர் கண்ட உண்மைகள் • 369

என்கிறார். உலகம் உள்ள அளவும் மறவாமல் போற்ற வேண்டிய இந்த அருமையான பாடலை ஒரு தமிழர் இற்றைக்கு ஈராயிரம் ஆண்டுகட்கு முன்னர்க் கிறிஸ்து பிறக்கு முன்னரே பாடினார் என்பதை நினைத்து வியப்படையாமல் இருக்க இயலாது.

யாதும் ஊரே; யாவரும் கேளிர்;
தீதும் நன்றும் பிறர்தர வாரா;
நோதலும் தணிதலும் அவற்றோர் அன்ன;
சாதலும் புதுவது அன்றே; வாழ்தல்
இனிதுஎன மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின்
இன்னாது என்றலும் இலமே; மின்னொடு
வானம் தண்துணி தலைஇ ஆனாது
கல்பொருது இரங்கு மல்லல் பேரியாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்
முறைவழிப் படூஉம் என்பது திறவோர்
காட்சியில் தெளிந்தனம்; ஆகலின், மாட்சியில்
பெரியோரை வியத்தலும் இலமே;
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.

(புறம்–192)

[முனிவு–வெறுப்பு; வானம்–மழை; கல்பொருது–கல்லை உருட்டி; இரங்கும்–ஒலிக்கும்; மல்லல்–வளப்பம் பொருந்திய, புணை–தெப்பக் கட்டை; முறை–ஊழ்; திறவோர்–மெய்ஞ்ஞானிகள்; காட்சி–நூல்.]

கல் தோன்றி மண் தோன்றாத காலத்தே தோன்றினர் தமிழர்; பிற நாட்டார் தோன்றுவதற்கு முன்னர்த் தோன்றினர் இம்மண்ணில். அந்நாட்டார்கள் சாதாரண நாகரிகம் அடையுமுன்னரே தமிழர் மிக உயர்ந்த நாகரிகத்தைப் பெற்றுவிட்டனர். இவர் பேசும் மொழியும் இவரைப் போல் தொன்மை வாய்ந்தது; எனவே, இவருடைய வாழ்வும் பண்பாடும், எண்ணமும், கருத்தும் மிகு பழமை-