பக்கம்:அரும்புகள் மொட்டுகள் மலர்கள்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அரும்புகள் மொட்டுகள் மலர்கள்/86




நான் பள்ளி இறுதி வகுப்பு (S.S.I.C.) வரைதான் படித்தேன். அதற்குமேல் என் கல்வியைத் தொடர என் வீட்டுச் சூழ்நிலை இடந்தரவில்லை. நான் மேற்படிப்புக்குச் சென்றிருந்தால் என் தந்தையாரின் எழுத்துப்பணி குறைந்திருக்கும்.

என் இளமைக்கால வாழ்க்கையின் பெரும்பகுதி என் தந்தையாரின் மனங்கோணாமல் அவரைப் பேணுவதிலேயே கழிந்தது. நான் எப்போதும் 'அப்பாபெண்'. அவர் உள்ளமறிந்து நடந்து கொள்வதில் கண்ணுங் கருத்துமாக இருப்பேன். ஓர் ஆசிரியர் இரவில் வீட்டுக்கு வந்து எனக்குத் தனிப்படிப்புச் சொல்லிக் கொடுத்துக்கொண்டிருந்தார். அவர் எனக்குப் பாடம் நடத்திக் கொண்டிருக்கும்போது ‘பாப்பா! பாப்பா!' என்று அறைக்குள்ளிருந்து என் தந்தையார் கூப்பிட்டுக் கொண்டிருப்பார். அவர் தேவைகளைக் கவனித்துக் கொண்டே கல்வி கற்பது எனக்கு மிகவும் கடினமாகத்தான் இருந்தது. இரவு பதினொருமணிக்கு அவர் தூங்கிய பிறகு வீட்டு வேலைகளை முடித்துவிட்டு, வீட்டுப் பாடங்களைப் படித்து முடிப்பேன். இரவு எந்நேரம் படுத்தாலும் அதிகாலையில் எழுந்து வீட்டு வேலைகளைத் தொடங்கி விடுவேன். குடும்பவிளக்கு நூல் முதல் பகுதி 1942ஆம்ஆண்டு வெளியிடப்பட்டது. பள்ளிப் படிப்பை முடித்துவிட்டுக் குடும்பப்பணிகளை நான்கைந்து ஆண்டுகள் நான் செம்மையாகச் செய்து கொண்டிருந்த நேரம் அது. என்னைப் பார்த்துத்தான் குடும்ப விளக்கின் தலைவி உருவம் கொடுத்ததாக என் தந்தையார் அடிக்கடி கூறுவதுண்டு.

கொஞ்சநாள் நான் இசையும் கற்றுக்கொண்டேன். சேலத்திலிருந்து ஓர் இசையாசிரியர் வந்து எனக்குக் கற்றுக்கொடுத்தார். இசையில் என் தந்தையாருக்கு ஈடுபாடு அதிகம் என்றாலும், எப்போது பார்த்தாலும் ‘சரிகமபதநி' என்று கத்திக்கொண்டிருப்பது அவருக்குப்