பக்கம்:அன்பு அலறுகிறது.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

3. ஐயோ ஆபத்து!

பொழுது விடிந்தது; என்றும் இல்லாத திருநாளாகப் பூபாளத்தை மீடடும் வீணாகானம் எங்கிருந்தோ வந்து எங்கள் காதில் விழுந்தது.

ஒன்றும் புரியாமல் ஏதோ செய்யாத குற்றத்தைச் செய்து விட்டவள் போல் எழுந்து, சுற்றுமுற்றும் பார்த்துக்கொண்டே கதவைத் திறந்தேன். தோழிகள் புடைசூழக் காந்தா வீணையும் கையுமாகக் கதவருகே உட்கார்ந்திருந்தாள்; "ஆஹா! அற்புதம், அபாரம்!” என்று அவள் தோழிகள் அவளைப் பாராட்டிக் கொண்டிருந்தார்கள்.

"ஒஹோ, உங்கள் வேலைதானா?’ என்றேன் நான்.

"இல்லாவிட்டால் உன்னை எழுப்ப அவரும், அவரை எழுப்ப நீயுமா பூபாளம் பாடிக்கொள்வீர்கள்!" என்றாள் காந்தா.

"அதற்காக உனக்கு ஏனடி இவ்வளவு சிரமம்? வேண்டாண்டி, என் கண்ணு வேண்டாண்டி!" என்று கொஞ்சிய வண்ணம் அவள் கையிலிருந்த வீணையை வாங்கி ஒரு பக்கமாக வைத்துவிட்டு, நான் மேலே நடந்தேன்.