பக்கம்:அலைகள்.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

176 O லா. ச. ராமாமிருதம்


போச்சு; அம்மன் சன்னதிலே கற்பூர ஆரத்தி கண்டாப் போல். மேலே நட்சத்திரம் பூக்கொட்டுது. அவசரமா தான் போற போக்கில் ஏதோ விசை என்னைத் தொட்டுட்டுப் போவுது. என்னையும் நட்சத்திரமாக்கி எங்கோ மிதந்து போறேன்.

மரங்கொத்தி "டொக்டொக்”.

காடையும் மைனாவும் குருவியும் விடிஞ்சு போச்சுன்னு உரக்க ஒதுது. ஆனால் யாருக்கு விடிஞ்சுது? கால், தான் போனவழி என்னைக் கொண்டு போவுது, இனி இங்கே எனக்கென்ன வேலை?

கால்வாயிலே தண்ணி காலில் கல்லைக்கட்டி இழுக்குது. கால்வாய் தாண்டி கழனிக் கட்டிலே அம்மாடி-என்ன பனி! உள்ளே பூந்துட்டேன். என் கை எனக்குத் தெரியல்லே. காலடியில் பூமி தெரியல்லே. உலகத்தின் ஆவியெல்லாம் மந்தையா இங்கேதான் மடக்கிப் போட்டாப் போல பனி புழுங்குது. ஆண்டவனின் பட்டறை இங்கேதான். ஒருஒரு ஆவியா அதனதன் பிறப்பிலே அவன் புடிச்சுப்போடற இடம் இதுதான்.

“இந்தா-உன் ஆயி அப்பன் யாருன்னு தெரியாமே, உன்னை எவள் பெத்துப் போட்டாளோ அந்த இடத்திலிருந்து உன்னை எடுத்து வளர்த்தது யாருன்னு தெரியாமே வளந்து, ஆயுசுக்கும் பிச்சை எடுத்தே. இதுவும் ஒரு புழைப்பா புழைச்சுகிட்டு இப்படியே புழுத்துப் போ'ன்னு, ஒரு பிறப்பு.

“எல்லாமிருந்தும் எவனோ வந்தான், வந்து அருள் தந்தான், அந்த மருளில் கைப்பொருளை விட்டுட்டுக் காணாததைத் தேடிப்போய், நீ போனவிடம் உனக்கே தெரியாமே போயிட்டிரு"ன்னு இன்னொரு பிறப்பு.

“கடவுளே! இப்படியெல்லாம் உன் மக்களை ஏன் சோதிக்கறே?’ன்னு கேட்டால் ஆண்டவன் ஊமைன்னு அவனுக்காப் பேசறவங்க படிச்சவங்க பானை வவுத்திலே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலைகள்.pdf/178&oldid=1290254" இலிருந்து மீள்விக்கப்பட்டது