பக்கம்:அரும்புகள் மொட்டுகள் மலர்கள்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அரும்புகள் மொட்டுகள் மலர்கள்/110



இதய மெலாமன்பு நதியினில் நனைப்போம் இது என தென்னுமோர் கொடுமையைத் தவிர்ப்போம் என்பன.

பட்டம் பெற்றபின் மதுரைக்கு வேலைக்கு வந்தேன். டோக்பெருமாட்டி கல்லூரியில் பணியாற்றத்தொடங்கிய பின் அவரை நான் நேரில் சந்தித்தேன். எங்கள் கல்லூரிக்கும் பலமுறை வந்திருக்கிறார். புரட்சிக்கவிஞர் கனல் கக்கும் சொற்களை முழக்கமிட்டுப் பேசுவாரென எதிர்பார்த்த எனக்கு அவர் குரல் புதிதாக இருந்தது. பேசுங்கால் அவர்கருத்துக்கள் புரட்சியானவைதாம். அவற்றை ஆழமாகவும் ஆணித்தரமாகவும் கூறுவார். ஆனால் மெல்ல, நகைச்சுவை ததும்பக் குரலை எடுத்தும் படுத்தும் கூறிக் கேட்பவர்க்கும் புத்தறிவூட்டுவார். -

எங்கள் வீட்டிற்கு அவர் 1955 இல் முதன் முதலாக வந்தார்.அதற்குப் பின்னர் பலதடவை வந்திருக்கிறார். அவரை விருந்திற்கழைக்குங்கால் அவருக்குப் பிடித்தமான உணவு வகைகளைக் கேட்டு அதன்படி சமைத்துத் தருவேன். ஒரு சமயம் அவர் தமக்குப் புறா சமைத்துத் தரச்சொன்னார். பல்லிற்கு வருத்தம் வராதிருக்க அதை அம்மியிலிட்டு அறைத்துச் சமைக்குமாறு கூறினார். பல்லிற்கு ஊறுவராமல் பக்குவம் செய்ய வேறுவகைகளுண்டென்று கூறி அதனை நன்கு மெதுவாகும்படி தயாரித்து மிளகிட்டுச் சமைத்துத் தந்தேன். மிகச் சுவையோடிருந்ததாகக் கூறி உண்டார். இரசம்(மிளகுச்சாறு) கூட அவருக்குக் கொஞ்சம் காரமாக இருக்க வேண்டும். அந்த முறையில் நான் அவருக்குச் செய்து கொடுத்திருக்கிறேன்.

உணவுண்டபின் பேசிக் கொண்டிருப்பார். நான் கவிதைகள் எழுதுவதை அவரறிவார். எனவே என்னையழைத்து “ஆமாம் நன்கு உணவிட்டாய்! எங்கே கவிதையைக் காட்டாமல் மறைத்துக் கொண்டாயே ஏன்? கொண்டு வா, நான் பார்க்க வேண்டும்" என்பார். உலகமாகவிஞர்.