பக்கம்:அவள் ஒரு கர்நாடகம்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26


துளைத்துக் கொண்டிருந்தது. "மூத்தவனே வீட்டை விட்டுத் துரத்தி விட்டு முண்டம் போல வீட்டிலே உட்கார்ந்திருக்காரே இவருக்கு இருதயமே இல்லையா?" என்று பக்கத்து வீட்டுக்காரர்கள் கூட பேசத் தொடங்கி விட்டார்கள். ஒரு விழாவிற்கோ, கோயிலுக்கோ அவரால் மகிழ்ச்சியாகப் போய் வரமுடியவில்லை.

"திடீரென்று முத்துக் கருப்பர் கண்களே மூடிவிட்டால் என்ன செய்வார்? கொள்ளி வைக்கவேண்டியவன் கொச்சியிலிருந்து வந்து தானே பிரேதத்தை எடுக்க வேண்டும்? அதற்குள் பிணம் நாறிப் போகாதா? மூத்தவன் இருக்க, இளையவன் கொள்ளி வைக்கலாமா?"

முத்துக்கருப்பர் உயிரோடு திடகாத்திரமாக இருக்கும் போதே அவரது பிரேதத்தைப் பற்றி ஊரார் பேசத் தொடங்கிவிட்டார்கள். எவ்வளவோ துாற்றல்களைத் தாங்கிக் கொண்டு பழக்கப்பட்டவர் முத்துக்கருப்பர். மிகவும் கஷ்டப்பட்டு சிங்கப்பூருக்கு போய் இன்னொரு வீட்டில் கணக்கப் பிள்ளையாகச் சேர்ந்து, பின்பு தனிக்கடை வைத்து முன்னேறியவர். முதலில் யாரும் அவருக்கு பெண் கொடுக்க முன் வரவில்லை. குடியிருக்க வீடில்லாதவன், சம்பளத்திற்கு வேலை செய்பவன் என்றெல்லாம் அவரை இகழ்ந்தார்கள். அப்போதெல்லாம் சின்னவயதில் அந்தப் பேச்சுக்களை சவாலாக ஏற்றுக்கொண்ட முத்துக் கருப்பரால் இப்போது ஊரில் பேசப்படும் அவதூறுகளைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. கொச்சிக்குப் போய் எப்படியாவது கண்ணப்பனைக் கூட்டி வந்து விடுவது என்று முடிவு செய்து விட்டார்.

"இந்த நேரத்தில் நீங்கள் வெகு தூரம், பிரயாணம் செய்வது நல்லதுதான?"

ஒரு முட்டுக் கட்டையைப் போட்டுப் பார்த்தாள் முத்துக்கருப்பரின் மனைவி.

"ஊரிலே துாற்றிக்கொண்டிருப்பது உன் காதுகளுக்குக் கேட்கவில்லையா? நீ ஒரு இருசியாம்! நான் ஒரு இரக்கமற்றவனாம்! இந்த அவப்பெயரெல்லாம் நம் குடும்பத்திற்கு அவசியம்தானா?”

"எதைத்தான் ஊரிலே பேசவில்லை? அதுவும் இந்த ஊர் மோசம்; மகாமோசம்!”

"எது எப்படி வேண்டுமானலும் ஆகட்டும். தலைப்பிள்ளையை கண்காணாத தேசத்திற்கு அனுப்பிவிட்டு தள்ளாத வயதிலே பேச்சைக் கேட்டுக்கிொண்டிருக்க நான் தயாரில்லை!"-