பக்கம்:ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

127


வடிவங்களே இல்லை! நீரும், நெருப்பும், காற்றும் அவர்களின் தெய்வங்களாக அவர்தம் வேதங்கள் பேசுகின்றன. தமிழர்களுக்குத்தான் வடிவங்கள் தெய்வங்களாக இடைநின்றன. மிகத் தொன்மைத் தமிழரின் தீவணக்கமான கந்தழி வணக்கம் நம்மவர்களால்தான் கந்தன் வடிவமாக்கப் பெற்றது. (வடமொழி “ஸ்கந்தம் ‘கந்த'னாக மாறியதென்பது, திரவிடம் தமிழாக மாறியதென்பது போலும் பிழையான கருத்து. தமிழமே த்ரமிளமாகிப் பின் திரவிடமாகத் திரிந்த தென்பதே உண்மை). சமயத் தலைவர்களை யெல்லாம் குருக்கள் என்றும், தெய்வ வடிவங்களென்றும் வழிபாடு செய்த – செய்து வருகின்ற – பெரு மூடப் பழக்கங்கள் இன்றும் சிவனிய, மாலியர்க்கிடையில்தாம் மிகுந்த அளவில் பெருகியுள்ளன. மதத் தலைவர்களை யெல்லாம் – குலத் தலைவர்களை யெல்லாம் கடவுளர்களாக்கியவன் நம்மவனே. ஆரியனுக்கு அன்றும் இன்றும் ஒரே வகைத் தெய்வங்களே. புதுப்புதுக் கடவுளர்களின் தோற்றம் நம்மவரின் மோடி வேலையே. திருவிறக்க(அவதார)க் கதைகளுக்கு ஆரியத்தில் அடிப்படையில்லை. கண்ணன் (கிருஷ்ணன்) தமிழனே! பூசாரி முறையும் தமிழர்களுடையதே! பார்ப்பான் பின்னர் கைபற்றிக் கொண்டானே தவிர, அம் முறையை உண்டாக்கியவன் அவனல்லன். இவற்றுக்கெல்லாம் சான்றுகள் உண்டு வரலாறு உண்டு. இன்னுஞ் சொன்னால் பார்ப்பான் கோயில்களைக் கட்டியதில்லை. அவனுக்குக் கோயில் கட்டத் தெரியாது. அவன் அடர்ந்த காடுகளில் தீக்குழிகளையே தெய்வ வணக்கத்திற்குரிய இடமாகக் கருதி அதனையே வழிபட்டு வந்திருக்கின்றான். கோயில்களைக் கட்டியவனும், அவற்றில் படிமங்களைப் பண்ணி வைத்தவனும், அவற்றில் ஆறுகாலப் பூசனை முறைகளைப் புகுத்தியவனும், வழிபாட்டு முறைகளை வரையறுத்தவனும் நம்மவன்தான். இவற்றின் உண்மைகளை வெளிப்படையாக நாம் பேச விரும்பியதில்லை. நம் மேலேயே நாம் குறைகூறிக் கொள்வது, சாணியைத் தெளித்துக் கொள்வது போன்ற ஒரு வெட்கத்தை நமக்கு உண்டாக்கியிருக்க வேண்டும். நம் இன வையாபுரிகளும், தெ.பொ. மீக்களும் தமிழைக் காட்டிக் கொடுக்கும் வரையில் அவனுக்கு அவனைப்பற்றித்தான் தெரியும்; நம்மைப் பற்றித் தெரியாது. இவற்றையெல்லாம் நம்மவன் நன்கு எண்ணிப் பார்க்கவேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றோம்.

இன்னும் சொன்னால், நம்மவனுக்குச் செருக்கும் தன்னலமும் மிகுதி. நம்மவனை நாம் என்றும் கைதூக்கிவிட்டதில்லை. தப்பித்