142 O லா. ச. ராமாமிருதம்
"தூ!"
"அம்மா! அம்மா!"-பையனின் விழிகள் திகிலில் சுழன்றன.
அப்பா ஒரு கையால் தோளைப் பிடித்துக்கொண்டு நின்றார்.
உதிரம் நூல் பிரிந்து தரையில் சொட்டிற்று.
***
“மாது, அத்திம்பேராத்தில், இந்த ஏனத்தைக் கொடுத்துட்டு வாயேன்!”
"என்னம்மா அது?’’
"பருப்பு உருண்டை ரஸ்ம்டா! அபிதாவுக்கு உசிராச்சே! பிள்ளைத்தாச்சி வாய்க்கு வேணுங்கறதை இப்போத்தான் சாப்பிடலாம். பாவம், மசக்கை வேறே குழந்தையைப் பாடாப் படுத்தறது"-
"அம்மா!"
"என் கண்ணோன்னோ! பெரிய மனசு பண்ணி சித்தே போயிட்டு வாடா! பாடம், படிப்புன்னு சாக்குப் போக்குச் சொல்லாதே. சூடாறிப்போறது!’’
மாது பக்கென்று இளைத்துவிட்டான். மாமி நிலை பெரியவாளாலேயே சமாளிக்க முடியாது. குழந்தை அவன், என்ன பண்ணுவான்? ஒருநாள் போல் நாய்மாதிரி அம்மாவைக் கட்டிப் போடுவதா?
பாடம் படிப்பானா?
சமைத்துப் போடுவானா?
அக்கா போனதுக்கு அழுவானா?
அம்மா இப்படி ஆனதுக்கு அழுவானா?
பரீட்சை பாட்டுக்கு இரக்கமற்று நெருங்கிக் கொண்டிருக்கிறது?