பக்கம்:அலைகள்.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

218 O லா. ச. ராமாமிருதம்


பார்க்கிறேன். மும்முரமாய் பதினெட்டாம் புள்ளி ஆடிக் கொண்டிருக்கிறார்கள்.

“ஊம்; என்ன பிறஞ்திச்சு உன் தம்பி சம்சாரத்துக்கு, பெண்ணா, பிள்ளையா?”

திடுக்கிட்டுத் திரும்பியதும் பெரியவன் என்னை அடையாளம் கண்டு கொள்கிறான். திக்பிரமையில் வெறிச்சிட்ட முகம் கண்ணோரங்களில், கன்னங்களில், நெற்றியில், சுட்ட கத்திரிக்காய்போல் அடக்கிய சிரிப்பில் சுருங்குகிறது. ஆனால் முழுக்க அடக்க முடியவில்லை. என் முகத்தில் அவன் சிரிப்பு பீச்சியடிக்கின்றது. என்னையறியாமல் என்னையும் தொற்றிக் கொள்கிறது. மூவரும் ஒருவரையொருவர் பார்த்துச் சிரிக்கிறோம், சிரித்துக் கொண்டேயிருக்கிறோம். எனக்கு வயிறு கூட வலிக்கிறது. ஆனால் சிரிப்பு ஒயவில்லை

***

ஆனால் அவன் சொன்னது ஒன்று சரி. ரூபாயை அவன் என்னிடமிருந்து சும்மா வாங்கிக்கொண்டு போய் விடவில்லை. அதற்குப் பதில் அவன் என்னிடம் ஒரு வாக்கை விட்டுச் சென்றிருந்தான்.

சிந்தித்து சிந்தித்து. நான் அறியாமலே, வாக்கை வாயில் உருட்டுகையில், இன்னும் செவிக்கும் நாவிற்கும் மணம் கிட்டியும் ருசி கெட்டாதோர் தித்திப்பு. நினைக்க நினைக்க நெஞ்சின் அடிவாரம்வரை கமழும் ஒரு காவிய செளந்தர்யம், அத்துடன் புதிதாய் மிளிரும் கவிதையின் இன்ப சோகம்.

அவன் எவனாயிருப்பினும் சரி

இவன் எவனாயிருப்பினும் சரி

"இவன் பெண்சாதி உன் தங்கச்சி மாதிரி."

எனக்குத் தங்கையிருந்தாலும் தங்கச்சி என்கிற போது அத்தை ஞாபகம்தான் வரும். அப்பா அத்தையை அங்கச்சி என்றுதான் அழைப்பார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலைகள்.pdf/220&oldid=1285560" இலிருந்து மீள்விக்கப்பட்டது