பாவலரேறு பெருஞ்சித்திரனார்
73
1952-ஆம் ஆண்டில் 6000 பள்ளிக்கூடங்களை மூடியதற்கும், சமற்கிருத மொழியைக் கற்பிக்கவே இந்தியைக் கட்டாயமாக ஆக்கினேன் என்று கூறியதற்கும், இம்மனுநூலில் கூறப்பட்ட ஒழுகலாறுகளே காரணமாக இருந்தன என்று கூறாமலிருக்க முடியுமா? மேலும் இவர் மூடிய அத்தனைப் பள்ளிகளும் சிற்றூர்ப் புறங்களில் இருந்தவையே! அவற்றில் படித்துவந்தவர்கள் எல்லாரும் தமிழப் பிள்ளைகளே; அஃதாவது இவர் கருத்துப்படி சூத்திரப் பிள்ளைகளே! இவ்வளவு பள்ளிக்கூடங்களையும் மூடியதல்லாமல் மிகுதியிருந்த பள்ளிக்கூடங்களில் படித்துவந்த மாணவர்களுக்கும் அரைநேரப் படிப்புப் போதுமென்றும், மிகுந்த அரைநேரத்தில் அப்பிள்ளைகள் அவனவன் அப்பன் தொழிலைக் கற்றுக்கொள்ள வேண்டுமென்றும் சட்டம் செய்தாரே அதற்கும் இம் மனுநூல்தானே காரணமாக இருக்க முடியும்.
இக்கால், அவர் மூடிய அத்தனைப் பள்ளிகளும் திறக்கப் பெற்றதுமன்றி, மேற்கொண்டும் பல்லாயிரக்கணக்கான பள்ளிக் கூடங்கள் திறக்கப் பெற்றதையும், பள்ளி இறுதி வகுப்பு வரை இலவசக் கல்வி புகட்டப்படுவதையும், இனிக் கல்லூரிவரை இலவசக் கல்வி புகட்டப் பெற இருப்பதையும், இவ் வேந்து(வசதி)களால் பார்ப்பனரல்லாத பிள்ளைகள் படித்து முன்னேற வாய்ப்புள்ளதையும் கண்டுதானே வயிற்றெரிச்சல் தாளாது ஆட்சியே குட்டிச்சுவராய்ப் போய்விட்டது என்று குதிக்கின்றார். இவர் உள்ளப் புழுக்கத்தைப் புரிந்துகொண்டன்றோ ‘மெயில்’ முதலிய பார்ப்பன ஏடுகளும் பல்கலைக்கழகப் படிப்பு என்பது யாருக்குத் தகுதி இருக்கிறதோ அவர்கட்கு மட்டுந்தான் தரப்படவேண்டும் என்றும் தரத்தைக் கெடுக்கும்வகையில் கண்டவர்களுக்கும் படிப்பைக் கொடுத்துவிடக் கூடாது என்றும் பின்பாட்டுப் பாடுகின்றன.
கல்வியின் தரங்கெட்டுப் போனதற்குக் காரணங்கள் பல. அதன் இழப்பைத் தங்களின் வயிற்றுப் பிழைப்புக்கு ஊதியமாகக் கருதிக் கொண்டு கதைக்கும் இத்தகைய எழுச்சிகளுக்கெல்லாம் என்ன காரணம்? எங்குப் பார்த்தாலும் ‘சமஸ்கிருத சதஸ்', ‘ஆகம சில்ப வியால பாரத வித்வத் சதஸ்’ என்றும் பலவாறான பார்ப்பனர்க ளெல்லாரும் ஒன்று சேர்ந்துகொண்டு பழமைக்கு வித்திடுவதும் அழிந்துவிட்டதாகக் கூறும் இந்தியப் பழக்க வழக்க(சம்பிரதாய)ங்களை யெல்லாம் புதுப்பிக்க முயற்சி செய்வதும் எதைக் காட்டுகின்றன? தங்கள் தங்கள் கைக்குக் கிட்டிய செய்தித்தாள்கள், பதிப்பகங்கள், வானொலிக் கூடங்கள்,