18 உரைவேந்தருக்கு ஒரு நூற்றாண்டு எழுதி என்னிடம் தந்து, 'இப்பாடல்களைப் படியுங்கள். ஒவ்வொரு நாளும் பாடம் தொடங்கும் பொழுது முதலில் இவற்றைச் சொல்லவேண்டும் என்றார். அப்பாடல்கள் அகத்தியர், தொல்காப்பியர், திருவள்ளுவர், சேனாவரையர், நச்சினார்க்கினியார், பரிமேலழகர் ஆகிய புலவர் பெரு மக்களுக்கு வணக்கம் கூறுவனவாக இருந்தன. நான் முன்னமே இயற்றியிருந்த முத்தலை நெடுங்கடல் முழுது முண்டலர் புத்தமிழ் துகுபொழில் பொதிய மேவிய வித்தக முனிவரன் வளர்த்த மெல்லியல் முத்தமிழ்க் கிழத்தியை முடிவ ணங்குவோம் என்னும் தமிழ் மொழி வாழ்த்துப் பாடலை முதலிற் கூறி. பின் அப்பாடல்களையும் படித்தேன். முதலில் திருக்குறளை எடுத்துக் கொள்வோம் என்று கூறி, தம் புத்தகத்தையே கொடுத்து உரைப்பாயிரத்திற்கு வியப்புறும் வகையில் விளக்கம் கூறியபின், கடவுள் வாழ்த்து அதிகாரத்தில் உள்ள ஒவ்வொரு குறளுக்கும் பரிமேலழகர்உரையையும் பிறர் உரைவிகற்பங்களையும் தமக்கே உரிய தனிமுறையில் தடைவிடைகளால் தெளிவாக விரித்து விளக்கிமுடித்தார். அன்று முதல் நிழல்போல் அவரை நீங்காமல் உடனிருந்து, தொடர்ந்து ஐந்தாண்டுகள் அரிய இலக்கிய இலக்கணங்கள் பலவற்றையும் முறையாகப் பயின்று சென்னைப் பல்கலைக்கழக வித்துவான் தேர்வு எழுதி முதல் வகுப்பில் மாநிலத்தில் இரண்டாமவனாகத் தேறி சென்னையில் உள்ள மிகப் பெரிய உயர்நிலைப் பள்ளியொன்றில் தலைமைத் தமிழாசிரியனாக அமர்ந்து, முப்பது ஆண்டுகட்குமேல் தொடர்ந்து பணியாற்றினேன். இந்நிலைக்கு என்னை உருவாக்கி, வழிகாட்டி வாழவைத்த வள்ளல் பிள்ளையவர்களேயெனின் அவர் பெருமைக்கு வேறு சான்று வேண்டுவதில்லை. உழைப்பால் உயர்ந்தவர் பிள்ளையவர்கள் உழைப்பின் உயர்வுக்கு எடுத்துக்காட்டு. அவர் வாழ்வு ஒயா உழைப்பினால் உருவானது, அவர் இன்றைக்கு எண்பதாண்டுகட்கு முன் தென்னார்க்காடு மாவட்டத்தில் உள்ள ஒளவையார் குப்பம் என்னும் சிற்றுாரில் எளிய குடும்பம் ஒன்றில் தோன்றினார். இளமையில் பல வேறு இன்னல் இடையூறுகட்கிடையில் உழைத்துப் படித்து இண்டர்மீடியட்டில் முதலாண்டு மட்டும் பயிலத்தொடங்கி, தொடர்ந்து படிக்கக் குடும்பநிலை இடந்தராமையால் நகராண்மைக் கழகத்தில் நலத்துறைக் கண்காணி (Sanitary Inspector) யாக வாழ்வைத் தொடங்கினார். இயற்கையில்