பக்கம்:ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

126

ஆரியப் பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்


ஆப்பிரிக்கக் காட்டுக் காபிரியர்கள் இனத்திலும், சீனர்கள் மூட நம்பிக்கைகளிலும், எகுபதியரின் காட்டு விலங்காண்டி வழிபாடுகளிலும் ஆரியம் புகுந்து வேலை செய்யவில்லை. உலகம் எங்கனுமே – மக்கள் உள்ள இடங்களிலெல்லாம் மூட நம்பிக்கைகளும், மதக் கொடுமைகளும் மக்களினத்தைக் கட்டவிழ்த்துத் தாம் வந்திருக்கின்றன; வருகின்றன. அவற்றிற்கெல்லாம் பார்ப்பன இனமே கரணியமாகி விடாது. இன்னுஞ் சொன்னால் பார்ப்பனர் தமிழகத்திற் காலடி எடுத்து வைப்பதற்கு முன்பு இங்கும் குலசமயங்கள் இருக்கத்தான் செய்தன. ஆனால் அவற்றை ஆரியர் கைப்பற்றிப் பற்பல மாறுதல்களைச் செய்து தம் இன நலத்திற்கென வடிவமைத்துக் கொண்டனர். இதை வரலாறு படித்த எவனும் மறுக்கமுடியாது. இந்த நிலையில் பார்ப்பானைக் குறைகூறியே தமிழன் தப்பித்துக் கொள்ள முடியாது, தமிழினத்துள் பார்ப்பானைவிடக் கொடுமையான வடிவங்கள் மிகப்பல உண்டு. அவர்களையெல்லாம் நம் இனத்தலைவர்கள் இனங்காட்டத் தவறிவிட்டனர். அவர்கள் நம்மினத்துக்குள்ளேயே இருந்து செய்து வந்த கேடுகள்தாம் இன்று நம்மைத் தன்னாய்வு செய்துகொள்ள முடியாதபடி தடுத்துவிட்டன. நம்மை வீழ்த்திய வரலாற்று நாடகத்தில் நாம் நடித்த காட்சிகளே பலவாக இருக்கத்தான் இருக்கின்றன. இவற்றை நாம் வெளிப்படையாக அவிழ்த்துப் பேச வெட்கப்பட்டுக் கொண்டிருந்தோம். தமிழினத்திற்கு நம் மூவேந்தர்களால் ஏற்பட்ட நலிவுகளும் கேடுகளும் கொஞ்சநஞ்சமல்ல. நம் இன அரசர்களைப் பார்ப்பர்னுக்கு அடிமையாக இருக்கச் சொன்ன மடயன் எவன் பார்ப்பானை நம் தந்தலத்திற்காக நாம் என்றும் – இன்றுகூட – விலக்கியதில்லை. அவனால் நாம் நலம் பெறுவோம் என்றால், நம்மவனையே புறக்கணிக்கவும், ஏமாற்றவும், கவிழ்க்கவுங்கூட நாம் என்றும் தயங்கவில்லை. இவற்றையெல்லாம் நம் தலைவர்கள் நமக்குச் சொன்னதாக நான் கேட்டதில்லை. நாம் நம் பெருமைகளையும் எதிரியின் சிறுமைகளையும் புட்டுப் புட்டுப் பேசிக் கொண்ட அளவில், நம் சிறுமைகளையும் எதிரியின் பெருமைகளையும் ஒருசில நொடிகள்கூடப் பேசிக் கொண்டதில்லை. நமக்கு நாம் மருத்துவம் செய்துகொள்ள மறுத்தே வந்திருக்கின்றோம்.

நம் சிவனிய (சைவ) மாலிய (வைணவ) சமயங்கள் என்று நாம் கொண்டவற்றில்தாம் மூட நம்பிக்கைகள் மிக்கிருந்தன. எல்லாம் வல்ல இறைப்பேராற்றல் ஒன்றை வடிவம் கொடுத்து அமைத்த முதல் இனம் தமிழினமே! ஆரியத் தெய்வங்களுக்கு