306 ✲ உத்தரகாண்டம்
“எதுக்குமா சிரிக்கிற?...”
“இல்ல, போலீசுக்காரிங்க, மூட்டமுடிச்செல்லாம் தடவினாங்க. நாய வுட்டு மோந்து பாக்க சொன்னாங்க அந்த பிளாட் பாரத்துல. நெனச்சேன். சிரிப்பு வந்திச்சி.”
“இன்னாமோ அவுங்க கடமை. இந்த சனங்க, நம்மைப் போல கபடில்லாம காதுகுத்து, கலியாணம்னு போகுது! என்னியே அவ தடவிப் பாத்தா...”
மனதுக்குள் இந்தக் கூட்டத்தில் குண்டு வைக்கும், குத்தியெறியும் தீவிரவாதி இருப்பானா? ஆனால், எவன் ஒழுக்கம், எவன் ஒழுக்கமில்லை என்று எப்படிச் சொல்ல முடியும்? பெண்... பெண் குழந்தைதான் வாழ வைக்கிறது. இவளிடம் அந்த ஒட்டு மீசையோ, கிருதா மீசையோ, ‘ஆயா’ என்று பரிவு காட்டவில்லை...
காந்தி மூணாம் வகுப்பு ரயிலில் தான் போவாராம். இப்ப மூணு கிடையாது எத்தனையோ இருக்குதாம். ஆனா, ‘ரெண்டு’ன்னு நிறுத்திருக்காங்க. சாமி நீங்க போயி அம்பது வருசத்துக்குமேல ஆச்சி. இப்ப அருவமாவானும் வந்து இந்தப் பொட்டில பாருங்க சாமி? இந்த தேசம் எப்படி இருக்குன்னு?
விழுப்புரம் வரும் போது பொழுது சாயும் நேரம்.
அடேயப்பா? என்ன கூட்டம்?...
ஒரு மாதிரி இறங்குகிறார்கள். தள்ளுமுள்ளு, அவசரங்கள்...
ஒரே தலைகளாகத் தெரியும் மனிதக் கூட்டம்.
பள்ளிப்பிள்ளைகளின் சீருடைகள்; சல்வார் கமிஸ்கள்; கறுத்த அங்கிகளுக்குள் மூச்சு விடும் வலைகளுடன் துலுக்கப் பெண்கள்... வெள்ளை உடுப்பு கார்டு சுருட்டிய கொடிகளுடன் போகிறார். புரவலர், கலைக்கோ, எழுத்துச்